அமெரிக்கா: 20-ம் நூற்றாண்டில் சுமார் 1970, 1980-களில் ஒரு பில்லியன் டாலர் சொத்து இருந்தாலே அவர்கள் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்கள். ஒரு பில்லியன் டாலருக்கு மேல் சொத்து வைத்திருப்பவர்களை பில்லியனர் என்றார்கள்.
21-ம் நூற்றாண்டிப் தொடக்கத்தில் உலகின் டாப் 20 பணக்காரர்கள் 10 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து வைத்திருந்தார்கள். அவர்களை டெகா பில்லியனர் (Decabillionaire) என்றார்கள்.
இப்போது உலகின் டாப் பில்லியனர்கள் 100 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து வைத்திருக்கிறார்கள். இவர்களை சென்டிபில்லியனர் (Centibillionaire) என்கிறார்கள்.
அந்த 100 பில்லியனர்கள்
இப்போது வரை உலகில் இரண்டு பேர் மட்டுமே 100 பில்லியன் டாலருக்கு மேல் சொத்து வைத்திருக்கிறார்கள். ஒருவர் அமேஸானின் தலைவர் ஜெஃப் பிசாஸ், மற்றொருவர் மைக்ரோசாஃப்டின் நிறுவனர் பில் கேட்ஸ்.
பில் கேட்ஸ் கொஞ்சம் ஸ்லோ
உலகில் இணைய தளம் சார்ந்த விஷயங்கள் அதிக அளவில் பரவிய பின் மைக்ரோசாஃப்ட்-ன் வளர்ச்சி அத்தனை அதிகமாக இல்லை எனவும் சொல்கிறார்கள். கடந்த ஒரு வருடத்தில் ஜெஃப் பிசாஸ் 20.7 பில்லியன் டாலருக்கு சொத்து மதிப்புகள் அதிகரித்திருக்கிறது. ஆனால் அதே ஒரு வருட காலத்தில் மைக்ரோசாஃப்டின் நிறுவனர் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு 9.5 பில்லியன் டாலர் அளவுக்கு தான் அதிகரித்திருக்கிறதாம்.
சொத்து கரையும்
இன்னொரு முக்கியமான செய்தி இவர்கள் நீண்ட நாட்களுக்கு இந்த 100 பில்லியன் டாலர் சொத்துக்களை வைத்திருக்கப் போவதில்லை. பில் கேட்ஸ் ஏற்கனவே தன் சொத்தில் பாதியையாவது நல்ல காரியங்களுக்கு தருவதாகச் சொல்லி இருக்கிறார். ஆக கூடிய விரைவில் சொத்துக்கள் கரையும்.
சொத்து பிரியும்
அதே போல ஜெஃப் பிசாஸும் தன் மனைவியுடன் விவாகரத்து செய்யப் போகிறார். எனவே அமேஸானின் சொத்துக்களும் பிரியும். அப்போது ஜெஃப் பிசாஸின் மனைவி கூட டாப் 10 பில்லியனர்களில் ஒருவராக பட்டியலில் இடம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
10 வருட பட்ஜெட்
உலகின் டாப் 500 பணக்காரர்களின் சொத்துக்களை முழுமையாகக் கூட்டினால் 5.3 லட்சம் கோடி டாலர் வரும். இந்திய ரூபாய் மதிப்பில் 371 லட்சம் கோடி ரூபாய். இந்த பணம் மட்டும் இந்திய அரசிடம் இருந்தால் சுமார் 10 ஆண்டுகளுக்கு ஜிஎஸ்டி உட்பட ஒரு ரூபாய் கூட வரி வசூலிக்காமல் இந்திய பட்ஜெட் போடலாம்.