டெல்லி: முன்பெல்லாம் கிராமங்களில் ஓரே ஒரு இன்ஜினியர்தான் இருப்பார். சிவில், மெக்கானிக், எலக்ட்ரானிக் படித்து விட்டு அதற்கேற்ப வேலை செய்வார். இப்போதே தெருவுக்கு பத்து பேர் இன்ஜினியரிங் படித்து விட்டு அதில் 8 பேர் வேலை இல்லாமல் தவிக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் தங்களின் படிப்பை முடித்து வெளியேறினாலும் 80 சதவிகிதம் பேர் வேலை கிடைக்காமல் திண்டாடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.
'ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது'என்பார்கள் இன்றைக்கு பெரும்பாலான பட்டதாரிகள் ஏட்டுக்கல்வி மட்டுமே கற்றவர்களாக இருப்பதனா
பிஇ படித்த இன்ஜினியர்கள் இன்றைக்கு கொரியர் பாயாகவும், வீட்டுக்கே உணவு கொண்டுவரும் வேலையிலும். கார் ஓட்டுநராகவும், துணிக்கடையிலும், சூப்பர் மார்க்கெட்டிலும் தங்கள் வேலையை தக்க வைத்து கொள்கின்றனர். இதற்குக் காரணம் பாடத் திட்டத்தைத் தாண்டி இதர திட்ட அறிக்கைகள் சமர்ப்பிப்பதிலும் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால்தான் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் மந்தமாக இருப்பதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்திய அளவில் 80 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் வேலையில்லாமல் உள்ளனர். தமிழகத்தில் 1.6 லட்சம் பொறியியல் பட்டதாரிகளும், 3 லட்சம் பட்டதாரிகளும் வேலையின்றி உள்ளனர் என்று கடந்த ஆண்டு கூட்டம் ஒன்றில் பேசிய கல்வியமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
கல்வி முறையே படித்த பட்டதாரிகளுக்கு வேலை கிடைக்காமல் போவதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் வேலைவாய்ப்பு மதிப்பீட்டு நிறுவனமான ஆஸ்பைரிங் மைண்ட்ஸ் சார்பாக இந்தியாவில் பொறியாளர்களின் வேலைவாய்ப்பு குறித்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் பல அதிரவைக்கும் உண்மைகள் தெரியவந்துள்ளன.
திறமையாளர்கள் குறைவு
இந்தியாவில் வெறும் 3.84 சதவிகித பொறியாளர்கள் மட்டுமே மென்பொருள் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான தொழில்நுட்பத் திறன்களைக் கொண்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதேபோல, 3 சதவிகிதம் அளவிலான பொறியாளர்கள் மட்டுமே செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல், டேட்டா சயின்ஸ், மொபைல் டெவலெப்மென்ட் உள்ளிட்ட தொழில்நுட்பத் திறன்களைப் பெற்றிருப்பதும் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
ஆர்வம் காட்டாத பட்டதாரிகள்
தற்கால புதிய வேலைவாய்ப்புகளில் பொறியாளர்களுக்கான வாய்ப்பு வெறும் 1.7 சதவிகிதமாக மட்டுமே இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான பொறியாளர்கள் தங்களது பாடத் திட்டத்தைத் தாண்டி இதர திட்ட அறிக்கைகள் சமர்ப்பிப்பதிலும் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்வதிலும் ஆர்வம் காட்டுவதில்லை என்பதால்தான் அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் மந்தமாக இருப்பதாக கூறுகிறது இந்த ஆய்வு.
சீனர்களை விட திறமை அதிகம்
கோடிங் எழுதுவதில் இந்தியப் பொறியாளர்களை விட அமெரிக்காவில் நான்கு மடங்கு கூடுதலான திறனைக் கொண்ட பொறியாளர்கள் இருப்பதாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சீனர்களை விட இதில் இந்தியப் பொறியாளர்கள் அதிக திறனைப் பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இன்ஜினியர்கள் தேவை அதிகரிப்பு
இந்த ஆய்வு ஒருபுறம் இருக்க கடந்த ஆண்டு நாஸ்காம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் வருடத்திற்கு இந்தியாவில் மட்டும் 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் தங்களது படிப்பை முடித்துவிட்டு வெளியே வந்தாலும் கால்பங்கு நபர்களுக்கு மட்டுமே வேலை கிடைப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மாணவர்களின் தனித்திறமை
மாணவர்கள் சிறந்த இன்ஜினியர்களாக உருவாகாததற்கு முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் படிக்கும் கல்லூரிகள் தான் என்று குற்றம்சாட்டுகின்றனர் கல்வியாளர்கள். ஐஐடி போன்ற கவுரவமிக்க கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி தரம் உயர்ந்த அளவில் வழங்கப்படுவதாகவும், அங்கிருக்கும் மாணவர்களின் தனித்திறனை வளர்த்துகொள்ள சூழ்நிலை ஏதுவாக இருப்பதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிகரிக்கும் திறமை
இன்ஜினியருக்கு படித்த மாணவர்கள் பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு மற்றொரு காரணமாக இருப்பது பாடத்திட்டமும் தான் என்கின்றனர் கல்வியாளர்கள். இந்திய பொறியியல் பாடத்திட்டத்தையும், சீன பாடத்திட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்தால் முதல் இரண்டு ஆண்டுகளில் இந்திய மாணவர்கள் சீன மாணவர்களை விட அதிக திறன் படைத்தவர்களாக இருப்பதாகவும், பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சீனர்கள் இந்திய மாணவர்களை முந்துவதாகவும் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இன்ஜினியருக்கு படிப்பதே பெருமை என்று நினைத்து காசை வீணாக்காமல் பிடித்த படிப்பை குறைவான காசு செலவு செய்து படிக்க வைத்தாலே போதும் மாணவர்களால் ஜெயிக்க முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.