டெல்லி: இந்தியாவில் 2,293 அரசியல் கட்சிகள் இருக்கின்றன. அதில் 7 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. 59 கட்சிகள் மாநில கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமாகவே இந்தியாவில் 66 அரசியல் கட்சிகள் தான் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் 01 பிப்ரவரி 2019 தொடங்கி 09 மார்ச் 2019-க்கு இடைப்பட்ட நாட்களில் மட்டும் சுமார் 150 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து கொண்டார்கள்.
2018-ம் ஆண்டில் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம், சத்திஸ்கர் போன்ற மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அப்போது கூட தேர்தலுக்கு முன் சுமார் 60 கட்சிகள் அந்தந்த மாநிலங்களில் தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து கொண்டு தொடங்கப்பட்டது.
சின்னப் பிரச்னை
புதிதாக தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்து கொண்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு என ஒரு நிலையான தேர்தல் சின்னம் வழங்கப்படாது. ஒவ்வொரு தேர்தலின் போதும் தேர்தல் ஆணையம் கொடுக்கும் சின்னங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த சின்னத்தில் தான் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் நிற்க வேண்டி இருக்கும். உதாரணமாக நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
நிலையான சின்னம்
ஒரு அரசியல் கட்சிக்கு ஒரு நிலையான சின்னம் இருக்க வேண்டும் என்றால் தேர்தலில் (மக்களவை அல்லது சட்டமன்றம்) ஒரு குறிப்பிட்ட சதவிகித வாக்குகளையோ அல்லது ஒரு குறிப்பிட்ட இடங்களிலோ வெற்றி பெற வேண்டும். உதாரணம் திமுக, அதிமுக.
வரி ஏய்ப்பு
ஆனால் இங்கு காலான்களைப் போல நாளுக்கு நாள் அதிகரிக்கும் தேர்தல் கட்சிகளால் நாட்டுக்கு ஏகப்பட்ட கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் வருத்தப்படுகிறார்கள்.
வரி செலுத்த வேண்டாம்
ஒரு அரசியல் கட்சி தனக்கு வரும் வருமானத்துக்கு வரி செலுத்தத் தேவை இல்லை என்று தான் வருமான வரித் துறை சொல்கிறது. ஆனால் அவர்கள் கட்டாயமாக வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வருமான வரிக் கணக்கைக் கூட தாக்கல் செய்வதில்லை. அதனால் அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு ரூபாய் வருமானம் வந்தது எனக் கூடத் தெரியாது.
2015 - 16 நிதி ஆண்டில்
இந்தியாவில் இருக்கும் 2,293 அரசியல் கட்சிகளில் வெறும் 114 அரசியல் கட்சிகள் மட்டுமே 2015 - 16 நிதி ஆண்டுக்கு (2016 - 17 Assessment Year) வருமான வரி தாக்கல் செய்திருக்கிறார்கள். மீதமுள்ள கட்சிகளும் இந்த 114 கட்சிகளைப் போல தங்களுக்கு வந்த மொத்த வருமானத்தை வெளிப்படையாக வருவான வரி கணக்குப் படிவங்களில் அறிவிக்க வேண்டும். ஆனால் அறிவிப்பதில்லை.
பெயருக்கு தான் கட்சி
அங்கீகரிப்பட்டாத சின்ன சின்ன அரசியல் கட்சிகள் எல்லாம் கறுப்புப் பணத்தை பதுக்க மட்டுமே கட்சியை பயன்படுத்திக் கொள்கிறார்கள். கேட்டால் கட்சிக்கு நன்கொடையே வருவதில்லை, சொந்த காசில் தான் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம் என சமாளிக்கிறார்கள். ஆக பெயருக்கு கட்சி நடத்தி கறுப்புப் பணத்தை பதுக்க மட்டுமே கட்சி நடத்துபவர்களும் இருக்கிறார்கள்.
பணச் சலவை
இன்னும் கூட எத்தனையோ கோடி ரூபாய் வருமானத்தை அரசியல் கட்சிகளில் நன்கொடையாக கணக்கு காட்டி அதற்கு வரி கட்டாமல் வெள்ளைப் பணமாக செலவு செய்கிற கட்சிகளும் இருப்பதை வருமான வரித்துறை குறிப்பிடுகிறது. பச்சையாக சொல்வதென்றால் இந்திய அரசியல் கட்சிகள் இந்தியாவிலேயே இருந்து கொண்டு பணச் சலவை செய்கின்றன. அது பெரும் நிறுவனங்களுக்காக இருக்கலாம், அல்லது தங்களின் சொந்த தேவைக்காக இருக்கலாம் என கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள் வருமான வரித்துறையினர்.
அதிகாரம் இல்லை
தேர்தல் ஆணையத்துக்கு கட்சிகளை பதிவு செய்து கொள்ள அதிகாரம் இருக்கிறதே தவிர ஒரு கட்சியின் பதிவை ரத்து செய்ய இதுவரை தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை. இந்த அதிகாரத்தை வழங்கச் சொல்லி தேர்தல் ஆணையம் சட்ட அமைச்சகத்திடம் பேசி வருகிறது.
தடை
கடந்த 2016-ம் ஆண்டில் தேர்தல் ஆணையம் 255 அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட தடை விதித்தது. இந்த 255 அரசியல் கட்சிகளும் தங்களுக்கு வழங்கிய வரிச் சலுகைகளை தவறாக பயன்படுத்தியதற்கு வருமான வரித் துறை தகுந்த ஆதாரங்களைச் சமர்பித்தார்கள். அதன் அடிப்படையில் தான் தேர்தலில் நிற்க தடை விதித்தது தேர்தல் ஆணையம். இனியும் இது போன்ற வருமான வரித் துறை விசாரனைகள் நடத்தப்பட்டு தடை விதிக்கப்பட வேண்டும்.