டெல்லி: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிர்வாகப்பொறுப்பு இயக்குநர்கள் பொறுப்பில் இருந்து நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் இரண்டு நாமினி இயக்குநர்கள் அசிம் சைதி, கவுரங் ஷெட்டி ஆகிய நால்வரும் விலக வேண்டும் என்று எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் வலியுறுத்தியுள்ளார். ஜெட் ஏர்வேஸ் திவாலாகமல் தப்பிக்க இது ஒன்றுதான் வழி என்றும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் இரண்டாது மிகப் பெரிய விமானப் போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸூக்கு இது போதாத காலம்தான். விமான எரிபொருள் வாங்கியதில் தொடங்கி ஊழியர்களுக்கு சம்பளம் தராதது வரையில் ஏகப்பட்ட நிதி நெருக்கடியில் சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது.
இந்நிறுவனத்துக்கு சுமார் ரூ.8,200 கோடி வரையில் கடன் கழுத்தை இறுக்கி உள்ளது. மேலும், கடன் பத்திரங்கள் வாங்கியவர்களுக்கு வட்டி கட்டுவதற்குக்கூட கையில் காசு கிடையாது.
தவிக்கும் ஊழியர்கள்
விமானங்களை குத்தகைக்கு எடுத்த வகையில் குத்தகை பணம் தராததால் சுமார் 30க்கும் மேற்பட்ட விமானங்களை பறக்க விடாமல் குத்தகை நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. விமான எரிபொருள் கொள்முதல் செய்ததற்கும் கடன்தாரர்களுக்கு பணத்தை தரமுடியவில்லை. இன்னொரு பக்கம் பைலட்டுகள் முதல் பொறியாளர்கள் வரையிலும் சம்பள பாக்கி பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. இதனால் மன உளைச்சலில் இருப்பதாக மத்திய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சிக்கலுக்கு மேல் சிக்கல்
இது ஒரு பக்கம் இருக்க ஜெட் ஏர்வேஸின் முக்கிய பங்குதாரரான இதிஹாட் ஏர்வேஸ் தன்னுடைய் பங்குகளை வாங்கிக் கொள்ளும்படி எஸ்பிஐ வங்கியை கேட்டுக்கொண்டுள்ளது மற்றொரு பக்கம் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. எட்டு திசையில் இருந்தும் ஜெட் ஏர்வேஸூக்கு சிக்கல்கள் சூழந்திருந்தாலும் இந்நிறுவனத்தின் தலைவர் நரேஷ் கோயல் எதற்கும் அசைந்து கொடுக்காமல் உள்ளார்.
என்ன செய்யலாம்
ஜெட் ஏர்வேஸ் திவாலாகாமல் இருக்க வேண்டும் என்றால் தலைமையை மாற்ற வேண்டும் என்று கடன்தாரர்களும் ஊழியர்களும் என்று போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். தரை இறங்கிய ஜெட் ஏர்வேஸ் விமானங்களை பறக்க விட என்ன செய்யலாம் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் கடன்தாரர்கள் சார்பாக எஸ்பிஐ தலைவர் ரஜ்னீஸ் குமார் பேசினார். அப்போது திவால் நடவடிக்கை எடுக்காமல் நிர்வாகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறியதாக தெரிகிறது.
நான்கு பேர் விலக வலியுறுத்தல்
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜ்னீஸ் குமார், ஜெட் ஏர்வேஸ் நிர்வாகப் பொறுப்புகளிலிருந்தும், இயக்குநர் குழுவிலிருந்தும்
நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா மற்றும் இரண்டு நாமினி இயக்குநர்களான அசிம் சைதி, கவுரங் ஷெட்டி ஆகிய நால்வரும் விலக வேண்டும் என ரஜ்னீஷ் குமார் கூறியுள்ளார்.
திட்டம் தயார்
ஜெட் ஏர்வேஸ் திவால் ஆகும் நிலையிலிருந்து மீட்கும் அனைத்து முயற்சிகளையும் கடன்தாரர்கள் எடுக்கத் தயாராக உள்ளோம். ஐந்து மாதங்களுக்கு முன்பிருந்தே ஜெட் ஏர்வேஸை மீட்பதற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். தற்போது திட்டம் தயாராக உள்ளது. தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ் விமான சேவையை வழங்கும்படியாக அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறியுள்ளார் ரஜ்னீஷ் குமார்.