பஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடி - லண்டனில் கைதாகிறார் நீரவ் மோடி smart
லண்டன்: பஞ்சாப் நேசனல் வங்கிகளில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி மோசடி செய்து விட்டு தப்பி ஓடி தலைமறைவான நீரவ் மோடியை கைது செய்ய லண்டன் நீதிமன்றம் கைது வாரண்ட்டை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வைர வியாபாரி நீரவ் மோடி வைர வியாபாரத்திலும், நகைக் கடைத் தொழிலிலும் அசுர வளர்ச்சி அடைவதற்கு அவரின் சகோதரர் நிஷால், மற்றும் மாமா மெகுல் சோக்ஷியும்தான் காரணம். இதில் மெகுல் சோக்ஷி கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். நீரவ் மோடியும் அவருடைய உறவினர் மெகுல் சோக்ஷியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13000 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு மோசடி செய்துள்ளனர் என்பது புகார். இவர்கள் இருவரும் இந்தியாவை விட்டு தப்பி ஓடி தலைமறைவாகினர்.
இந்நிலையில் நீரவ் மோடி லண்டனில் உள்ள டோட்டன்ஹாம் நீதிமன்ற சாலை பகுதியில் புதிய கெட்டப்பில் சுற்றி திரியும் வீடியோ வெளிவந்தது. ரூ. 75 கோடி அபார்ட்மென்ட்டில் நீரவ் மோடி லண்டனில் வசித்து வருகிறார். அவரை உடனடியாக இந்தியாவுக்கு நாடுகடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இங்கிலாந்தில் தலைமறைவாக வாழ்ந்து வரும் அவரை இந்தியா கொண்டுவருவதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மத்திய அரசு தெரிவித்து வருகிறது.
இதனிடையே லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் திங்கட்கிழமையன்று நீரவ் மோடியை பிடிப்பதற்கு வாரண்ட் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரவ் மோடி மீதான முதல் குற்றப்பத்திரிக்கையை லண்டன் உளவுத்துறையான என்போர்ஸ்மெண்ட் டைரக்டரேட் முதன்முறையாக கடந்த ஆண்டு மே மாதம் தாக்கல் செய்தது. என்போர்ஸ்மெண்ட் டைரக்டரேட்டின் பரிந்துரையின்பேரில் தற்போது அவரை கைது செய்ய லண்டன் நீதிமன்றத்தால் வாரண்ட் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உள்ள பல நகைக்கடைகளுக்கு சொந்தக்காரர் நிரவ் மோடி. அமெரிக்காவில் உள்ள நகைக் கடையை அதிபர் ட்ரம்ப் திறந்து வைக்கும் அளவுக்கு அவருடன் நெருக்கத்தை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடன் மோசடி வழக்கில் சிக்கிய நீரவ் மோடி தலைமறைவாக கோடிக்கணக்கான சொத்து மதிப்புள்ள பங்களாவில் வசித்து வருகிறார். லண்டன் காவல்துறையினர் நீரவ் மோடியை விரைவில் கைது செய்து பின்னர் நாடு கடத்தும் நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.