வாசிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மெக்ஸிகோ சுவர் திட்டத்துக்கு 1 பில்லியன் டாலர் ஒதுக்கி இருக்கிறது அமெரிக்காவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கும் பெண்டகன்.
இந்த ஒரு பில்லியன் டாலரில், அமெரிக்காவுக்கும் மெக்ஸிகோவுக்குமான எல்லைப் பகுதிகளில் 92 கிலோமீட்டர் நீளத்துக்கு ஒரு இரும்பு வேலி அமைக்கப் போகிறார்களாம். இந்த வேலியின் உயரம் சுமார் 18 அடி வரை இருக்கும். அதோடு இந்த 92 கிலோமீட்டர் நீளத்துக்கு சாலைகள் மற்றும் விளக்குகள் வரை அமைக்கப் போகிறார்களாம்.
அமெரிக்காவின் உள் துறை அமைச்சகம் (Department of Homeland Security) பெண்டகனையே இந்த கட்டுமானத்தை மேற்கொள்ளுமாறு சொல்லி இருக்கிறார்களாம். இந்த சுவரை அமெரிக்க உள்துறை அமைச்சகத்துக்காகவும், அமெரிக்க சுங்க வரி மற்றும் எல்லை பாதுகாப்பு ரோந்துப் படைகளுக்காகவும் பெண்டகன் மேற்கொள்கிறதாம்.
பெண்டகன்
தற்போது பெண்டகனின் முதன்மை அதிகாரி (பொறுப்பு) பாட்ரிக் சனஹன் (Patrick Shanahan) அமெரிக்க ராணுவத்தின் பொறியாளர் பிரிவின் தலைவருக்கு இந்த 92 கிலோமீட்டர் மெக்ஸிகோ சுவர் கட்டுமானத்துக்கான திட்டங்களை வகுக்கச் சொல்லி இருக்கிறாராம்.
5.7 பில்லியன்
கடந்த பிப்ரவரி 2019-ல் மெக்ஸிகோ சுவர் திட்டத்துக்கு 5.7 பில்லியன் டாலர் நிதி கேட்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு தேசிய எமர்ஜென்சியைக் கொண்டு வந்தார் என்பதும் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது.
அரசு முடக்கம்
பிப்ரவரி 2019-க்கு முன்பு கூட டிசம்பர் 2018 முதல் ஜனவரி 2019 காலங்கள் வரை அமெரிக்க அரசு முன்பே ஒரு முறை முற்றிலும் முடங்கியே இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க வரலாற்றிலேயே அதிக நாள் அமெரிக்க அரசு மூடப்பட்டிருந்தது நம் ட்ரம்பின் டிசம்பர் 2018 - ஜனவரி 2019 காலத்தில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
போதை குறையும்
ட்ரம்பைப் பொறுத்தவரை இந்த சுவர் அமெரிக்காவில் நடக்கும் குற்றங்கள் மற்றும் போதைப் பொருட்கள் வியாபாரங்களை பெரிய அளவில் குறைக்கும் என நம்புகிறார். அதை அவர் பிரச்சாரங்களிலும் மேற் கொள்கிறார்.
வாக்குறுதி
அவ்வளவு ஏன் 2016-ல் அதிபர் தேர்தலில் போட்டி இடும் போது கூட அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவுக்கு இடையில் சுவர் எழுப்புவதை ஒரு பெரிய வாக்குறுதியாகவே முன் வைத்தார் என்பதும் நினைவுக்கு வருகிறது.