டெல்லி: ரயில் பயணிகளுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறது இந்திய ரயில்வே. இனி ரயில் புறப்படும் நேரத்துக்கு நான்கு மணி நேரத்துக்கு முன் வரை Boarding station-ஐ (நாம் எந்த ஸ்டேஷனில் இருந்து பயணத்தைத் தொடங்க இருக்கிறோமோ அந்த ஸ்டேஷனைத் தான் Boarding station என்கிறோம்) மாற்ற முடியும்.
இதுவரை Boarding station-ஐ மாற்ற வேண்டும் என்றால் ரயில் புறப்பாடு நேரத்துக்கு 24 மணி நேரத்துக்கு முன்பே தங்கள் Boarding station-களை மாற்றி விட வேண்டும்.
இந்த புதிய வசதி வரும் மே 01, 2019-ல் இருந்து நடைமுறைக்கு வருகிறதாம். இந்த சேவையை ஆன்லைனில் ஐஆர்சிடிசி வலைதளத்தைப் பயன்படுத்தி ரயில் டிக்கேட்டுகளை புக் செய்தவர்கள் ஆன்லைனிலேயே மாற்றம் செய்து கொள்ளலாமாம். நேரடியாக ரயில்வே நிலையங்களில் இருந்து வாங்கிய பயணச் சீட்டுகளுக்கு ரயில்வே உதவி எண் 139-ல் தொடர்பு கொண்டு மாற்றிக் கொள்ளலாமாம்.
தத்களுக்கும் உண்டு
இந்த சேவை தத்கல் புக்கிங்களுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாமாம். இந்த சேவையை முதல் முயற்சியாக இந்தியா முழுமைக்கும் இருக்கும் சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில் மட்டும் முன்னோட்டம் பார்த்துவிட்டு இந்தியா முழுமைக்கும் கொண்டு வருவார்களாம்.
Refund கிடையாது
இப்போது புதிதாக மாற்றம் செய்த Boarding station-ல் இருந்து நாம் சென்று சேரும் இடம் வரையிலான பயணத்துக்கு மட்டும் கட்டணம் போக மீத தூரத்துக்கான கட்டணத்தை திரும்பப் பெற முடியாது.
உதாரணம்
ஒருவர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை பயணிக்க வேண்டும். அவர் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ரயில் டிக்கேட்டையும் பதிவு செய்துவிட்டார். இப்போது புதிய திட்டத்தின் படி திருச்சியில் இருந்து இவர் பயணிக்கத் தொடங்குகிறார். எனவே இப்போது சென்னை முதல் திருச்சி வரையான பயணக் கட்டணத்தை refund கொடுக்கும் படி ரயில்வே நிர்வாகத்திடம் கேட்க முடியாது.
படுக்கைகள் காலியா
அதோடு ரயில் பயணம் தொடங்கிய பின் எந்த எந்த இருக்கைகள் மற்றும் படுக்கைகள் காலியாக இருக்கிறது என்பதைப் பார்க்கும் சேவையையும் தொடங்கி இருக்கிறார்கள். வழக்கமாக காத்திருப்புப் பட்டியியலில் இருக்கும் பலரும் ரயிலில் ஏறிவிட்டு காலி இருக்கைகள் மற்றும் படுக்கைகளைத் தேடி டிடிஆரிடம் அலைவார்கள். இப்போது இந்த நடைமுறைக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்கள். இனி ஒரு செயலி மூலமே காலி இருக்கை மற்றும் படுக்கைகளை பார்த்துவிடலாம்.
சார்ட்டுகள்
பொதுவாக ஒரு ரயில் பயணத்தின் போது, ரயில் தன் முதல் ஸ்டேஷனில் இருந்து புறப்பட 4 மணி நேரம் முன்பு ஒரு சார்ட் தயாரிக்கப்படும். இது தான் முதல் சார்ட். அதன் பின் முதல் சார்ட்டில் பெயர் வந்தவர்கள் யாராவது தங்கள் பயணத்தை ரத்து செய்திருந்தால் அவைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு ரயில் புறப்பட 30 நிமிடங்களுக்கு முன் தயாரிக்கப்படும் சார்ட் தான் இரண்டாவது சார்ட். இந்த இரண்டாவது சார்ட் தயாரித்த பின்பும் காலி இருக்கைகள் மற்றும் படுக்கைகள் இருந்தால் அவைகளை IRCTC செயலி மூலம் ரயில் பயணிகள் பார்க்க முடியுமாம். அந்த சேவையையும் ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் தொடங்கி வைத்திருக்கிறாராம்.