மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 38,218 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. ஆனால் நேற்று 38,095 புள்ளிகளில் தான் வர்த்தகம் நிறைவடைந்திருந்தது. ஆக 123 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கிய சென்செக்ஸ் நல்ல ஏற்றம் கண்டு வர்த்தக நேர முடிவில் 38,363 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
அதே போல் நிஃப்டி காலை 11,500 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,532 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்று வர்த்தக நேர முடிவில் 11,473 புள்ளிகளுக்கு நிறைவடைந்தது, ஆனால் இன்று காலை 27 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கி இருப்பது ஏற்றத்தின் அறிகுறிகளாகவே பார்க்கப்படுகிறது.
நேற்றே சந்தை குளோசிங் பெல் செய்திகளில் சொன்னதைப் போல கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு மீண்டும் இன்று உயர்ந்து வர்த்தகம் நிறைவடைந்திருப்பது கவனிக்க வேண்டியது. இன்று சென்செக்ஸும் சரி, நிஃபடியும் சரி தங்கள் இண்ட்ரா டே ஹை புள்ளிகளுக்கு நெருக்கமாகவே வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது. ஆக நாளையும் இந்த மிச்ச ஏற்றம் தொடரும் என எதிர்பார்க்கலாம்.
தொடுமா..?
இன்று தான் கோல்டு மேன் சாக்ஸ் நிறுவனமும் இந்தியாவுக்கு Over Weight மதிப்பீட்டைக் கொடுத்திருக்கிறது. நிஃப்டி 50 இண்டெக்ஸ்-க்கு வரலாற்று உச்சமே 11,760 புள்ளிகள் தான். ஆனால் அடுத்த 12 மாதங்களில் நிஃப்டி 50 இண்டெக்ஸ் 12,500 புள்ளிகளை எளிதில் எட்டிப் பிடிக்கும் எனவும் கோல்ட் மேன் சாக்ஸ் கணித்திருக்கிறது. ஆக சந்தையின் ஏற்றம் ஏதோ ஒரு இடத்தில் உறுதி செய்யப்பட்டுக் கொண்டே தான் இருக்கிறது.
சென்செக்ஸ் & பி.ஸ்.இ
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 07 பங்குகள் இறக்கத்திலும், 23 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,875 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,411 பங்குகள் ஏற்றத்திலும், 1,295 பங்குகள் இறக்கத்திலும், 169 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்த 2,875 பங்குகளில் 65 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 94 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 13 பங்குகள் இறக்கத்திலும், 35 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின.
செக்டோரியல் இண்டெக்ஸ்
நேற்றைப் போலவே இன்றும் ஆட்டோமொபைல் துறை சார்ந்த பங்குகள் இறக்கத்திலேயே வர்த்தகமாயின. ஆட்டோமொபைல்களோடு மெட்டல் துறை சார்ந்த பங்குகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின. இந்த இரு துறைகளைத் தவிர மற்ற எல்லா துறை சார்ந்த பங்குகளும் ஏற்றத்தில் தான் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் குறிப்பாக ரிலையன்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் அதிக வர்த்தகமாயின.
ஏற்றப் பங்குகள்
ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் பார்தி இன்ஃபராடெல், ஹெச் சி எல் டெக்னாலஜீஸ், என்டிபிசி, ரிலையன்ஸ், ஐடிசி போன்ற பங்குகள் சராசரியாக 2 சதவிகித விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின.
இறக்கப் பங்குகள்
ஈஷர் மோட்டார்ஸ், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஹிரோ மோட்டோகார்ப், லார்சன் அண்ட் ட்யூப்ரோ, மாருதி சுஸிகி போன்ற நிறுவனப் பங்குகள் சுமார் 1.9 சதவிகித விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
உலக சந்தைகள்
நேற்று மார்ச் 18, 2019-ல் அமெரிக்க சந்தையான நாஸ்டாக் விலை அதிகரித்து பச்சையில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. அமெரிக்க சந்தைகள் சுமார் 0.34 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இப்போது ஐரோப்பிய சந்தைகள் அனைத்தும் நல்ல ஏற்றத்தில் வலுவாக அதிகரித்து வருகின்றன.
ஆசியச் சந்தைகள்
ஆசிய பங்குச் சந்தைகளில் நிக்கி கொஞ்சம் தேக்கம் கண்டு 0.08 சதவிகித இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. ஜப்பானைப் போலவே தைவானின் தைவான் வெயிடெட் இண்டெக்ஸும், தென் கொரியாவின் கோஸ்பி இண்டெக்ஸும் ஏற்றமோ இறக்கமோ இன்றி ஃப்ளாட்டாக வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. சீனாவின் ஷாங்காய் காம்போசைட் 0.18% இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் தான் ஆசிய சந்தைகளிலேயே அதிகமாக 0.45% இறக்கம் கண்டு வர்த்தகமான சந்தை.
சந்தோஷம்
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்போது 68.96 ரூபாயாக இருக்கிறது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 70 ரூபாய்க்கு கீழ் வந்திருப்பது ஆளும் கட்சிக்கு கொஞ்சம் சாதகமானதாகவே இருக்கிறது.