மும்பை: சென்செக்ஸ் தன் 38,000 என்கிற பெஞ்ச்மார்க்கில் இருந்தும், நிஃபிட்50 தன் 11,400 என்கிற லெவல்களில் இருந்து இறக்கம் கண்டும் வர்த்தகமாகி வருகிறது.
கோத்ரேஜ் ப்ராபர்டீஸ், வோல்டாஸ், ஜெட் ஏர்வேஸ், வேதாந்தா, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, யெஸ் பேங்க், ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், டிஎல்எஃப், சோபா, ஜீ எண்டர்டெயின்மெண்ட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ என ஏகப்பட்ட முன்னனி நிறுவனப் பங்குகள் நல்ல லாபத்தில் விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் போதும் சந்தை தன் புதிய லெவல்களில் இருந்து இறங்கி வர்த்தகமாகிறது.
ஏன் இந்த இறக்கம், என்னென்ன காரணங்களால் சென்செக்ஸும், நிஃப்டியும் தங்கள் புதிய லெவல்களில் இருந்து இறக்கம் கண்டிருக்கிறது.
உலக சந்தைகள்
இன்று காலை வர்த்தகமாகத் தொடங்கிய ஆசிய சந்தைகள் அனைத்துமே இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஜப்பானின் நிக்கி 2.9%, தென் கொரியாவின் கோஸ்பி 1.5% என கொடூரமாக இறக்கத்தில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த வெள்ளிக் கிழமை (மார்ச் 22, 2019) அமெரிக்க சந்தைகள் அனைத்தும் கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு பெரிய சரிவுகளைச் சந்தித்திருக்கிறது. டவ் ஜோன்ஸ் 1.8%, எஸ் அண்ட் பி 500 1.9%, நாஸ்டாக் 2.5% என இறக்கம் கண்டு வர்த்தகமாயின. இந்த இறக்கங்களில் எதிரொலி தான் இந்திய சந்தைகளிலும் எதிரொலிக்கின்றன.
ரெசசன்ஸ்
அமெரிக்காவின் 10 ஆண்டு டிரஷரி பாண்டுகளின் வட்டி விகிதம், கடந்த ஒரு வருடத்தில் இல்லாத அளவுக்கு குறைவாக நிர்ணயித்திருக்கிறது. அதோடு மார்ச் மாத தொழிற்துறை உற்பத்திகளும் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்பதையும் கணக்கில் கொண்டு இத்தனை குறைவாக வட்டியை நிர்ணயித் திருக்கிறார்களாம்.
நம்பிக்கை இல்லை
குறிப்பாக அமெரிக்காவின் 3 மாத டிரஷரி பில்களின் வட்டி விகிதம் 10 ஆண்டு கால டிரஷரி பில்களுக்கான வட்டி விகிதங்களை விட அதிகமாக இருக்கிறது. இப்படி 2007-ம் ஆண்டு வாக்கில் தான் 3 மாத பில்களுக்கு 10 ஆண்டு பில்களை விட அதிக வட்டி கொடுத்தது அமெரிக்க டிரஷரி. அதன் பின் இப்போது தான் கொடுக்கிறார்கள். சுருக்கமாக நீண்ட கால முதலீட்டுக்கு கொடுக்கும் வட்டியை விட குறுகிய கால முதலீட்டுக்கு கூடுதல் வட்டி கொடுப்பது நீண்ட காலத்தில் நம்பிக்கை குறைவதைத் தான் காட்டுகிறது. அதனால் தான் அமெரிக்க சந்தையும், இந்திய சந்தைகளும் சரிவில் வர்த்தகமாகின்றன.
லாபத்தை எடு
கடந்த மார்ச் மாதம் முழுவதும் பெரும்பாலான வர்த்தக நாட்களில் சென்செக்ஸ் தினமும் ஒரு புதிய உச்சத்தை தொட்டுக் கொண்டே தான் இருந்திருக்கிறது. குறிப்பாக மார்ச் 15 முதல் மார்ச் 22 வரையான வர்த்தக நாட்களிலும் சந்தை 38,000 புள்லிகளுக்கு மேலேயே வர்த்தகம் நிறைவடைந்து நல்ல உச்சத்தை தொட்டிருக்கிறது. ஆக வந்த வரை லாபம் என்று நினைத்தவர்கள் சந்தையில் தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறி இருக்கிறார்கள். இதனாலும் சந்தை இறக்கத்தை சந்தித்திருக்கிறது என எடுத்துக் கொள்ளலாம்.
பேங்க் நிஃப்டி
பேங்க் நிஃப்டியின் ஏற்றம் நிஃப்டியின் ஏற்றத்தில் அதிக பங்கு வகித்தது. ஆனால் இப்போது பேங்க் நிஃப்டி சுணங்கிய உடனேயே நிஃப்டியும் புதிய லெவல்களில் தாக்கு பிடிக்க முடியாமல் இறக்கம் கண்டு வருகிறது. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு இந்திய வங்கிப் பங்குகள் மீதான காதலைச் சொல்லத் தேவை இல்லை. ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, கோட்டல் மஹிந்திரா பேங்க், ஆக்ஸிஸ் என இந்தியாவின் மிகப் பெரிய வங்கிகள் அனைத்திலும் இவர்கள் FII-க்கள் தான் அதிகம் முதலீடு செய்திருக்கிறார்கள். ஆக பேங்க் நிஃபிடியில் வரும் இறக்கத்தை ஒரு இறக்கமாகவே கருதாமல் நீண்ட காலத்துக்கு முதலீடு செய்யச் சொல்கிறார்கள்.
டெக்னிக்கல் அனாலிசிஸ்
நிஃப்டி 50-ன் டெய்லி சார்ட்டைப் பார்த்தால் இன்று இறங்கி இருக்கும் இறக்கத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இன்றைக்கு ஒரு பியரிஷ் கேண்டில் வந்திருக்கிறது. ஆனால் வாராந்திர சார்ட்களை கணக்கில் எடுத்துப் பார்த்தால் இந்த வாரத்துக்கு ஒரு டோஜி கேண்டில் தோன்றி இருக்கிறது. ஆக இந்த டோஜி பாயிண்ட் சொல்லும் இடம் 11550.
தாண்ட வேண்டும்
ஆக நிஃப்டி 11550 என்கிற புள்ளியைத் தாண்டி கொஞ்சம் வலுவாக வர்த்தகமானால் தான் இந்த ரெசிஸ்டென்ஸை உடைத்து மேலே வர்த்தகமாகும். இல்லை என்றால் 11550 என்கிற ரெசிஸ்டென்ஸ் புள்ளிக்கு 11400 புள்ளிகள் மற்றும் 11333 புள்ளிகள் வலுவான சப்போர்ட்களாக இருக்கும். இந்த புள்ளிகளுக்கு இடையிலேயே நிறைய பேர் தங்கள் முதலீடுகளை விற்று வெளியேறவும் வாய்ப்ப்பிருக்கிறது. இதனாலும் தான் இந்திய சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.