டெல்லி: மோடி தலைமையிலான அரசு 2014 - 15 ஆண்டுகளில் ஒரு புதிய அடிப்படை ஆண்டை கணக்கில் எடுத்துக் கொண்டு இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபியைக் கணக்கிடத் தொடங்கியது.
அதுநாள் வரை 2004- 05-ம் ஆண்டுகளின் அடிப்படையில் வெளியிட்டுக் கொண்டிருந்த ஜிடிபி டேட்டாக்கள், 2014 - 15-ம் ஆண்டுகளில் இருந்து 2011 - 12-ம் ஆண்டின் அடிப்படையில் கணக்கிடத் தொடங்கினார்கள்.
எப்போதும் ஒரு அடிப்படை ஆண்டை மாற்றினால் புதிதாக அறிவிக்கும் ஜிடிபிக்களைத் தான் கணக்கிடுவார்கள். அதாவது வருங்காலத்தைத் தான் கணக்கிடுவார்கள். ஆனால் பாஜக தன்னை விட காங்கிரஸ் ஒன்றும் பொருளாதார ரீதியில் பெரிதாக சாதிக்கவில்லை என்பதை நிரூபிக்க 2011 - 12-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாக கொண்டு பின்னோக்கி கணக்கிட்டது.
எப்படி
அதாவது 2011 - 12-ம் ஆண்டை அடிப்படையாக வைத்துக் கொண்டும் 2005 - 06 முதல் 2011 - 12-ம் ஆண்டு வரை ஜிடிபி வளர்ச்சி என்னவாக இருக்கும் என கணித்தார்கள். உலகம் பேசி ஓய்ந்த 2005 - 06 முதல் 2011- 12 வரையான தரவுகளுக்கு உயிர் கொடுத்தது பாஜக. அதுவும் தேவை இல்லாமல் சீண்டி உயிர் கொடுத்தது.
ஒப்பீடுகள்
ஆண்டு | காங் | பாஜக |
2005 - 06 | 9.3 | 7.9 |
2006 - 07 | 9.3 | 8.1 |
2007 - 08 | 9.8 | 7.7 |
2008 - 09 | 3.9 | 3.1 |
2009 - 10 | 8.5 | 7.9 |
2010 - 11 | 10.3 | 8.5 |
2011 - 12 | 6.6 | 5.2 |
2012 - 13 | 5.5 | |
2013 - 14 | 6.4 | |
2014 - 15 | 7.4 | |
2015 - 16 | 8.2 | |
2016 - 17 | 7.1 | |
2017 - 18 | 6.7 |
இப்படி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அவர்கள் கணக்கு காட்டிய ஜிடிபி எல்லாம் பொய் என்பது போல ஒரு புதிய ஜிடிபியை கணக்கிட்டு கொண்டு வந்தார்கள்.
இரட்டை இலக்கம் மறைப்பு
இதில் காங்கிரஸ் ஆட்சிக் காலமான 2010 - 11-ம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 2004-05 அடிப்படை ஆண்டுக் கணக்கில் 10.3 சதவிகிதமாக இருந்தது. அதில் 2011 - 12 அடிப்படை ஆண்டாக எடுத்துக் கொண்டு வெறும் 8.5 சதவிகிதம் தான் ஜிடிபி என கணக்கு காட்டினார்கள். இப்படி காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்த ஜிடிபிக்கள் எல்லாம் போலியானது. பாஜக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்தவைகள் தான் ஒரிஜினல் என்பது போல ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டது பாஜக. அதோடு அதிவேக பொருளாதார வலர்ச்சியும் நம் மோடி ஆட்சிக் காலத்தில் தான் என பேசவும் தொடங்கிவிட்டார்கள்.
எதிர்ப்பு
உலகம் முழுவதில் இருந்து சுமார் 108 பொருளாதார வல்லுநர்கள் இந்தியாவின் இந்த தரவு திருத்தத்துக்கு கடுமையாக தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தார்கள். அதற்கு பதிலளிக்கும் விதமாக மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலர் சுபாஷ் சந்திர கார்க் முதல் முறையாக விளக்கம் கொடுத்திருக்கிறார்.
எந்த அடிப்படையில்
அரசு பொருளாதார தரவுகளில் திருத்தம் மேற் கொள்வது உண்மை தான். ஆனால் அந்த திருத்தங்களை உண்மையான தரவுகள் அடிப்படையிலும் ஆதாரங்களின் அடிப்படையிலும் தான் மேற்கொண்டது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என விளக்கமளித்திருக்கிறார்.
சப்பை கட்டு
அடுத்த மாதம் தேர்தல் வரப் போகிறது. இந்த நேரம் பார்த்து உலக அளவில் 108 பொருளாதார வல்லுநர்கள் இந்திய அரசின் மீது வைத்திருக்கும் அதிருப்தி மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்பதற்காகவும், இதுவரை வெளியாகாத பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தரவுகளுக்கும் சேர்த்து பதிலளித்து மழுப்பி இருக்கிறார்.
என்ன சொல்லி வந்தார்
2014-ம் ஆண்டு மோடி இந்தியாவில் பிரதமரான போது, ஆண்டுக்கு 1 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்குவேன் எனச் சொல்லி வந்தார். ஆனால் இன்று சுமார் 4 கோடி பேர் வேலை இழந்து நடுத் தெருவில் நிற்பது தான் நிதர்சனமாக நடந்திருக்கிறது.
வெளிநாட்டில்
ஒரு பத்திரிகையிடம் பேசிய பொருளாதார விவகாரத் துறை செயலர் சுபாஷ் சந்திரா "இந்தியா மீது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நல்ல நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இந்திய பொருளாதார செயல்பாடுகள் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அதோடு இந்தியாவின் பொருளாதாரமும் நீண்ட காலத்துக்கு நிலையாக வளரப் போகிறது" என சம்பந்தமே இல்லாமல் மழுப்பி இருக்கிறார்.