பெய்ஜிங்: இந்தியா என்கிற 125 கோடி பேர் வாழும் மிகப் பெரிய பொருளாதார நாட்டுக்கு தேவையான பொருட்களில், பலவற்றை அண்ட நாடான சீனாவிடம் இருந்து தான் வாங்குகிறோம்.
கடந்த 2013 - 14 தொடங்கி 2017 - 18 வரையான ஐந்து ஆண்டுகளில் சீனாவில் இருந்து இந்தியாவுக்கான ஏற்றுமதி (இந்தியாவுக்கு இறக்குமதி) தொடர்ந்து அதிகரித்திருக்கிறது. கடைசி 2017 - 18-ல் தான் 76.38 பில்லியன் டாலர் இறக்குமதி செய்திருக்கிறோம். இதுவரையிலேயே இல்லாத அளவுக்கு அதிக இறக்குமதி செய்திருக்கிறோம்.
2018 - 19 நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் மட்டும் 53.88 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்திருக்கிறோம். ஆக மார்ச் 31, 2019 நிலவரப்படி 2018 - 19 முழு நிதியாண்டுக்குள் குறைந்தபட்சமாக 68 - 70 பில்லியன் டாலருக்காவது சீனாவிடம் இருந்து இறக்குமதி செய்துவிடுவோம்.
சீன பொருட்களை நிராகரி
மேலே சொன்னது போல ஒரு பக்கம் சீனாவில் இருந்து இந்தியாவுக்கான இறக்குமதி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அவ்வப் போது சீனப் பொருட்களை நிராகரி boycott chinese products என சமூக வலைதளங்களில் பேச்சு எழுகிறது. அது எல்லாம் சத்தியமாக இந்தியாவுக்கு சாத்தியமே இல்லை என அடித்துச் சொல்லி இருக்கிறது குளோபல் டைம்ஸ் என்கிற பத்திரிகை.
ஏன் சாத்தியமில்லை
இந்தியா பல தருணங்களில் இந்த கோஷங்களை எழுப்பிக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால் ஒரு முறை கூட சீரியஸாக தனக்கு தேவையான பொருட்களை தானே உற்பத்தி செய்து கொள்வதைப் பற்றி யோசித்ததில்லை. அதோடு இன்று இந்தியா இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவுக்கு தேவையான எல்லா பொருட்களையும் இந்தியாவில் உற்பத்தியும் செய்ய முடியாது எனச் சொல்லி இருக்கிறது குளோபல் டைம்ஸ்.
வேண்டா வெறுப்பாக ஓகே
அப்படி உண்மையாகவே சீன பொருட்களை இந்தியாவுக்கு கொண்டு வரக் கூடாது என இந்திய அரசு நினைத்தால் என்றோ தன் உற்பத்தியை சரி செய்திருக்கும். ஆனால் செய்யவில்லை எனும் போது இந்தியாவுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, சீனப் பொருட்களை பயன்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகச் சொல்கிறது குளோபல் டைம்ஸ்.
ராகுல் காந்தி
இந்தியாவுக்கு உள்ளேயே இருந்து கொண்டு இந்திய வணிக முன்னேற்றங்களைத் தடுக்கிறார்கள். ராகுல் காந்தி போன்ற அரசியல்வாதிகள் வரும் தேர்தலில் மக்களிடம் இருந்து ஓட்டு வாங்க சீனாவின் பெயரைப் பயன்படுத்தாமல் இருந்தால் நல்லது எனவும் வேண்டுகோள் வைத்திருக்கிறது. சுருக்கமாக சீன எதிர்ப்பை வைத்து இந்திய அரசியல் வாதிகள் தனி மனித அரசியல் ஆதாயம் அடையளாம். ஆனால் நாட்டு பொருளாதாரத்துக்கோ அல்லது இந்திய மக்களுக்கோ சீன வெறுப்பால் ஒரு பயணும் கிடையாது என்கிறது குளோபல் டைம்ஸ் அறிக்கை.
டெல்லிக்கு எச்சரிக்கை
"இந்திய மக்களின் கோபத்தை சீன பொருட்கள் மீது திருப்பினால் இந்தியா தன் மக்களின் உள்நாட்டு பிரச்னையை இன்னும் மோசமாக்குகிறது என்று தான் பொருள்" எனவும் எச்சரிக்கிறது குளோபல் டைம்ஸ். சமீபத்தில் தான் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை தீர்க்கும் விதத்தில் கூடுதல் பொருட்களை இந்தியாவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்ய ஒப்புக் கொண்டது சீன என்பது அடிக்கோடு இட வேண்டிய விஷயம்.