வாஷிங்டன்: இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 7 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள மேலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகளையம் எடுக்க தயங்கக்கூடாது என்றும் ஜெர்ரி ரைஸ் வலியுறுத்தினார்.
மத்தியில் இதற்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில இருந்த போது தள்ளாட்டத்தில் தள்ளாட்டத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம், 2014ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்த பின்னர் சற்று வேகமெடுக்க தொடங்கியது. முதலில் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த தொடங்கியது.
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் முதல் சீர்திருத்த நடவடிக்கையாக கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழக்க செய்து செல்லாததாக அறிவித்தார். இதற்கு பதிலாக முற்றிலும் புதிய வடிவங்களில் 10, 50, 100, 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை கொண்டு வந்தார். பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் 99 சதவிகிதம் பொது மக்களிடம் இருந்து திரும்ப பெறப்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை முதல் வரிச் சீர்திருத்த நடவடிக்கையாக சரக்கு மற்றும் சேவை வரி என்னும் ஜிஎஸ்டி வரிமுறை அமல்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளால் ஜிடிபி சரிவடைந்தாலும் 2018 -19ஆம் நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் வரையிலான 3ம் காலாண்டில் எதிர்பார்த்ததை விட வேகமாக உயர்ந்து 7.2 சதவிகிதமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய புள்ளியியல் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் உலகில் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாக IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஎம்எஃப் தகவல் தொடர்பு இயக்குநர் ஜெர்ரி ரைஸ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், கடந்த 5 ஆண்டுகளில் சராசரியாக 7 சதவீதம் என்ற பொருளாதார வளர்ச்சியுடன், உலகின் வேகமாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகக் குறிப்பிட்டார்.
முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், உயர் வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்ள இந்தியா மேலும் பல பொருளாதார சீர்திருத்தங்களை செய்ய வேண்டும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்தார். அடுத்த மாதத்தில் வெளியிடப்பட உள்ள உலக பொருளாதார ஆய்வறிக்கையில், இந்திய பொருளாதாரம் குறித்த விரிவான விவரங்கள் இடம்பெறும் எனவும் அவர் கூறினார்.
இந்திய அமெரிக்க பொருளாதார அறிஞரும், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணருமான கீதா போபிநாத் கடந்த 5 ஆண்டுகளாக இந்தியப் பொருளாதார நடவடிக்கைகளை ஆராய்ந்து தகவல் அளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.