வாசிங்டன்: கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தான் இந்தியாவின் புல்வாமா பகுதியில் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகம்மது என்கிற தீவிரவாத அமைப்பினரால் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் மத்திய ரிசர்வ் போலிஸாரில் 40-க்கும் மேற்பட்டோர் வீர மரணம் அடைந்தார்கள்.
அதன் பின் இந்தியா அதற்கு பதிலடி கொடுக்க பால்கோட்டில் தாக்குதல் நடத்த, பாகிஸ்தானியர்கள் ஒரு இந்திய போர் விமானியைக் கைது செய்ய, மீண்டும் இந்திய விமானப் படை F16-ஐ சுட்டு வீழ்த்த என பல்வேறு சம்பவங்கள் நடந்துவிட்டது.
கிட்ட தட்ட போருக்கான அத்தனை அறிகுறிகளும், போர் சூழல் நிலவிய போதிலும் இந்தியாவும் பாகிஸ்தானும் சண்டை போடாமல் இருந்தது பெரிய விஷயம் தான் என்கிறார்கள் சர்வதேச அரசியல் விமர்சகர்கள்
தற்போது இந்தியா மற்ரும் பாகிஸ்தானின் அரசியல் சூழலில் இந்தியா மீது மீண்டும் இன்னொரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால், இரு நாட்டுக்கு இடையிலான அரசியல் நிலைமை மோசமானதாக மாறும். இரு நாட்டுக்கும் இடையில் பதற்ற சூழல் அதிகரிக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் பேசிய போது "பாகிஸ்தான், பயங்கரவாதிகளுக்கு எதிராக நிலையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். குறிப்பாக ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகள் பாகிஸ்தான் அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். தற்போது உள்ள சூழலில், இந்தியா மீது இன்னொரு பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றால், நிலைமை கைமீறிப் போய்விடும். அதன் விளைவுகளும் மிக மிக மோசமாகிவிடும். இது இரு நாடுகளுக்கும் ஆபத்தான நிலையாக அமையும். ஒட்டு மொத்தத்தில் தெற்காசிய கண்டமே சலனத்துக்குள்ளாகும்" எனப் பேசி இருக்கிறார்.
மேலும் "பாகிஸ்தான் தரப்பில் சில பயங்கரவாதக் குழுக்களை முழுமையாக முடக்கி இருக்கிறார்கள். சில பயங்கரவாதிகளின் சொத்துகளையும் முடக்கியுள்ளது பாக் அரசு. அதே போல ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மீதும் சில கடுமையான நடவடிக்கைகளை அவர்கள் எடுத்துள்ளனர். இவைகள் எல்லாமே வரவேற்க்கப்பட வேண்டியது தான். ஆனால் அதே நேரத்தில் மிகவும் ஸ்திரத்தன்மையுடைய, நீண்ட நாட்களுக்கு பயன் தரக் கூடிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இது சம்பந்தமாக அமெரிக்கா, பல உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறது" என்றார்.