கோயம்புத்தூர்: தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு வெளிநாட்டு கரன்ஸிகள் சிக்கி இருக்கின்றன. சுமார் 43.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்ரி இருக்கிறார்கள்.
கோயம்புத்தூரில், ஒண்டிப்புதூர் பாலம் அருகே, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த ஒருவரிடம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அவரிடம், 35,000 டாலர் அமெரிக்கப் பணம், சிங்கப்பூர் பணம் 22,000 டாலர் சிங்கப்பூர் பணம், 10,000 யூரோ ஐரோப்பிய ஒன்றியப் பணம் இருப்பதையும், அதற்கு முறையான டாக்குமெண்டுகள் இல்லாததையும் விசாரித்து பறிமுதல் செய்திருக்கிறார்கள்.
அனைத்து வெளிநாட்டு கரன்ஸிகளையும் இன்றைய தேதிக்கு இந்திய ரூபாய் மதிப்பிட்டால் 43.5 லட்சம் ரூபாய் வருகிறதாம். ஹோண்டா ஆக்டீவாவில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர், பாப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் என்றும், சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் பகுதியில் எபிக்ஸ் கேஷ் வேர்ல்டு மணி என்கிற வெளிநாட்டு கரன்ஸிகளை மாற்றிக் கொடுக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த 43.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்ஸிகளோடு அவர் கோவை விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்ததாகவும் பதிலளித்திருக்கிறார்.
இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அதிகாரிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைதிருக்கிறார்கள். அந்தப் பணத்துக்கு நிறுவனத்தின் சார்பில் உரிய ஆவணங்கள் இருப்பதாகக் கூறிய ஜெயராம், பறக்கும் படை அதிகாரிகளிடம் ஆவணங்களையும் கொடுத்திருக்கிறார்.
பேப்பர்களில் திருப்தி அடையாத அதிகாரிகள், மொத்த தொகையையும் வருமான வரித்துறையிடம் கொடுத்திருக்கிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு 10 லட்சம் ரூபாய்க்கு மேல் என்பதால், அந்தப் பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக மாவட்ட அதிகாரிகளும் சொல்கிறார்கள்.
தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், வருமான வரித்துறையிடம் உரிய ஆவணங்கள் கொடுத்து பணத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் ஜெயராமனிடம் சொல்லி இருக்கிறார்களாம்.