டெல்லி: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் லாபம் நடப்பு 2018-19ஆம் நிதியாண்டின் 3ஆம் காலாண்டில் 8.8 சதவிகிதமாக அதிகரித்ததால் இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில் இந்நிறுவனத்தின் பங்கு விலை உயர்ந்து பங்கு மூலதனம் ரூ8,71,729 கோடியாக அதிகரித்தது. இக்கட்டான நேரத்தில் முகேஷ் அம்பானி தன் தம்பி அனில் அம்பானிக்கு சரியான நேரத்தில் கை கொடுத்து கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்றியது இந்தியப் பங்குச் சந்தைக்கு ஒரு நல்ல சகுனமாகவும் நல்ல செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மூன்றாம் காலாண்டின் லாபம் சுமார் ரூ.10,251 கோடி அதிகரித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து இன்றைய வர்த்தகத்தின் இடையில் தேசிய பங்குச்சந்தையில் (NSE) ரிலையன்ஸின் பங்கு விலை அதிகபட்சமாக ரூ.1380 வரை உயர்ந்தது. இறுதியில் 2 சதவிகிதம் அதிகரித்து ரு.1376.55 என்ற அளவில் நிலை பெற்றது.
ரிலையன்ஸின் பங்கு விலை உயர்ந்ததைத் தொடர்ந்து டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலிவர் மற்றும் ஐடிசி நிறுவனங்களைப் போல ரிலையன்ஸ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனமும் 125 பில்லியன் டாலர் பங்கு மூலதனம் கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் இணைந்தது.
லாபம் ரூ.10,251 கோடி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடப்பு 2018-19ஆம் நிதியாண்டின் 3ஆம் காலாண்டின் லாப விகிதமானது 8.8 சதவிகிதம் அதாவது சுமார் ரூ.10,251 கோடி அதிகரித்தாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து இந்திய நிறுவன முதலீட்டாளர்களும் அந்நிய முதலீட்டாளர்களும் போட்டி போட்டு இந்நிறுவனத்தின் பங்கில் முதலீடு செய்தனர்.
ஆர்ஜியோ லாபம் ரூ.831 கோடி
கச்சா எண்ணை சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் போன்றவற்றால் அதிகப்படியான லாபம் ஈட்டியுள்ளது. கூடவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் துணை நிறுவனமான ஆர்.ஜியோவும் 3ஆம் காலாண்டில் 65 சதவிகத லாபத்தை ஈட்டி உள்ளது. இந்நிறுவனம் 3ஆம் காலாண்டில் சுமார் ரூ.831 கோடி லாபம் ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுவும் கூட முதலீட்டாளர்கள் போட்டி போட்டு ரிலையன்ஸின் பங்கில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்ட காரணமாகும்.
சந்தை மதிப்பு ரூ.8,71,729 கோடி
இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில் தேசிய பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் பங்கு விலையானது ரூ.1376.55 என்று நிலைபெற்றது. இதன்மூலம் ரிலையன்ஸின் சந்தை மதிப்பானது (Market Capital) ரூ.8,71,729 கோடியை அதாவது 125 பில்லியன் டாலரை எட்டியது. பில்லியன் டாலர் பட்டியலில் ஏற்கனவே டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலிவர் மற்றும் ஐடிசி போன்ற நிறுவனங்கள் உள்ளன.
சகோதர பாசம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலை உயர்வுக்கு இதன் 3ஆம் காலாண்டு லாப அளவு உயர்வு காரணமாக இருந்தாலும், இந்நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தன்னுடைய தம்பியான அனில் அம்பானியின் கடனை செலுத்துவதற்கு துணையாக இருந்ததும் மற்றொரு முக்கிய காரணமாகும்.
நல்ல காலம் பொறக்குது
பொதுவாக பங்குச் சந்தையில் ஒவ்வொரு பங்கின் வர்த்தகமும் தினசரி செய்திகளின் அடிப்படையிலும் உணர்வுபூர்வமான நெகிழ்ச்சியான சம்பவங்களாலும் தான் வர்த்தகமாகின்றன. அன்றைய நாளில் அந்நிறுவனத்தைப் பற்றிய நல்ல செய்திகள் வந்தால் பங்கின் விலை ஏறும். பாதகமான செய்திகள் வந்தால் பங்கின் விலை இறங்கும். இக்கட்டான நேரத்தில் முகேஷ் அம்பானி தன் தம்பி அனில் அம்பானிக்கு சரியான நேரத்தில் கை கொடுத்து கடன் பிரச்சனையில் இருந்து காப்பாற்றியது இந்தியப் பங்குச் சந்தைக்கு ஒரு நல்ல சகுனமாகவும் நல்ல செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.