டெல்லி: நடப்பு நிதியாண்டில் மார்ச் 16ஆம் தேதி வரையிலான கணக்குப் படி மத்திய அரசின் நேரடி வரி வசூல் ரூ. 10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. வரித் தாக்கலின் நான்காவது தவணையின் உதவியால் இந்த அளவு எட்டப்பட்டுள்ளதாகப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.
நடப்பு 2018-19 நிதியாண்டில் மொத்தம் ரூ.11.5 லட்சம் கோடியை நேரடி வரியின் கீழ் வசூலிக்க மத்திய அரசு முதலில் இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. பின்னர், இடைக்கால பட்ஜெட் தாக்கலின் போது இந்த இலக்கு ரூ.12 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது.
இந்த இலக்கை அடைவதில் அரசு தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், மார்ச் 16ஆம் தேதி நிலவரப்படி, அரசின் நேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. வரி வசூலின் இறுதிக்கட்ட விவரங்கள் இன்னும் வெளிவராத நிலையில் வசூல் அளவு இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
நேரடி வரிகளில் நிறுவன வரி, தனிநபர் வருமான வரி, சொத்து வரி, பங்கு பரிவர்த்தனை வரி போன்றவை அடங்கும். இந்த வரிகள் யார் மீது விதிக்கப்படுகிறதோ அவர்தான் செலுத்த வேண்டும். மறைமுக வரிகள் போல் மற்றவர்கள் மீது சுமத்த முடியாது.
தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை தாக்கல் செய்யும் அனைத்து நிறுவனங்களும் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் நிறுவனத்தின் விற்று முதல் (Turnover) மற்றும் லாபத்தை உத்தேசமாக கணித்து அதற்கேற்ப முன்கூட்டியே வரியை (Advance Tax) செலுத்த வேண்டியது கட்டாயமாகும். அதுபோலவே, தனி நபர்களும் தங்களின் ஆண்டு வருமானத்தை உத்தேசமாக கணித்து அதற்கேற்ப வரியை முன்கூட்டியே செலுத்த வேண்டியது அவசியமாகும். இதனை ஒவ்வொரு நிதி ஆண்டிலும் நான்கு கட்டங்களாக, அதாவது முதல் தவணையாக, ஜூன் மாதமும், இரண்டாவது காலாண்டில் செப்டம்பர் மாதத்திலும், மூன்றாம் காலான்டில் டிசம்பர் மாதத்திலும், இறுதியாக நான்காவது மற்றும் இறுதி காலாண்டில் மார்ச் மாதமும் முன்கூட்டியே வரியை செலுத்த வேண்டும்.
2017-18ஆம் நிதியாண்டில் நேரடி வரிகள் மூலம் ரூ.9.80 லட்சம் கோடி திரட்ட மத்திய பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. எனினும் அந்த இலக்கைத் தாண்டி ரூ.10.03 லட்சம் கோடி வசூல் ஆனது. இந்த 2018-19 நிதியாண்டில் நேரடி வரியாக ரூ.11.5 லட்சம் கோடியை வசூலிக்க முன்பு அரசு இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், நிதிப் பற்றாக்குறை பிரச்சினையால் வரி வசூலை உயர்த்தும் பொருட்டு, இந்த நிதியாண்டுக்கான நேரடி வரி வசூல் இலக்கை ரூ.12 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
இந்த நிலையில் மார்ச் 16ஆம் தேதி வரை நேரடி வரி வசூல் ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. வரித் தாக்கலின் நான்காவது தவணையின் உதவியால் இந்த அளவு எட்டப்பட்டுள்ளதாகப் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளரான சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாதங்களில் நேரடி வரி வசூல் ரூ.7.89 லட்சம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டுக்கான மறைமுக வரி வசூலில் இலக்கை அடைவது சற்றுக் கடினமாகவே இருக்கும் எனவும், நேரடி வசூல் இலக்கை அடைவது எளிதான ஒன்றுதான் எனவும் சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டுக்கான சுங்க வரி இலக்கையும் ரூ.1.12 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.30 லட்சம் கோடியாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி வசூலில் ரூ.7.43 லட்சம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ.6.43 லட்சம் கோடி மட்டுமே வசூலாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.