சென்னை: வங்கிகளில் இரண்டு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை வைத்திருந்தால் உங்கள் கணக்கில் இருந்து தேவையில்லாமல் வங்கி சேவைக் கட்டணம் பராமரிப்புக் கட்டணம் என்ற பெயரில் பணம் காணாமல் போகும் வாய்ப்புள்ளது.
மூன்றுக்கு மேற்பட்ட கணக்குகளால் அதை பராமரிப்பதற்கான கட்டணத்தை உங்கள் அனுமதி இல்லாமலே உங்கள் கணக்கிலிருந்து வங்கிகள் உருவிக்கொள்ளும் என்பதை நினைவில் வைத்துள்ளவேண்டும்.
நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கான கட்டணத்தையும் வங்கிகள் பிடித்தம் செய்துகொள்ளும், எனவே கூடுமானவரையில் உங்கள் கணக்குகளை 1 முதல் 3 வரையில் வைத்துக்கொண்டால் உங்கள் பணம் பத்திரமாக இருக்கும்.
ரகசிய கணக்கு
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு எதாவது ஒரு தனியார் வங்கியிலோ அல்லது பொதுத்துறை வங்கியிலோ சேமிப்புக் கணக்கு இருக்கும், இன்னும் சிலபேர் 1க்கு மேற்பட்ட வங்கிகளில் மனைவி அல்லது கணவன் மற்றும் குடும்பத்திற்கு தெரியாமல் ரகசியமாக கணக்கு வைத்திருப்பதும் வாடிக்கை. அந்த கணக்குகளில் எல்லாம் குடும்பத்திற்கு தெரிந்தும் தெரியாமலும் பணத்தையும் போட்டு வைத்திருப்பார்கள்.
பணம் காணாமல் போகும்
குடும்பத்திற்கு தெரிந்தும் தெரியாமலும் ரகசியமாக வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் முதலில் அந்த விவரத்தை எல்லாம் கூடுமான வரையில் குடும்பத்திற்கு தெரிவித்துவிடுவது மிகவும் நல்லது. உங்களுக்கு எதிர்பாராத விதமாக ஏதாவது ஒன்று நடந்துவிட்டால், ஒருவேளை நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு தெரியாமல் வைத்துள்ள வங்கிக்கணக்குகளில் லட்சக்கணக்கில் பணத்தை போட்டு வைத்திருந்தால் அது தக்க சமயத்தில் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அந்தப் பணம் ஒன்றுக்கும் உதவாமல் யாருக்கும் பயன்படாமல் போய் சில ஆண்டுகளுக்குப் பின்பு அந்த வங்கிகளின் பொதுக்கணக்கிற்கு மாற்றம் செய்யப்பட்டுவிடும். எனவே நீங்கள் உடனடியாக செய்யவேண்டியது உங்கள் குடும்பத்திற்கு தெரியாமல் ரகசியமாக வைத்திருக்கும் கணக்குகளை குடும்பத்திற்கு தெரியப்படுத்துவது அவசியம்.
நண்பர்கள் நச்சரிப்பு
சில பேர் அந்தஸ்திற்காகவும், வங்கிகளில் வேலை பார்க்கும் நண்பர்கள் அவர்களுடைய மாதாந்திர இலக்குகளுக்ககாவும் (Monthly target) வற்புறுத்தி சேமிப்புக் கணக்கு ஆரம்பிக்கச் சொல்லி நச்சரிப்பார்கள். அவர்களின் நச்சரிப்புக்காகவே வேறு வழி இல்லாமல் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து விடுவார்கள். கணக்கை பூஜை போட்டு தொடங்குவதோடு சரி. அதன் பின்பு அந்த வங்கி இருக்கும் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார்கள்.
கரையான் அரிப்பு
நண்பர்களின் நச்சரிப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்த பணம் எல்லாம் நாளடைவில் குறைந்த பட்ச இருப்புத் தொகை பராமரிப்புக் கட்டணம், எஸ்எம்எஸ் கட்டணம், சேவைக்கட்டணம் என்ற பெயரில் கரையான் அரிப்பது போல் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து காணமல் போய், பின்னர் மைனஸ் இருப்பு நிலைக்கு போய்விடும் அபாயம் உள்ளது. வங்கிகளில் இருந்து நினைவூட்டும் கடிதமோ அல்லது எஸ்எம்எஸ் வந்த பின்பு தான் அந்த வங்கிகளில் கணக்கு வைத்திருப்பது நினைவிற்கு வரும். எனவே எச்சரிக்கையாக இருங்கள். இல்லை என்றால் நீங்கள் எதிர்பாராத தொகையை தண்டமாக அழவேண்டிய நிலை ஏற்படக்கூடும்.
சம்பளக் கணக்கு எத்தனை
மாதச்சம்பளம் வாங்கும் 100க்கு 90 சதவிகிதம் பேர் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களின் மூலம் சம்பளத்திற்காக வங்கிக் கணக்குகளை தொடங்குவோரும் உண்டு. சில பேர் ஒரு வருடத்திற்கு 2 அல்லது 3 நிறுவனங்களுக்கு மாற்றலாகிச் செல்வதும் உண்டு. அப்போது ஒவ்வொரு நிறுவனத்தின் சார்பிலும் புதிதாக வங்கிக் கணக்குகளை தொடங்குவதுண்டு.
குறைந்த பட்ச இருப்பு ரூ.50000
பல்வேறு சூழ்நிலைகளால் 1க்கு மேற்பட்ட வங்கிக் கணக்குளை தொடங்கியதால் அதில் குறைந்த இருப்புத் தொகையாக உள்ள தொகை மட்டும் சுமார் ரூ.50000 வரையிலும் இருக்கக்கூடும். இதனால் உங்களுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் இவ்வளவு தொகையும் தனித்தனியாக வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் உள்ளதால் உங்களுக்குத்தான் நட்டம்.
சேவைக்கட்டணம் ரூ.500
சேமிப்புக் கணக்குகளுக்கு பல்வேறு சேவைக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அதில் முதலாவது குறைந்தபட்ச சராசரி இருப்புத் தொகைக்கு ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.50 முதல் ரூ.500 வரையிலும் கப்பம் கட்டவேண்டும்.
டெபிட் ரேகை
டெபிட் கார்டுகளுக்கு மட்டும் கைரேகை போல் டெபிட் ரேகை மட்டும் இருந்தால் அந்த டெபிட் ரேகை தேய்ந்து காணாமல் போயிருக்கும். சரியான திட்டமிடல் இல்லாமல் ரூ.100க்கும் 200க்கும் டெபிட் கார்டை தேய்த்து பணம் எடுப்பதாலும் சேவைக் கட்டணம் பிடித்தம் செய்யப்படும் என்பது டெபிட் கார்டு பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும்.
டெபிட் கார்டு கட்டணம் ரூ.150
டெபிட் கார்டுகள் மூலம் பணம் எடுக்கும்போது ஒவ்வொரு மாதமும் குறைந்த பட்சமாக 4 பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே கட்டணமில்லா பரிவர்த்தனையாக எடுத்துக்கொள்ளப்படும். அதற்கு அதிகமானால் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறைந்த பட்சமாக ரூ.3 முதல் அதிக பட்சமாக ரூ.150 வரையிலும் சேவைக் கட்டணம் நம் வங்கிக் கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும் என்பதை மறக்கக்கூடாது.
செக்புக் கட்டணம் ரூ.300
பல்வேறு வங்கிகளில் கணக்கு வைக்கும்போது அதற்காக செக் புக்கையும் நாம் வாங்கி வைத்திருப்போம். பால் காரர் முதல் மளிகைக் கடைக்காரர் வரை எதற்கெடுத்தாலும் செக்கை கையெழுத்து போட்டு கிழித்து கொடுப்போம். அந்த வகையில் ஒரு செக் புக்கிற்கு ஆண்டுக்கு சராசரியாக ரூ.300 வரையில் நம் வங்கிக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்படும்.
சரியான திட்டமிடல்
நம்முடைய பணத்தேவையையும், செலவுகளையும்,முதலீடுகளையும் சரியாகத் திட்டமிட்டு அதற்கேற்றவாறு வங்கிக் கணக்குகளை வைத்துக்கொள்வது நல்லது. நாம் 1 முதல் 3 வரை வங்கிக் கணக்குகளை சுருக்கி வைத்துக்கொண்டால் பணமும் சேமிக்கப்படும்.
நம்முடைய அன்றாட செலவுகளுக்கு ஒரு கணக்கையும், எதிர் காலத்திற்கான முதலீடுகளை மேற்கொள்வதற்காக ஒரு கணக்கையும், நம்முடைய முக்கிய வருமானம் மற்றும் சம்பள வரவுகளுக்கு என ஒரு கணக்கையும் வைத்துக்கொண்டு நம்முடைய பணத்தை காப்பாற்றிக்கொள்வது நல்லது. இல்லை என்றால் நம்முடைய வருமானம் முழுவதும் விழலுக்கு இரைத்த நீராக காணாமல் கரைந்து போகும்.