சென்னை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்க ஒத்துழைப்புத் தருவதாக பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான கடன்தாரர்கள் குழு தெரிவித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனத்தை திவாலாகும் நிலையிலிருந்து மீட்டு தொடர்ந்து விமான சேவையைத் தொடர்வதற்கு அதன் நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளனர்.
நாட்டின் இரண்டாது பெரிய விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் தற்போது மிகுந்த நிதி நெருக்கடியில் உள்ளது. இந்நிறுவனத்துக்கு ரூ.8,200 கோடி கடன் உள்ளது. கடன் பத்திரங்கள் வைத்திருப்போருக்கு வட்டி தரக்கூட பணம் இல்லை. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சமீபகாலமாக கடும் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் பல விமானங்களின் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளது.
விமான ஓட்டுநர்களுக்கு சம்பள பாக்கி என எட்டு திசைகளிலும் சிக்கலில் சிக்கித்தவிக்கிறது ஜெட் ஏர்வேஸ் நிறுவனம். ஜெட் ஏர்வேஸ் விமான ஓட்டுநர்கள் மார்ச் 31ஆம் தேதிக்குள் சம்பள பாக்கியைத் தராவிட்டால் ஏப்ரல் 1 முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்க உள்ளதாகக் கூறியுள்ளனர்.
சம்பளம் இல்லாமல் பணிபுரிவதால் ஏற்பட்டுள்ள மனநிலை பாதிப்பு, பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கூடும் எனவும், அந்நிறுவன பொறியாளர்கள், விமானபோக்குரத்து இயக்கத்துக்கு கடிதம் எழுதியிருப்பதும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதவிர, ஜெட் நிறுவனத்தில் 400 கோடி மதிப்புடைய 24 சதவிகித பங்குகளை வைத்துள்ள இதிஹாட் நிறுவனம், மொத்த பங்குகளை விற்றுவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.
எஸ்பிஐ உதவ தயார்
ஜெட் பிரிவிலேஜ் நிறுவனத்தில் உள்ள ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 50.1 சதவிகித பங்குகளையும் பாரத ஸ்டேட் வங்கிக்கு குறைந்த விலைக்கு விற்க இதிஹாட் முன் வந்துள்ளது. இதனால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் மீள முடியா சிக்கலில் சிக்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டு, விமான சேவையை தொடர்ந்து வழங்குவதற்கு உதவத் தயாராக இருக்கிறோம் என பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான கடன்தாரர்கள் குழு தெரிவித்துள்ளது.
அருண் ஜெட்லி உடன் ஆலோசனை
இது தொடர்பாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னிஷ் குமார், விமானப் போக்குவரத்துத் துறை செயலர் பிரதீப் சிங் கரோலா, பிரதமர் அலுவலக செயலர் நிருபேந்திரா மிஸ்ரா ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
திவால் நடவடிக்கை சரியானதல்ல
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் அரசு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில், இதில் நாட்டின் நலனும், மக்களின் நலனும் உள்ளன. எனவே அரசிடம் இந்த விவகாரம் குறித்து விவாதித்துள்ளோம் என்றார்.
நாட்டின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸை திவால் நடவடிக்கைக்கு உட்படுத்துவது சரியான முடிவு அல்ல. திவால் நடவடிக்கை என்பது நிறுவனத்தை முழுவதுமாக நிறுத்துவதற்கு சமம். ஜெட் ஏர்வேஸ் விவகாரத்தில் திவால் நடவடிக்கையைக் கடைசி தேர்வாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
நரேஷ் கோயல் ராஜினாமா செய்வாரா?
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்க கடன்தாரர்கள் ஒத்துழைப்புத் தருவதாகவும் உறுதியளித்தனர். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகம் சரியில்லை என்றும், ஜெட் ஏர்வேஸை மீட்டு தொடர்ந்து விமான சேவையை வழங்க வேண்டுமெனில் நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர். நரேஷ் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
குத்தகைதாரர்கள் அச்சம்
இதனிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சேவை நிறுத்தப்பட்ட சில விமானங்களை பெற குத்தகைதாரர்களிடம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் இருந்து தங்களின் நிலுவைத் தொகை வராமல் போய்விடக் கூடும் என குத்தகைதாரர்கள் அஞ்சுவதாகவும் அவர்கள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை நாடி வருவதாகவும் கூறப்படுகிறது.