டெல்லி: உலகின் மிகப்பெரிய ஆன்லைன் தேடுதல் நிறுவனமான கூகுள் தனது தளங்களில் போட்டி நிறுவனங்களின் விளம்பரதாரர்களை தடை செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு அபராதமாக ஐரோப்பிய யூனியனின் ஒழுங்குமுறை ஆணையம் கூகுள் நிறுவனத்தின் மீது 1.49 பில்லியன் யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது 11,700 கோடியாகும்.
ஆன்லைன் வர்த்தகச் சந்தையில் கூகுள் நிறுவனம் தனது ஆதிக்கத்தை தவறாக பயன்படுத்தி தனது போட்டியாளர்கள் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது.
கூகுள் வர்த்தகரீதியாக மிகவும் முக்கிய விளம்பரதாரர்களுக்கு மட்டுமே தேடு விளம்பரங்கள் வெளியிட தனிப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அனுமதி வழங்கியுள்ளது.
கூகுள் குசும்பு
கூகுள் முதலில் தனது போட்டியாளர்களின் இணையதளங்களில் தேடு விளம்பரங்கள் வெளியிடுவதை தடுத்துள்ளது. பின்னர் அவர்களிடம் கூகுளில் குறைந்த எண்ணிக்கையில் விளம்பரங்கள் வெளியிட மிகவும் லாபகரமான இடம் ஒதுக்குவதற்கு முன்பதிவு செய்யும்படி வலியுறுத்தியுள்ளது.
கூகுள் வலியுறுத்தல்
அதோடு தனது போட்டி இணையதளங்களில் ஏதாவது தேடு விளம்பரங்கள் வெளியானால், மாற்றம் செய்வதற்கு முன்பு கூகுளிடம் எழுத்து மூலம் அனுமதி பெறவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது என்று போட்டிகளுக்கான ஐரோப்பிய யூனியனின் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
விளம்பர இணைய தளங்கள்
கடந்த ஆண்டு தனது ஆண்ட்ராய்டு மொபைல்களில், போட்டி நிறுவனங்களை தடை செய்ததற்காக கூகுள் நிறுவனத்தின் மீது 4.34 பில்லியன் யூரோக்களை ஐரோப்பிய போட்டி ஒழுங்குமுறை ஆணையம் அபராதமாக விதித்தது. அதற்கு முன், 2017ம் ஆண்டு, போட்டி நிறுவனங்களின் விளம்பர இணையதளங்களை தடை செய்ததாக 2.42 பில்லியன் யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அபராதம் ஏன்
இப்போது ஆன்லைன் தேடுதல் தளத்தில் விளம்பரங்களுக்கு தகவல்களை தவறாக பயன்படுத்தியதற்காக ஐரோப்பிய யூனியன் ஒழுங்குமுறை ஆணையம் கூகுளுக்கு 1.49 பில்லியன் யூரோவை அபராதமாக விதித்துள்ளது. ஐரோப்பிய யூனியனின் அதிகாரம் வாய்ந்த அமைப்பான நம்பிக்கைக்கு எதிரான நெறிமுறையாளர் டெக் நிறுவனமான கூகுளுக்கு முறையற்ற போட்டித்தன்மையுடன் செயல்படுவதற்காக அபராதம் விதித்துள்ளது. ஆன்லைன் தேடுதல் தளத்தில் விளம்பரங்களுக்கு தகவல்களை தவறாக பயன்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது" என வர்த்தக போட்டித்தன்மை ஆணையர் மர்கரேத் வெஸ்டாகர் தெரிவித்துள்ளார்.