பெங்களூரூ: இந்தியாவில் அதிக கார்களை விற்கும் இரண்டாவது நிறுவனமான Hyundai, இந்தியாவின் மிகப் பெரிய டாக்ஸி அக்ரிகேட்டரான ஓலாவில் சுமார் 2000 கோடி ரூபாயை (300 மில்லியன் டாலர்) முதலீடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது.
Hyundai நிறுவனத்தோடு, இந்தியாவுக்கு புதிதாகா வருகை தந்திருக்கும் கியா மோட்டார்ஸும் இணைந்தே ஓலாவோடு பணியாற்றப் போகிறார்களாம்.
இந்தியாவுக்கு தகுந்தாற் போல மின்சார வாகனங்களை மேம்படுத்தவும், சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்கவும் இந்த பணத்தை பயன்படுத்தப் போகிறார்களாம். சுருக்கமாக ஸ்மார்ட் போக்குவரத்துக்கான தீர்வுகளை நோக்கி பணியாற்றப் போகிறார்களாம்.
மூன்று நிறுவனங்கள்
இந்த மூன்று நிறுவனங்களும் சேர்ந்து இந்தியாவுக்குத் தகுந்த வகையிலும், இதுவரை வந்த மின்சார வாகனங்களிலேயே சிறந்த வகையான மின்சார கார்களை மேம்படுத்துவது, இந்தியாவுக்காக என்றே தனி ரக மின்சார கார்களை தயாரிப்பது என போக்குவரத்தில் இருக்கும் சவால்களுக்கு ஒரு நல்ல தீர்வைக் கொண்டு வர சேர்ந்து உழைப்போம் என 3 நிறுவனங்களும் சேர்ந்து கூட்டறிக்கை (Joint Statement) விட்டிருக்கிறார்கள்.
Hyundai கருத்து
Hyundai நிறுவனத்தின் துணைத் தலைவர் ஈசன் சங் (Euisum Chung) "Hyundai உலக கார் சந்தைகளில் பெரிய இடத்தைப் பிடிக்க இந்தியா தான் இதயம். இப்போது ஓலா உடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதால் இனி வெறும் உலக கார் சந்தைகளில் மட்டும் இடம் பிடிப்பதோடு நின்று விடாமல், ஒரு எதிர்கால ஸ்மார்ட் போக்குவரத்து சந்தைகளிலும் முக்கிய இடம் பிடிக்க Hyundai குழுமத்துக்கு இந்த முதலீடுகள் கை கொடுக்கும் என்றார்.
பேச்சு வார்த்தை
இந்த ஒப்பந்தம் நடந்து கொண்டிருக்கும் போதே ஓலாவில் இருக்கும் கேப் ஓட்டுநர்களுக்கு பிரத்யேக மின்சார வாகனங்களைக் கொடுக்கவும் பல்வேறு கார் உற்பத்தி நிறுவனங்களோடு பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது ஓலா நிறுவனம்.
ஓலா கருத்து
வரும் 2022-ம் ஆண்டுக்குள் 20 லட்சம் பேருக்கான வேலை வாய்ப்பை போக்குவரத்துத் துறையில் உருவாக்குவதாக இலக்கு நிர்ணயித்திருக்கிறது. அதில் ஏற்கனவே 13 லட்சம் பேரை டிரைவர்களாக வேலைக்கு வைத்திருக்கிறது. மீதமுள்ள 7 லட்சம் பேருக்கான வாய்ப்பை உருவாக்க இந்த Hyundai முதலீடுகள் உதவியாக இருக்கும். இதனால் இன்னும் பல பேர் கேப் ஓட்ட வந்து சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களாக இருக்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள் ஓலா நிர்வாகிகள்.