நாளை மார்ச் 19, 2019 மதியம் விமான சேவை நிறுவனங்களோடு ஆலோசனை கூட்டத்தில் பேச இருக்கிறது இந்தியாவின் பயணிகள் விமான சேவை இயக்குநரகம் (DGCA). இந்த கூட்டத்தில் விமான பயணச் சீட்டுகளின் விலை ஏற்றம் குறித்து விவாதிக்க இருக்கிறார்கள்.
குறிப்பாக விமான சேவை ரத்து செய்வதால், விமான பயணச் சீட்டுகள் விலை ஏற்றத்தைப் பற்றித் தான் விவாதிக்க இருக்கிறார்களாம்.
ஜெட் ஏர்வேஸ் போன்ற விமான சேவை நிறுவனங்களில், ஏற்கனவே ஒழுங்காக லீஸ்தாரர்களுக்கு லீஸ் தொகையினைக் கொடுக்காதது மற்றும் சம்பளப் பிரச்னைகள் போன்ற காரணங்களால் 50 ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் பறக்க முடியாமல் தரையில் இருக்கிறது.
50 விமானங்கள்
இந்த 50 விமானங்கள் பறக்க வேண்டிய பல்வேறு விமான வழித் தடங்களில் சேவையை ரத்து செய்து கொண்டிருக்கிறது ஜெட் ஏர்வேஸ். அதற்கு மேல் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு வேறு விதித்திருக்கும் தற்காலிக தடை காரணமாக ஜெட் ஏர்வேஸின் சூழல் இன்னும் மோசமடைந்திருக்கிறது.
நிதி நிலை
இதற்கு மத்தியில் ஜெட் ஏர்வேஸின் மோசமான நிதி நிலை மொத்த நிறுவன சூழலையே கேள்விக்குள்ளாக்குகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை தற்காலிகமாக நடத்தக் கூட தேவையான பணத்துக்கு பலரிடமும் பேசி வருகிறது.
பணம் தேவை
கடந்த மார்ச் 08, 2019 அன்று இதிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சிஇஓ டோனி டக்ளசுக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் எழுதிய கடிதத்தில் "உடனடியாக 750 கோடி ரூபாய் பணம் வேண்டும், இல்லை என்றால் பல்வேறு லீஸ் விமானங்கள் பறக்காது" என அழுத்தம் திருத்தமாக தன் நிலையை புரிய வைக்க முயற்சித்திருக்கிறார். ஒரு பக்கம் பணத்துக்கு அலைந்து கொண்டிருந்தாலும் பல்வேறு விமான சேவைகளை ரத்து செய்து கொண்டே தான் இருக்கிறது ஜெட் ஏர்வேஎஸ்.
ரத்து
அபுதாபியில் இருந்து புறப்பட வேண்டிய அனைத்து ஜெட் ஏர்வேஸ் விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக இதிகாட் விமான சேவை மையம் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேற்று தெரியப்படுத்தி இருக்கிறது. இந்த ரத்து மார்ச் 18 முதல் நிலைமை சீராகும் வரை தொடருமாம்.
கடன்
அதோடு லீஸ்தாரர்களுக்குக்கு ஜெட் ஏர்வேஸ் நிறுவன நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டிருக்கிறார்களாம். இப்படி லீஸ்தாரர்கள் மற்றும் வங்கிக் கடன் பிரச்னை எல்லாம் சேர்ந்து ஜெட் ஏர்வேஸ் சுமார் 8,200 கோடி ரூபாய் கடன் கொடுக்க வேண்டுமாம். வரும் மார்ச் 31, 2019-க்குள் 1,700 கோடி ரூபாய் கடனை திருப்பிக் கொடுக்க வேண்டுமாம்.