மும்பை: மும்பை கஃபே பாரடே பகுதியில் அம்பானி குடும்பத்துக்கு சொந்தமான வீட்டை சீரமைப்பு பணிகள் மேற்கொண்டதாக போலியாக கணக்கெழுதி சுமார் 17 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த முகேஷ் ஷா என்பவர் அம்பானி குடும்பதிற்கு சொந்தமான அடுக்கு மாடி குடியிருப்பை சீரமைப்பதற்காக வேண்டி நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து மற்ற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி உள்ளார்.
புதிய இயக்குநராக பதவியேற்றவர் ரிலையன்ஸ் நிறுவன கணக்குகளை சரி பார்த்ததில் 2 நிறுவனங்களின் கணக்கு வழக்குகளில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் திருபாய் அம்பானிக்கு சொந்தமாக மும்பை கஃபே பாரடே பகுதியில் சீ வின்ட் என்ற 18 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த வீட்டில்தான் கடந்த 2010ஆம் ஆண்டு வரையிலும் முகேஷ் அம்பானி தன் தாயார் கோகிலாபென் மற்றும் குடும்பத்தாருடன் வசித்து வந்தனர். இதன் இன்றைய சந்தை மதிப்பு குறைந்த பட்சம் 500 கோடி ரூபாயாவது இருக்கக்கூடும்.
முகேஷ் அம்பானி கடந்த 2010ஆம் ஆண்டு நவம்பர் முதல் தெற்கு மும்பையில் உள்ள அண்ட்டிலியா(Antilia) என்ற 27 அடுக்குமாடி குடியிருப்புக்கு குடிபெயர்ந்துவிட்டார். அதன் பின்பு சீ விண்ட் குடியிருப்பை ரிலையன்ஸின் துணை நிறுவனங்களான இஷா பில்ட்டெக், இஷா இன்ஃப்ராடெக் என்ற இரு நிறுவனங்கள் தான் பராமரித்து வருகின்றன.
ரிலையன்ஸ் நிறுவனத்தில் இயக்குநராக இருந்துவந்த முகேஷ் ஷா, 56 என்பவர் தான் சீ விண்ட் அடுக்குமாடி குடியிருப்பில் பராமரிப்பு பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்புகளையும் கவனித்து வந்துள்ளார். இவர் கடந்த 1988ஆம் ஆண்டு முதலே இந்நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீரென முகேஷ் ஷா தன்னுடைய பணியை ராஜினாமா செய்துவிட்டு மாயமாகிவிட்டார்.
முகேஷ் ஷா மாயமானதைத் தொடர்ந்து புதிய இயக்குநராக பொறுப்பேற்றவர் 2 நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்துள்ளார். கணக்குகளை ஆராய்ந்த அவருக்க மயக்கம் வராத குறைதான். முகேஷ் ஷா சீ விண்ட் அடுக்கு மாடி கட்டிடத்தில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதாக கணக்கெழுதி சுமார் ரூ.16.90 கோடியை மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.
அம்பானிக்கு சொந்தமான சீ விண்ட் கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் செய்வதாக முகேஷ் ஷா நிறுவன வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை மற்ற வங்கிக் கணக்குகளுக்கு மாற்றி உள்ளார். சந்தேகமடைந்த புதிய இயக்குநர் தீவிர விசாரணை நடத்தியதில் வீட்டில் சீரமைப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கப்பரடே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் முகேஷ் ஷாவையும் மற்றொருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.