கொல்கத்தா: பொருளாதார வளர்ச்சியில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளதாகவும் ஆனால் மோடியும் ஜெட்லியும் 5ஆவது இடத்தில் உள்ளதாக கூறி வருகின்றனர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.
உண்மையில் பிரதமர் மோடிக்கும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்றும் அதிரடியாக கூறியுள்ளார்.
ஐநா பாதுகாப்புக் குழுவில் இந்தியாவிற்கு வழங்கிய நிரந்தர உறுப்பினர் அந்தஸ்தை வேண்டாம் என்று நிராகரித்து சீனாவிற்கு அதை கொடுத்ததற்கு ஜவஹர்லால் நேரு தான் காரணம் என்றும் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்தார்.
5ஆவது இடம்தான்
பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் இந்தியாவை உலகின் பொருளாதார சந்தையின் மையமாக உருவாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறிவருகின்றனர். இந்தியா தற்போது பொருளாதார வளர்ச்சியில் 5ஆவது இடத்தில் உள்ளதாக பூரிப்படைகின்றனர்.
ஜிஎஸ்டி வரி
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை போன்ற அதிரடி நடவடிக்கையின் மூலம் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தி வருவதாகவும், இதன்மூலம் இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் திருப்பி விட்டுள்ளதாகவும் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர்.
3ஆவது இடம்தான்
மோடியும், ஜெட்லியும் போகும் இடமெல்லாம் இப்படி பெருமையாக சொல்லிக்கொண்டு இருக்க, பாஜக ராஜ்யசபா உறுப்பினர் மற்றும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொருளாதார முனைவர் பட்டம் பெற்றவருமான சுப்ரமணியன் சுவாமி, இவர்களின் கூற்றுக்கு மாறாக பற்ற வைத்துக்கொண்டு இருக்கிறார். இந்தியா உலகின் பொருளாதார வளர்ச்சியடைந்த நாடுகளின் வரிசையில் 3ஆவது இடத்தில் உள்ளதாக கூறி அதிர்ச்சியளிக்கிறார்.
பொருளாதாரமா, அப்படின்னா என்ன
உண்மையைலேயே அமெரிக்கா, சீனாவிற்கு அடுத்தபடியாக பொருளாதார பலத்திலும் வளர்ச்சியில் இந்தியா 3ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், பிரதமர் மோடியோ தொடர்ந்து 5 ஆவது இடத்தில் உள்ளோம் என்று கூறிவருகிறார். மேலும் மோடிக்கு பொருளாதாரத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது. அதேபோல் நிதியமைச்சர் ஜெட்லிக்கு பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என்றும் சுப்ரமணியன் சுவாமி போட்டுடைத்தார்.
சுப்ரமணியன் சுவாமி அருள்வாக்கு
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்த ‘ஆனுவல் கொல்கத்தா டயலாக் 2019'(Annual Kolkatta Dialog 2019) நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது. உலகப் பொருளாதாரத்தில் இந்தியா 5வது இடத்தில் உள்ளதாகக் கூறுகின்றனர்.
ஒரே குழப்பமா இருக்கே
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் வாங்கும் சக்தியை வைத்து தான் கணக்கிட வேண்டும். அதைவிடுத்து அந்நிய செலாவணியை வைத்து கணக்கிடுவது தவறு. காரணம் அந்நியச் செலாவணி கையிருப்பு நிலைத்தன்மையற்றது. பொருளாதார வளர்ச்சியைப் பொருத்தவரை உண்மையில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா 3ஆவது இடத்தில் தான் உள்ளது. இருந்தாலும் பிரதமர் மோடி இந்தியா தொடர்ந்து 5ஆவது இடத்தில் உள்ளோம் என்று உண்மையை மாற்றி கூறி வருகிறார்.
7ஆவது இடம்தான்
மோடியும் ஜெட்லியும் சொல்வதைப் போல் அந்தியச் செலாவணி கையிருப்பின் அடிப்படையில் கணக்கிட்டாலும் இந்தியப் பொருளாதாரம் 7ஆவது இடத்தில் தான் இருக்கிறது. காலணி ஆதிக்கத்திற்குப் பிறகு அமெரிக்கா, சீனாவை அடுத்துச் செழிப்பான நாடாகவும் இந்தியா உள்ளது என கடிதம் எழுதியுள்ளேன்.
என்ன நேருதான காரணமா
1950ஆம் ஆண்டு ஐநா பாதுகாப்புக் குழுவில் இந்தியாவிற்கு வழங்கிய நிரந்தர உறுப்பினர் என்ற அந்தஸ்தை வேண்டாம் என்று நிராகரித்து அதை சீனாவிற்கு விட்டுக் கொடுத்ததற்குக் காரணம் ஜவஹர்லால் நேரு தான் காரணம். இரு நாடுகளும் தங்களுக்கு இடையில் உள்ள விரோதப் போக்கிலிருந்து மாறவேண்டும். உலகின் மூன்றில் இரு பங்கு மக்கள் தொகையைக் கொண்ட இரு அண்டை நாடுகளும் பண்டைய மற்றும் வரலாற்று உறவுகளுக்கு திரும்பிச் செல்லவேண்டும் என்றும் சுப்ரமணியன் சுவாமி கூறினார்.