டெல்லி: பொதுத் துறை டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் 1.76 லட்சம் ஊழியர்களுக்குப் பிப்ரவரி மாதச் சம்பளத்தை நிலுவையில் வைத்துள்ளது. நிதி நெருக்கடியைச் சமாளித்து தொடர்ந்து இயங்க ரூ.5,000 கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளது.
தொலை தொடர்புத்துறையில் தனியார் நிறுவனங்களின் ஆதிக்கம் வந்த பின்னர் பிஎஸ்என்எல் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக நஷ்டத்தில் இயங்கி வருகிறது. கடுமையான நிதி நெருக்கடியாலும், வருவாய் இழப்பாலும் தவித்து வருகிறது.
இந்திய தொலை தொடர்புத்துறை சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நுழைந்த பிறகிலிருந்தே பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன் நீண்ட நாள் வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு மாறியதால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நிதி நெருக்கடி
பிஎஸ்என்எல் நிறுவன ஊழியர்களுக்கான சம்பளத்தைக் கூட சரியான நேரத்தில் வழங்க முடியாமல் தவித்து வருகிறது. பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கங்கள் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹாவை அணுகி ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்காக நிதியை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
சம்பள பிரச்சினை
ஊழியர்கள் சம்பளம் மட்டுமில்லாமல் சேவை செயல்பாடுகளுக்கும் தொலைத்தொடர்புத் துறை நிதியை ஒதுக்கவில்லை என்று கூறுகின்றனர். பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 55 சதவிகித வருவாய் ஊழியர்களின் சம்பளத்திற்காக மட்டும் செலவிடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டு 8 சதவிகிதம் கூடிக்கொண்டே போகிறது. மத்திய அரசு ஊதியத்தை வழங்க எந்த ஒரு ஆதரவையும் அளிக்கவில்லை. எனவே வரும் வருவாயை வைத்து சம்பள பிரச்னையைச் சரிசெய்து வருகிறோம் என்று பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடன் வாங்க திட்டம்
இந்நிலையில், தொடர்ந்து இயங்குவதற்காக வங்கிகளிடம் ரூ.5,000 கோடி கடன் வாங்க பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் தொலைத் தொடர்புத் துறையிடமிருந்து கிடைத்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மூலதனச் செலவுகளைச் சமாளிக்க மட்டுமே கடன் வாங்கிக்கொள்ளத் தொலைத் தொடர்புத் துறை இதுவரையில் ஒப்புதல் வழங்கி வந்துள்ளது.
ரூ 850 கோடி சம்பள பாக்கி
வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் மிகவும் தாமதமாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலோ அல்லது அடுத்த மாதத்தின் முதல் தேதியிலோ சம்பளம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது ஊழியர்களுக்கான சம்பளம் இழுத்தடிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்துக்கான மொத்த சம்பளப் பாக்கி ரூ.850 கோடித் தொகையை மார்ச் 21ஆம் தேதிக்குள் வழங்கிவிடுவதாக பிஎஸ்என்எல் உறுதியளித்துள்ளது.