சேலம்: சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மிக முக்கிய தொழில்களில் ஒன்றான வெள்ளித் தொழில் தற்போது, லோக் சபா தேர்தல் காரணமாக பறக்கும் படை மற்றும் போலிசாரால் மிக பாதிப்படைந்துள்ளது.
மாம்பழம் மட்டுமா சேலம்.. இல்லை இல்லை கொலுசுக்கும் தான். சேலத்தில் தயாரிக்கப்படும் கொலுசுகள் மிக தரமான முறையிலும், மேலும் கலை நயத்துடன் இருக்கும் என்பதாலும் நாடு முழுவதும் சேலம் கொலுசுக்கு மவுசு அதிகம். இதனால் நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள் சேலத்தில் வந்து வாங்கி செல்வது வழக்கம்.
தேர்தல் காரணமாக மக்களுக்கு ஓட்டுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பொருட்களை மக்கள் தருதல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக, முறையற்ற ஆதாரம் இல்லாமல் எடுத்துச் செல்லும் பணத்தையும், பொருட்களையும் தேர்தல் பறக்கும்படை போலிசாரல் பறிமுதல் செய்யப்படுகிறது.
தொல்லை தரும் தேர்தல்
இப்படி இருந்து வரும் நிலையில் சேலம் அம்மாபேட்டை, சிவதாபுரம், பனங்காடு, குகை, இளம்பிள்ளை உள்ளிட்ட பல கிராமங்களில் இருந்து எடுத்து வரப்படும் வெள்ளி மற்றும் இத்தொழிலுக்கான பணம் முதலியவை பறிமுதல் செய்யப்படுகின்றன. இதனால் இத்தொழிலாளர்களால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாத பட்சத்தில் வெள்ளி கொலுசு, அரை நாண், மெட்டி போன்ற உற்பத்தி மிக பாதிக்கப்பட்டுள்ளது.
வேலையிழப்பு
சுமார் இதன் மூலம்3 லட்சம் தொழிலாளர்கள் இத்தொழில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு கொலுசு செய்ய குறைந்தபட்சம் 26 நபர்களை கடந்துதான் அதை கொலுசாக செய்ய முடியும். ஆக அந்த 26 நபர்களும் ஒரே இடத்தில் இருப்பர் என்பது சாத்தியமில்லாத விஷயம். மீறி எடுத்துச் செல்லும் வெள்ளி பொருட்களும் பறிமுதல் செய்யப்படுவதால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கும் தொழிலாளர்கள். இதனால் ஏற்கனவே பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவித்து வருகின்றனர்.
பறக்கும் படை
இவ்வாறு பறக்கும் படை மூலம் பறிமுதல் செய்யப்படும் வெள்ளி மற்றும் வெள்ளிப் பொருட்கள் அரசு கருவூலத்தில் வைக்கப்படும் என்று போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் வியாபாரிகளிடம் சரியான ஆதாரம் இருந்தாலும் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதாகவும், பறிமுதல் செய்யப்பட்ட இந்த பொருட்களை தேர்தல் முடிந்து அரசு கரூவூலத்தில் பெற்றுக் கொள்ளலாம் எனவும் போலிஸ் தரப்பில் கூறப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
இப்பவே இப்படின்னா???
தேர்தலுக்கு இன்னும் நாள் இருக்கும் போதே இப்படி என்றால் , இனி நாள் நெருங்க நெருங்க இன்னும் எப்படித்தான் தொழில் செய்வது என்று புலம்பும் வியாபாரிகள் ஒரு புறம், ஏற்கனவே ஜி.எஸ்டியால் மிகவும் நலிவடைந்த வெள்ளி தொழிலில் தற்போது இப்படியொரு தொல்லை எப்போது தீரும் என்று கொட்டித் தீர்க்கின்றனர். முன்னர் 500 முதல் 700 டன் வெள்ளி உற்பத்தி இருந்து வந்த நிலையில் இம்மாதம் 300டன்வாது இருக்குமா? என்பது சாத்தியமா என்று தெரியவில்லை என்கின்றனர்.
வேறு வேலை
இத்தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இதனால் இத்தொழிலாளர்கள் வேறு வேலை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சேலத்தில் கொலுசு தொழில் அழியும் நிலையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் பல கொலுசு பட்டறைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளன. மேலும் வருங்காலத்தில் சேலத்தில் கொலுசு தொழிலுக்கான அடையாளமே இல்லாமல் போய்விடும் என்கின்றனர்.....