மும்பை: ஹீராநந்தினி குழுமம். இந்தியாவில் பெரிய ரியல் எஸ்டேட் பில்டர்களில் ஒன்று. இதன் தலைவர் நிரஞ்சன் ஹீராநந்தினி இந்திய பில்லியனர்களில் ஒருவர். இவரின் சொத்து மதிப்பு மட்டும் பிப்ரவரி 2018 கணக்குப் படி 1.23 பில்லியன் டாலர். இந்திய ரூபாயில் சுமார் 85,000 கோடி ரூபாய்.
நிரஞ்சன் ஹிராநந்தினிக்கு இரண்டு வாரிசுகள். மகள் ப்ரியா வந்த்ரேவாலா லண்டனில் வாழ்கிறார். மகன் தர்ஷன் ஹிராநந்தினி தந்தையோடு இந்தியாவிலேயே பிசினஸை பார்த்துக் கொள்கிறார்.
தந்தை நிரஞ்சன் ஹீராநந்தினி மற்றும் மகன் தர்ஷன் ஹீராநந்தினி ஒரு பக்கத்திலும் மகள் ப்ரியா வந்த்ரேவாலா ஒரு பக்கமும் இந்திய நீதிமன்றங்கள்ல் மோதிக் கொண்டிருந்தார்கள். அந்த மோதல் இப்போது ஒரு சுமூகமான முடிவுக்கு வந்திருக்கிறது.
2006-ல்
2006-ம் ஆண்டில் தந்தை நிரஞ்சன் ஹீராநந்தினி மற்றும் தர்ஷன் ஹீராநந்தினி ஆகியோரோடு ப்ரியா ஒரு பிசினஸ் ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். அந்த ஒப்பந்தப்படி பல ரியல் எஸ்டேட் திட்டங்களை மூவரும் இணைந்து செய்ய முன் வந்தார்கள்.
விதிமீறல்
சில வருடங்களுக்குப் பிறகு தந்தையும் மகனும் சேர்ந்து தனக்குத் தெரியாமல் ரியல் எஸ்டேட் திட்டங்களில் ஈடுபடுவது, இருக்கும் திட்டங்களில் மாற்றம் செய்வது என பல பிரச்னைகள் எழுகின்றன. ப்ரியா லண்டன் நீதிமன்றத்தில் தந்தை நிரஞ்சன் மீதும் சகோதரன் தர்ஷன் மீதும் வழக்கு தொடுக்கிறார்.
ப்ரியாவுக்கு சாதகம்
2016-ம் ஆண்டில் லண்டன் நீதிமன்றம் ப்ரியாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பின் படி ப்ரியாவுக்கு நஷ்ட ஈடாக 510 கோடி ரூபாயை வழங்குமாறு உத்தரவிட்டது. இதில் 360 கோடி ரூபாய் ப்ரியவுக்கான நஷ்ட ஈடு மீதமுள்ள 149 கோடி ரூபாய் வரிகள் எனவும் குறிப்பிட்டது.
எதிர்ப்பு
ப்ரியா லண்டனில் இருப்பதால் தான் இப்படி வரிகளும் செலுத்த வேண்டி இருக்கிறது. நாங்கள் (நிரஞ்சனும், தர்ஷனும்) இந்த வரிச் சுமையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். தந்தை மகனின் வாதத்தை கேட்ட நீதிபதிகள் முதலில் ப்ரியாவுக்கான 360 கோடி ரூபாயை நீதிமன்றத்திடம் கொடுக்குமாறு சொன்னார்கள். சொன்ன படி பணத்தையும் கொடுத்துவிட்டார்கள்.
ஒத்துழையுங்கள்
இப்போது பணத்தை லண்டனுக்கு கொண்டு சென்றால் தான் வரி செலுத்த வேண்டி இருக்கும் ஆக, ப்ரியா தன் தந்தை மற்றும் சகோதரனோடு ஒத்துப் போகுமாறும், வரிப் பிரச்னைகளில் இருந்து வெளியே வர இரு தரப்பும் சேர்ந்து ஒரு வழியை யோசித்துக் கொள்ளுமாறு அறிவுருத்தி தீர்பளித்திருக்கிறது நீதிமன்றம். அதோடு வரி refund-கள் ஏதாவது வந்தால் அந்த தொகை ப்ரியாவுக்கு தான் சென்று சேர வேண்டும் என்றும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சமாதானம்
இப்போது வழங்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு ப்ரியாவுக்கும் சரி, தந்தை மற்றும் சகோதரனுக்கும் சரி எல்லாம் ஒத்துப் போவதாகவே இருக்கிறது என்பதால் மேல் முறையீடுகள் இல்லாமல் சமாதானமாக போகிறார்களாம். 10 வருடங்களுக்கு மேல் நடந்த குடும்ப சண்டை ஒரு வழியாக முடிவுக்கு வந்திருக்கிறது.