டெல்லி: புதிதாக தொடங்கப்பட்ட நிறுவனங்களில் 120 ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டு வரி செலுத்துவதில் இருந்தது விலக்கு அளிப்பதாக மத்திய வருமான வரிகள் ஆணையம் அறிவித்துள்ளது.
தங்களுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்று 150 புதிய நிறுவனங்கள் மத்திய வருமான வரித்துறையிடம் விடுத்த கோரிக்கையில் 120 நிறுவனங்கள் மட்டும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக தெரியவந்துள்ளது.
புதிய நிறுவனங்களில் சில நிறுவனங்கள் அளித்த விண்ணப்பங்களில் போதிய விபரங்கள் இல்லாததால் அவற்றுக்கு வரி விலக்கு அளிக்கும் கோரிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா
நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கும் விதமாக புதிதாக தொழில் தொடங்க முன் வருபவர்களை உற்சாகப்படுத்த தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு பல சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. அதிலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க முன்வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது
ஸ்டார்ட் அப்
மத்தியில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (SEZ) தொழில் தொடங்க முன் வருவோரை ஊக்கமளிக்க வரிச்சலுகைகளை வாரி வழங்கி வந்தது. தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜகவும் அதே பாணியில் இறங்கி உள்ளது ஆனால் அதற்கு வைத்த பெயர்தான் ஸ்டார்ட் அப் என்னும் அடையாளம்.
10 ஆண்டுகளுக்கு வரி கிடையாது
கடந்த பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் மத்திய அரசு புதிதாக தொழில் தொடங்க முன்வருவோரை உற்சாகப்படுத்தும் விதமாக ஸ்டார்ட் அப் (Startup) நிறுவனங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பதாக அறிவித்தது. முன்னர் இச்சலுகை 7 ஆண்டுகளாக இருந்தது. புதிய நிறுவனம் 10 ஆண்டுகள் வரையிலும் இந்த வரிச் சலுகையை பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 120 புதிய நிறுவனங்களுக்கு வரி விதிப்பு கிடையாது என மத்திய நேரடி வரிகள் ஆணையம் (CBDT) தெரிவித்துள்ளது.
ஸ்டார்ட் அப் நிம்மதி
மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் உத்தரவின்படி, புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திரட்டும் முதலீடுகளுக்கு, அவை சந்தை மதிப்பை விட கூடுலாக இருந்தாலும் வரி செலுத்த வேண்டியதில்லை. வருமான வரித் துறை வெளியிட்ட அறிவிப்பின் மூலம் புதிதாக ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கியவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.
ஏன்ஜல் வரி
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த ஆண்டு தாக்கல் செய்த வருமான வரி ரிட்டன்களை மதிப்பீடு (Assessment) செய்த வருமான வரித் துறையினர், இந்நிறுவனங்கள் திரட்டிய முதலீடுகளுக்கு (Share Premium) ஏன்ஜல் வரி (Angel Tax) செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தவறுதலாக மதிப்பிட்டு இந்நிறுவனங்களுக்கு முறைப்படி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
வரி விலக்கு சலுகை
சில ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் 150 ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் அடங்கம். புதிய நிறுவனங்களாக இருக்கும் பட்சத்தில் அவை மத்திய நேரடி வரிகள் ஆணையம் (CBDT) பிறப்பித்த வரி விலக்கு சலுகைக்கான உத்தரவை காண்பிக்க முடியும்.
வரி விலக்கு பெறுவது எப்படி
முந்தைய ஆண்டுக்கான மதிப்பீடுகள் (Assessment) முடிவடைந்து இறுதியாக செலுத்த வேண்டிய வரி விதிப்பு குறித்த உத்தரவு (Assessment Order for Tax Due) வழங்கப்படும்போது ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த வரி விலக்கு உத்தரவை காட்ட முடியும். அல்லது உயர் அதிகாரிகளிடம் உரிய ஆவணங்களைக் காட்டி வரி விலக்கு பெற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
120 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
நடப்பு மார்ச் மாத தொடக்கத்தில் சுமார் 150 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் வரிவிலக்கு கோரி விண்ணப்பித்திருந்தன. இவற்றில் 120 நிறுவனங்கள் ஸ்டார்ட் அப் நிறுவனங்களாக அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கான வரி விலக்கு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களின் விண்ணப்பத்தில் தவறுகள் இருக்கக்கூடும், அல்லது அவை ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான வரையறை அப்பாற்பட்டு இருக்கலாம் என்று வருமான வரி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வருமான வரிச்சட்டம் பிரிவு 56(2) (viib)
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தங்களின் தொழில் மற்றும் உள் வர்த்தகத்திற்கு தேவையான மூலதனத்தை சந்தையில் வாங்கும் போது அது சந்தை மதிப்பை விட கூடுதலாக இருக்கும் பட்சத்தில், அவை வருமானமாக கருதப்பட்டு வருமான வரிச் சட்டம் 56(2) (viib) படி பங்குப் பிரீமியத்திற்கு (Share Premium) வரி செலுத்துவது கட்டாயமாகும். கடந்த பிப்ரவரி மாதத்தில் புதிய உத்தரவின் படி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இந்த சட்டப் பிரிவுகளில் இருந்து வரி விலக்கு பெற முடியும்.
சலுகை ஏன்
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் புதிதாக உருவாவதோடு, வசதியும் திறமையும் உள்ளவர்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை உரு வாக்கவும் அரசு இந்தச் சலுகையை அளித்துள்ளது.