சென்னை: நடப்பு 2018-19ஆம் நிதியாண்டு முடிவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் வருமான வரி செலுத்தும் வரம்பில் உள்ளவர்கள் வரி சேமிப்புக்கான முதலீடுகளை உடனடியாக செய்வது அவசியமாகும்.
வருமான வரி செலுத்துபவர்கள் அதை தவிர்க்க வரி விலக்கு சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் ரூ.1.50 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலும் முதலீடு செய்தால் வரி செலுத்துவதை தவிர்க்க முடியும்.
நடப்பு நிதியாண்டு முடிவதற்கு 4 நாட்களே உள்ளதால் வரி செலுத்துபவர்கள் உடனடியாக தங்களின் வரி ஆலோசகர்களின் ஆலோசனையைக் கேட்டு உடனடியாக முதலீடு செய்து கடைசி நேர சிரமங்களை தவிர்ப்பது அவசியம்.
அட்வான்ஸ் டாக்ஸ்
வருமான வரி செலுத்துபவர்களை 2 வகையாக பிரிக்கலாம். தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் பிரிவில் உள்ளவர்களின் ஆண்டு வருவாய் நடப்பு 2018-19ஆம் நிதியாண்டில் ரூ.1 கோடிக்கும் கூடுதலாக இருக்கும் பட்சத்தில், ஆண்டு வருவாயை உத்தேசமாக கணக்கிட்டு 4 கட்டங்களாக வருமான வரியை முன்கூட்டியே (Advance Tax) செலுத்திவிடுவது உண்டு.
TDS
மற்றொரு பிரிவினர் மாதச்சம்பளம் வாங்குபவர்கள். மாதச் சம்பளம் வாங்குபவர்கள் தங்களின் ஆண்டு வருவாயை உத்தேசமாக கணக்கிட்டு ஒவ்வொரு மாதமும் தங்கள் சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட தொகையை பிடித்தம் செய்து வேலை செய்யும் நிறவனத்தின் மூலமே முன்கூட்டியே வரியாக (TDS) செலுத்துவதும் வாடிக்கை.
ரூ.2 லட்சம் சேமிக்கலாம்
மாதச் சம்பளம் வாங்குபவர்கள் தங்களின் ஆண்டு வருவாயில் ரூ.2.5 லட்சம் வரையிலும் வரி செலுத்தத் தேவையில்லை. அதற்கு மேற்பட்ட வருமானத்தில் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலும் கழித்தது போகவே மீதம் உள்ள வருமானத்திற்கு மட்டுமே TDS பிடித்தம் செய்வது உண்டு.
வரி விலக்கு முதலீடுகள்
மாதச் சம்பளம் வாங்குபவர்களில் வரி செலுத்தும் பிரிவில் வருபவர்களில் பெரும்பாலானவர்கள் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சத்திற்கும் சேர்த்தே TDS செலுத்துவது வாடிக்கை. ஆனால் சரியான முறையில் வரி விலக்கு சார்ந்த முதலீட்டுத் திட்டங்களில் தங்கள் பணத்தை முதலீடு செய்தால் குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் அது சரியான அறுவடையாக இருக்கும் என்பது உறுதி.
நான்கு நாட்களே
நடப்பு நிதியாண்டு முடிய இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை எந்த முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்பதை பார்க்கலாம். வரி செலுத்தும் வாசகர்கள் அனைவரும் சரியான திட்டங்களில் முதலீடு செய்து தங்களின் பணத்தை பல மடங்காக உயர்த்தலாம்.
வரி விலக்குக்கான நிலையான வைப்புத் திட்டம் (Fixed Deposit)
அனைத்து வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களிலும் 5 வருட நிலையான வைப்புத் திட்டங்களில் ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்து அந்தத் தொகைக்கு கிடைக்கும் வட்டி வருவாய்க்கும் வரி விலக்கு சலுகையை பெறலாம்.
பொது சேமநல நிதி (Public Provident Fund-PPF)
சிறு சேமிப்பு திட்டமான பொது சேமநல நிதி என்னும் PPF திட்டத்தில் முதலீடு செய்யும் போது வருமான வரி சட்டப் பிரிவு 80Cயின் கீழ் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்து அந்தத் தொகைக்கு வரி விலக்கு சலுகை பெறலாம். இத்திட்டத்தில் உள்ள குறைபாடு நாம் செய்யும் முதலீட்டை நினைத்த நேரத்தில் எடுக்க முடியாது. குறைந்த பட்சம் 15 வருடங்கள் கட்டாயம் காத்திருக்க வேண்டும். வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டுக்கும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பங்குச் சந்தை சார்ந்த முதலீடு (ELSS)
இஎல்எஸ்எஸ் திட்டம் (ELSS) அனைத்து மியூச்சுவல் ஃபண்டு (Mutual Fund) நிறுவனங்களும் வழங்கும் ஒரு வரி விலக்கு முதலீட்டுத் திட்டம். இதில் குறைந்த பட்சம் ரூ.500 முதல் முதலீட்டைத் தொடங்கலாம். உச்ச வரம்பு ஏதும் கிடையாது. இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தாலும் அதிகபட்சம் ரூ.1.50 லட்சம் வரை மட்டுமே வரி விலக்கு பெற முடியும். இந்தத் திட்டத்தில் குறைந்த பட்ச காத்திருப்பு காலம் 3 ஆண்டுகள் மட்டுமே. ஆனாலும் கூட, இத்திட்டத்தில் முதலீடு செய்த தொகைக்கு கிடைக்கும் வட்டி வருவாய் மற்ற முதலீட்டு திட்டங்களில் கிடைக்கும் வட்டி வருவாயை விட பல மடங்கு அதிகம். எனவே தான் பெரும்பாலான முதலீட்டாளர்கள் இத்திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள்.
தேசிய சேமிப்புப் பத்திரம் (National Saving Scheme)
அஞ்சல் அலுவலகங்கள் மூலம் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1000 முதல் முதலீடு செய்து அந்தத் தொகைக்கு வரி விலக்கு பெற முடியும். இதில் முதலீடு செய்தால் 5 வருடங்கள் முதல் 10 வருடங்கள் வரை பணத்தைத் திரும்பப் பெற முடியாது. இத்திட்டத்திற்கு வட்டி என்பது ஆண்டுக்கு 8 சதவிகிதம் மட்டுமே. ஆனால் இந்தத் திட்டத்தின் கீழ் முதலீடு செய்து வரும் லாபத்திற்கு வரி செலுத்த வேண்டும் என்பது ஒரு குறைபாடு.
ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (LIC Premium)
ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் (LIC) முதலீடு செய்யும் போதும் வருமான வரி சட்டப் பிரிவு 80C யின் கீழ் வரி விலக்கு பெற முடியும். மேலும் இந்தத் திட்டம் உங்கள் மீது அன்பு செலுத்தும் குடும்பத்தினருக்கும் வாரிசுகளுக்கும் ஆபத்து (RISK) இல்லாத பாதுகாப்பாகவும் இருக்கும்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme)
மேலே குறிப்பிட்ட அனைத்து திட்டங்களில் முதலீடு செய்தால் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை மட்டுமே வரி விலக்கு கிடைக்கும் என்ற நிலையில் கூடுதலாக ரூ.50000 முதலீடு செய்யும் போது அதற்கும் வரி விலக்கைப் பெற முடியும்.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம்
60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இத் திட்டத்தில் ரூ.15 லட்சம் வரை முதலீடு செய்து அந்தத் தொகைக்கு வருமான வரி விலக்குப் பெறலாம். இத்திட்டத்தில் 5 வருடங்களுக்கு முதலீடு செய்த பணத்தைத் திரும்பப் பெற முடியாது. முதலீட்டுத் தொகைக்குக் கிடைக்கும் வட்டி விகித லாபத்திற்கு மட்டும் வரி செலுத்த வேண்டும்.
4 நாட்களுக்குள் முதலீடு
நீங்கள் இதுவரையிலும் மேற்குறிப்பிட்ட திட்டங்களில் முதலீடுகளை செய்யவில்லை என்றால் உங்கள் ஆண்டு வருமானம் வரி விலக்கு உச்ச வரம்பான ரூ.2.5 லட்சத்தை தாண்டும் போது வரி செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். எனவே முடிந்த வரையில் அடுத்த 4 நாட்களுக்குள் முதலீடு செய்வதன் மூலம் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க முடியும்.