உலகின் முன்னனி மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான கோல்டுமேன் சாக்ஸ் இந்தியாவுக்கு மீண்டும் தன் மதிப்பீட்டை மறு பரிசீலனைச் செய்திருக்கிறது.
அடுத்த சில மாதங்கள் முழுக்க தேர்தல் நடைபெற உள்ளதாலும், அந்த தேர்தலில் மீண்டும் ஒரு நிலையான அரசு (தனிப் பெரும்பான்மையோடு) வரும் என்கிற நம்பிக்கை சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் நிலவுவதாலும் முதலீட்டாளர்கள் பணத்தை தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வருகிறார்கள்.
கடந்த பிப்ரவரி 2019-ல் மட்டும் 2.42 பில்லியன் டாலர் இந்திய பங்குச் சந்தைகளுக்கு முதலீடுகளாக வந்திருக்கிறது. இது கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிக முதலீடு என்பது கவனிக்கத்தக்கது.
எதிர்பார்ப்பு
புதிய பெரும்பான்மை பலம் பொருந்திய அரசு இந்தியாவில் மீண்டும் பதவி ஏற்கும் போது, இன்னும் பல பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்படும். ஆர்பிஐ கொண்டு வரும் பணக் கொள்கை முடிவுகளில் இன்னும் வட்டி விகிதங்கள் குறையும் என்கிற நம்பிக்கைகளும் முதலீட்டாளர்களை இந்திய பங்குச் சந்தைகளில் பணம் போட வைக்கிறது.
இதனால் தான் 38000
இதனால் தான் சென்செக்ஸ் நேற்று 38,000 புள்ளிகளுக்கு மேல் இரண்டாவது நாளாக வர்த்தகம் நிறைவடைந்தது. இப்படி தேர்தலை முன் வைத்து அதிகரிக்கும் இந்திய பங்குச் சந்தைகள் பின்னால் மோசமான சரிவுகளைச் சந்திக்கும் ஆபத்தும் இருப்பதைக் கணித்து இந்தியப் பொருளாதாரத்துக்கு Over weight மதிப்பீடு கொடுத்திருக்கிறது.
நிஃப்டி இலக்கு
நிஃப்டி 50 இண்டெக்ஸ்-க்கு வரலாற்று உச்சமே 11,760 புள்ளிகள் தான். ஆனால் அடுத்த 12 மாதங்களில் நிஃப்டி 50 இண்டெக்ஸ் 12,500 புள்ளிகளை எட்டிப் பிடிக்கும் எனவும் கோல்ட் மேன் சாக்ஸ் கணித்திருக்கிறது. எல்லாம் சரியாக நடந்தால்.
தேர்தல் முடிவுகள்
அடுத்த மாதம் முதல் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள், வரும் மே 23-ம் தேதி தான் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். இந்த முடிவுகள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பது போல நடந்து விட்டால் சந்தைகள் உச்சம் தொடுவதில் சந்தேகம் இல்லை. இதுவே மாறாக நடந்தால், இந்திய சந்தைகளில் அடி கொஞ்சம் பலமாகத் தான் இருக்கும். அப்போது ரிஸ்க் எடுத்து போட்ட பணத்துக்கான வருமானம் கிடைக்காமல் போகலாம் என எச்சரிக்கத் தான் இந்த Over Weight மதிப்பீடு எனச் சொல்கிறது கோல்டு மேன் சாக்ஸ்.