டெல்லி: இந்தியாவில் இனி விமான பயணச் சீட்டுகளின் விலை நிலையாக இருக்க ஒரு வழியைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தால் லீஸ் கட்டணங்கள் செலுத்த முடியாமல் தேங்கி நிற்கும் விமானங்களை இயக்கப் போகிறதாம்.
இப்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு விமானங்களை இயக்க போதுமான பணம் இல்லை. அதனால் தொடர்ந்து ஒவ்வொரு விமானமாக ரத்து செய்யப்படுகிறது. ஆனால் இதுவே ஸ்பைஸ் ஜெட்டுக்கு போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களுக்கு விதித்த தடையில் தங்கள் வழித் தடங்களில் விமானங்களை இயக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆக காசு இருக்கும் ஸ்பைஸ் ஜெட், காசு இல்லாமல் தவிக்கும் ஜெட் ஏர்வேஸால் லீஸுக்கு பணம் கொடுக்க முடியாமல் கைவிடப்பட்ட விமானங்களை இயக்கப் பார்க்கிறார்கள்.
ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ் இந்தியாவில் 119 விமானங்களை இயக்கி வந்தது. ஆனால் இப்போது காசு இல்லாததால் வெறும் 41 விமானங்கள் மட்டுமே பறக்கின்றன. சுமார் 50 விமானங்களுக்கு மேல் லீஸ் தொகை கட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஸ்பைஸ் ஜெட் தரை இறக்கம்
ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு 12 போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தரை இறக்கப்பட்டிருக்கிறது. ஆக ஜெட் ஏர்வேஸின் 50 விமானங்களில் ஒரு 12 விமானங்களையாவது முதலில் ஸ்பைஸ் ஜெட் லீஸுக்கு எடுக்க வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள்.
நிலையாகும் விலை
இதனால் இந்திய விமானப் பயணிகளுக்கு தேவையான எல்லா விமான சேவைகளும் ஓரளவுக்காவது முழுமையாக கிடைக்கும். அப்படி கிடைக்கும் போது அதிக விலைக்கு விமானப் பயணச் சீட்டுகளை விற்பது தவிர்க்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள் ஸ்பைஸ் ஜெட் அதிகாரிகள். இப்போது ஜெட் ஏர்வேஸுக்கு விமானங்களை லீஸுக்கு கொடுக்கும் நிறுவனத்துடன் ஸ்பைஸ் ஜெட் தொடர்ந்து பேசி வருகிறார்களாம்.
பெயர் மாற்றம்
அப்படி ஒருவேளை ஸ்பைஸ் ஜெட்க்கு இந்த டீல் ஒத்து வந்தால் அடுத்த சில வாரங்களில் விமானங்களை பட்டி டிங்கரிங் எல்லாம் பார்த்துவிட்டு விமானங்களில் ஸ்பைஸ் ஜெட்டின் பெயரை எல்லாம் மாற்றிக் கொடுத்துவிடுவார்களாம்.
இந்தியாவில் லீஸுக்கு விடுவதே புத்திசாலித்தனம்
விமானங்களை லீஸுக்கு விடும் நிறுவனங்களும் தங்களிடம் இருக்கும் விமானங்களை வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று லீஸுக்கு விடுவதை விட இந்தியாவிலேயெ ஒரு நல்ல விமான சேவை நிறுவனத்திடம் லீஸுக்கு விடுவதையே விரும்புகிறார்களாம்.
மேலும் சரியும்
இப்போது 41 விமானங்களை இயக்கும் ஜெட் ஏர்வேஸ் இன்னும் சில வாரங்களில் தன் விமான சேவையின் எண்ணிக்கையை இன்னும் குறைத்துக் கொள்ள வேண்டி இருக்கும். இப்போது மக்களவைத் தேர்தல் வேறு நடைபெறுவதால் அரசு ஜெட் ஏர்வேஸைக் காப்பாற்றுமாறு எஸ்பிஐ-யிடம் கேட்டிருக்கிறது. இப்போது எஸ்பிஐ வங்கியும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு ஒரு சின்ன இடைக்கால பண உதவி செய்ய பேசி வருகிறார்களாம்.