டெல்லி: பிஎஃப் செலுத்தும் அமைப்பு சார்ந்த வேலை வாய்ப்புகள் கடந்த ஜனவரி 2019-ல் 8.96 லட்சம் அதிகரித்திருக்கிறதாம். அதுவும் கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறதாம்.
கடந்த ஏப்ரல் 2018-ல் இருந்து ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்குபவர்கள் செலுத்தும் பிஎஃப் தொகையினை அடிப்படையாக வைத்துக் கொண்டு இந்த வேலைவாய்ப்பு தரவுகளை வெளியிடுகிறார்கள்.
செப்டம்பர் 2017-ல் இருந்து மாதாமாதம் எவ்வளவு வேலை வாய்ப்புகள் அதிகம் உருவாகிறது என்கிற கணக்கை வெளிப்படையாக வெளியிட்டு வருகிறார்கள் EPFO அலுவலகம். கடந்த செப்டம்பர் 2017-ல் 2.75 லட்சம் புதிய வேலைகள் உருவாக்கப்பட்டனவாம்.
131% அதிகம்
கடந்த ஜனவரி 2018-ம் ஆண்டை விட ஜனவரி 2019-ல் பிஎஃப் செலுத்தும் அமைப்பு சார்ந்த வேலை வாய்ப்புகள் 131 சதவிகிதம் அதிகரித்திருப்பதைப் பார்க்க முடிந்தது.
மொத்தம் 76.48 லட்சம்
கடந்த செப்டம்பர் 2017-ல் இருந்து ஜனவரி 2019 வரையான காலத்தில் சுமார் 76.48 லட்சம் புதிய பிஎஃப் கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கிறதாம். ஆக கடந்த 17 மாதங்களில் இத்தனை வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன.
வாழ்நாள் உச்சம்
அதே போல் ஜனவரி 2019-ல் மட்டும் 8.96 லட்சம் வேலைவாய்ப்புகள் ஒரே மாதத்தில் உருவாகி இருக்கின்றன. கடந்த செப்டம்பர் 2017-ல் இருந்து கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒரே மாதத்தில் அதிக வேலை வாய்ப்பு உருவாகி இருப்பது இந்த ஜனவரி 2019-ல் தானாம்.
தகிடு தத்தோம்
கடந்த டிசம்பர் 2018-ல் முதலில் 7.16 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாகச் சொன்ன பிஎஃப் அலுவலகம், மீண்டும் திருத்தம் செய்து 7.03 லட்சம் வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாக்கப்பட்டதாகச் சொன்னார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.