மும்பை: 90-ஸ் கிட்ஸ் மற்றும் அவர்களுக்கு முன் பிறந்தவர்களுக்கு வீடு ஒரு மிகப் பெரிய கனவு. நாம் டெம்ப்ளேட்டாக சொல்லும் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்பதில் கூட வீடு முதல் ரக தேவைகளில், மிக மிக அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக இருக்கிறது.
அதுவும் சொந்த வீடு ரொம்பப் பெரிய கனவு. எப்படியாவது வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி ஒரு 600 சதுர அடிக்காவது ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என தனியார் நிறுவனங்களில் ராப் பகலாக உழைக்கும் வர்க்கம் இந்தியாவில் மிக அதிகம்.
எல்லோராலும் வீடு வாங்கி விட முடிகிறதா..? இல்லை. எத்தனையோ பேருக்கு அந்த சொந்த வீட்டுக் கனவை அவர்களின் மகன் மற்றும் மகள்கள் வழியாக எட்டிப் பிடிக்க ஆசைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வாஸ்து சரியில்லை
ஆனால் மகாராஸ்டிரத்தில் ஒருவருக்கு தன் வீட்டின் வாஸ்து சரியில்லை என்பதால் தன் வீட்டை அரசாங்கத்திடமே ஒப்படைத்துவிட்டார் வினோத் ஷேர்க். அப்படி என்ன சரியில்லை, ஏன் வீட்டை அரசாங்கத்திடம் கொடுக்கிறார், இவர் பின்னணி என்ன என்று எல்லாம் பார்த்தால் பல சுவாரஸ்யமான தகவல்கள் வருகின்றன.
சிவ சேனா
வினோத் ஷேர்க், இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையைச் சேர்ந்தவர். இவர் மகாராஷ்டிரத்தின் முக்கிய மாநில கட்சிகளுள் ஒன்றான சிவசேனா கட்சியில் உறுப்பினராகவும் சில சின்ன சின்ன பதவிகளிலும் பொறுப்பிலும் இருக்கிறாராம். அரசியலில் பெரிதாக வளர ஆசை உண்டு.
வீடு எப்படி
2018-ல் மகாராஷ்டிரா வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஒரு லாட்டரிப் போட்டி நடத்தி இருக்கிறது. அந்த போட்டியில் எதிர்பாராத விதமாக (கட்சி நிர்பந்தங்கள் இன்றி) இரண்டு வீடுகள் நம் வினோத்துக்கு கிடைத்தன. இதில் ஒரு வீடு சுமாராக 5 கோடி ரூபாய் மதிப்புள்ளது, இன்னொரு வீடு சுமாராக 5.80 கோடி ரூபாய் மதிப்பு கொண்டது.
விற்க முடியாது
தற்போது இந்த இரண்டு வீட்டில் ரூ.5.80 கோடி மதிப்புள்ள வீட்டில் தான் வாஸ்து சரி இல்லை என விற்கப் பார்த்திருக்கிறார். லாட்டரி மூலம் கிடைத்தது என்றாலும் இந்த வீட்டை விற்க வினோத்துக்கு உரிமை கிடையாதாம். ஆகையால் இந்த வீட்டை விற்பதற்கு பதிலாக, மகாராஷ்டிர அரசின் வீட்டு வசதி ஆணையத்திடமே திருப்பி ஒப்படைத்துள்ளாராம்.
வினோத்
வீட்டை திருப்பி கொடுத்தது ஏன் எனக் கேட்ட போது "எனக்கும் சரி என் குடும்பத்துக்கும் சரி ஜோதிடம் மற்றும் வாஸ்து போன்றவைகளில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. ஆகையால் என்னுடைய குடும்பத்துக்கே நீண்ட நாட்களாக வாஸ்து ஆலோசகராக இருப்பவரை அழைத்து இந்த 5.80 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை விரிவாக்கம் செய்யலாமா எனக் கேட்டேன். அப்போது தான் இந்த வீட்டில் வாஸ்து சரியில்லை என்றார். மேலும், அந்த 5.80 கோடி ரூபாய் வீட்டில் சில மாற்றங்களைச் செய்தால் அரசியலிலும் சரி, சமூக வாழ்விலும் சரி சக்கரவர்த்தியாக வாழலாம் எனச் சொன்னார். (போகிற போக்கில் முதல்வர் கூட ஆகலாம் எனச் சொல்லி இருக்கிறார் போல)" என பிரேக் விடுகிறார். பிறகு ஏன் இந்த 5.8 கோடி ரூபாய் வீட்டில் அந்த மாற்றங்களைச் செய்யாமல் வீட்டை அரசிடம் கொடுக்கிறீர்கள் எனக் கேட்டோம்.
முடியவே முடியாது
அதற்கு "நானும் எப்படியாவது என் வாஸ்து ஆலோசகர் சொன்னது போல அந்த பெரிய (5.8 கோடி ரூபாய் மதிப்புள்ள) வீட்டில் மாற்றங்களைக் கொண்டு வர முயன்றேன். ஆனால், வாஸ்து ஆலோசகர் சொன்ன மாற்றங்களை அந்த வீட்டில் மேற்கொள்ள முடியவில்லை. சொல்லப் போனால் அது அமையவும் இல்லை. அதன்ல் தான் அரசிடம் கொடுத்துவிடுகிறேன்" என்கிறார் வினோத். இந்த வீட்டை நீங்கள் வாழாமல் உங்கள் நெருங்கிய உறவினர்களோ, அம்மா, அப்பாவோ இந்த பெரிய வீட்டில் வாழலாமே எனக் கேட்டோம்.
வேண்டவே வேண்டாம்
மீண்டும் பேசத் தொடங்கிய வினோத் "எனக்கு இந்த வாஸ்து சரி இல்லாத வீட்டில் நானோ, என் குடும்பம் சார்ந்தவர்களோ வாழ்ந்தாலும் எனக்கு அரசியலிலும், சமூக வாழ்விலும் கிடைக்க வேண்டிய பணம், புகழ் கிடைக்காமல் போய்விடும் என்கிற பயம் இருக்கிறது. அதோடு இதை வாடகைக்கு விட்டு வரும் பணத்தை பயன்படுத்தினால் கூட என் நல்ல காலம் இதனால் பறி போகும் என நினைக்கிறேன். ஆகையால் தான் இந்த வீடு எனக்கு வேண்டவே வேண்டாம். என்னைச் சார்ந்தவர்கள் கூட இந்த வீட்டை பயன்படுத்த வேண்டாம் என அரசிடமே ஒப்படைத்திருக்கிறேன்" என்கிறார்.
இன்னொரு வீடு ஓகே
சொல்லி வைத்தாற் போல வினோத் குமாருக்கு தன் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள சின்ன வீட்டில் வாஸ்து ஆலோசகர் சொன்ன வாஸ்து மாற்றங்களை அருமையாகச் செய்ய முடிகிறதாம். செய்தும் விட்டார்களாம். இப்போது அந்த ஒரு மாற்றத்தினாலேயே சில நல்ல விஷயங்கள் தன்னை நோக்கி வருவதாகவே உணர்கிறார்களாம்.
செய்தி உறுதி
இப்படி உண்மையாகவே வினோத் ஷேர்க் தன் வீட்டை அரசிடம் கொடுத்துவிட்டாரா என விசாரித்தால் ஆம் என்கிறார்கள் அரசு அதிகாரிகள். இதைப் பற்றிப் பேசிய வீட்டு வசதித் துறை ஆணைய அதிகாரிகள், ``வினோத் வேண்டாம் எனக் கூறிவிட்டார். இதனால் அந்த வீடு அவருக்கு அடுத்து வெயிட்டிங் லிஸ்டில் இருப்பவருக்குக் கொடுக்கப்படும். அதற்கான பராமரிப்புப் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் வீடு மற்றவருக்குக் கொடுக்கப்படும்" எனக் கூறி இருக்கிறார்கள்.
உலகிலேயே இப்படி இத்தனை மதிப்புள்ள வீட்டை (5.8 கோடி ரூபாய்) வாஸ்து சரி இல்லை. இந்த வீட்டை விட்டு வெளியேறினால் அரசியலில் ஜொலிப்பேன், பணத்தில் புரள்வேன் என எதையோ நம்பி வீட்டை திருப்பிக் கொடுத்த நம் வினோத் ஷேர்கை என்ன சொல்வதென்று தெரியவில்லை. அடுத்த முதல்வருக்கு வாழ்த்துக்கள்.