டெல்லி: காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மல்லிகார்ஜூன கார்கே என அனைத்து பிராந்திய தலைவர்களும் ஆஜராகி இருந்தனர்.
கட்சி செயற்குழுக் கூட்டம் முடிந்த பின் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் அவர் பேசிய முக்கிய செய்திகள் மட்டும் இங்கே கொடுத்திருக்கிறோம். இந்தியாவில் இருக்கும் ஏழைக் குடும்பங்களில், குறிப்பாக கடைசி 20 சதவீதம் ஏழை குடும்பங்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க 5 கோடி குடும்பங்களளுக்கு குறைந்தபட்ச வருமானத் திட்டத்தின் கீழ் பயன் பெறும் விதத்தில் ஒரு திட்டத்தை கொண்டு வந்திருக்கிறோம்.
எங்கள் புதிய திட்டப்படி நாட்டில் உள்ள 5 கோடி ஏழைக் குடும்பங்களில் ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் 25 கோடி மக்கள் நேரடியாகப் பயன்பெறுவார்கள் என ஒரு இன்ப அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்திருக்கிறார். அதுவும் தேர்தல் நேரம் பார்த்து.
ஏழைமை ஓட்டு
இந்தியாவில் ஏழைமையை முற்றிலுமாக ஒழிக்க ஒரு கடைசி தாக்குதல் தொடங்கி இருக்கிறோம். உலகிலேயே இந்த திட்டம் போன்று வேறு எந்த நாட்டிலும், எந்த நகரங்களிலும் இப்படி ஒரு திட்டம் இல்லை" எனச் சொன்னார்.
கணக்கீடுகள் உண்டு
அதோடு இந்த திட்டத்தை ஏதோ அவசர அவசரமாக தீட்டியதோ அல்லது தேர்தலுக்காக கொண்டு வரப் படுவதோ அல்ல. இந்த திட்டம் ஆழ்ந்து யோசித்து, கணக்கீடுகள் எல்லாம் செய்து தீட்டப்பட்டது எனவும் சொல்லி இருக்கிறார். ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்த எவ்வளவு தொகை செலவாகும் என்கிற விவரங்களை வெளியிடவோ சொல்லவோ இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
ஆலோசனைகள்
இந்த திட்டம் தொடர்பாக ஏராளமான பொருளாதார வல்லுநர்களோடும், கல்வியாளர்களோடும் கலந்து பேசி, ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டு, விவாதித்து கொண்டு வரப்பட்ட திட்டமாம்.
நிதியும் நீதியும்
கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் பணத்துக்கும் சரி பிழைப்புக்கும் சரி, ரொம்பவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே அவர்களுக்கு நாங்கள் நீதி வழங்க விரும்புகிறோம் எனவும் உணர்ச்சி வசமாக பேசி இருக்கிறார் ராகுல் காந்தி.
கருத்து
இப்போது ராகுல் காந்தி சொல்லி இருக்கும் திட்டத்துக்கு 3.6 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இங்கு பாஜகவின் ஆண்டுக்கு 6,000 ரூபாய் திட்டத்துக்கே சுமார் 75,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அந்த தொகையைக் கூட திரட்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. இப்போது அதை விட ஐந்து மடங்கு அதிக செலவுள்ள திட்டத்தை அறிமுகப்படுத்தினால் இந்திய அரசு மொத்தமும் கடனில் தான் ஓட வேண்டி இருக்கும் எனச் சொல்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.