டெல்லி: கடந்த மார்ச் 19-ம் தேதி எப்படியோ இந்திய அரசு மற்றும் இந்திய அதிகாரிகளின் அழுத்தத்தினால் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் புகழ் நீரவ் மோடி கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்கட்சிகள் வாயில் இருந்து ஏதாவது நல்லது வரும் என எதிர்பார்த்தால் எல்லோரும் திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இப்போது உத்திரப் பிரதேசத்தின் தேர்தல் சுற்றுப் பயணத்தில் இருக்கும் ப்ரியங்கா காந்தி நேரடியாக மோடி அரசை குற்றம் சாட்டுகிறார் "நீரவ் மோடியின் கைதுக்கு மோடி அரசை பாராட்ட முடியாது. இதெல்லாம் ஒரு சாதனையா என்ன..? நீரவ் மோடியை யார் தப்பிக்க வைத்தது..?" என சரமாரியாக கேள்விகளைக் கேட்டு பாஜகவை வறுத்தெடுத்திருக்கிறார்கள்.
ப்ரியங்காவைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆஸாத் தன் பங்குக்கு மோடி அரசை திட்டித் தீர்த்து இருக்கிறார். "நீரவ் மோடி இந்தியாவில் இருந்து தப்பிக்கச் செய்ததே நரேந்திர மோடி அரசாங்கம் தான். இப்போது மக்களவைத் தேர்தலில் செய்த தவறுகளை மறைக்க, மக்களிடம் நல்ல பெயர் எடுக்க நீரவ் மோடியை லண்டனிலேயே வைத்து கைது செய்திருக்கிறார்கள்" என தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மோடிக்கு கிடையாது
மேற்கு வங்க முதல்வர் மமதா பேனர்ஜி "பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் திட்டங்களில், மக்களவைத் தேர்தல் திட்டங்களில் நீரவ் மோடியின் கைதும் ஒன்று" என அவர் பங்குக்கு கிண்டலடித்திருக்கிறார். அதோடு நீரவ் மோடியின் கைதுக்கு டெலிக்ராஃப் பத்திரிகைக்கே முழு பாராட்டுக்களும் சென்று சேரும் எனவும் சொல்லி இருக்கிறார்.
பத்திரிகையாளர்கள்
மோடி தலைமையிலான அரசுக்கு நீரவ் மோடியை கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் பத்திரிகையாளர்களால் மட்டும் எப்படி நீரவ் மோடியின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க முடிகிறது..? என பாஜகவினருக்கு கேள்வி எழுப்பி இருக்கிறார்.
ஒமர் அப்துல்லா
மமதா பேனர்ஜியைப் போலவே ஜம்மு காஷ்மீரின் முதல்வர் ஒமர் அப்துல்லாவும் "நீரவ் மோடியின் கைதுக்கான பாராட்டுகளுக்கு இங்கிலாந்தின் டெலிக்ராஃப் பத்திரிகை தான் தகுதியானது, மோடியோ அல்லது விசாணை ஆணையங்களோ அல்ல" என தன் கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
எல்லாம் சவ்கிதருக்கே
இப்படி ஒரு பக்கம் அனைத்து எதிர்கட்சிகளும் பாஜகவை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மத்திய சட்டத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மற்றும் ஹர்தீப் சிங் பூரி போன்ற பாஜக ஆதரவாளர்களும், ஆட்சியில் இருப்பவர்களும் "திருடன் தப்பி ஓடலாம் ஆனால் இந்தியாவின் காவல்காரனிடம் இருந்து (சவ்கிதார் மோடியிடம் இருந்து) மறைந்து கொள்ள முடியாது" என மோடியை பாராட்டித் தள்ளி இருக்கிறார்கள்.