சென்னை: கடன் வாங்க வேண்டுமா? உங்க சிபில் ஸ்கோர் என்ன? என்பதே முதல் கேள்வியாக உள்ளது. ஆமாம் சார் உங்க சிபில் ஸ்கோர் கொஞ்சம் குறைவா தான் இருக்கு, பார்க்கலாம் இருங்க..... இது போன்ற பதில்களை நம்மில் பலர் கேட்டிருக்கலாம். ஆனால் இன்றளவும் அதை எப்படி பார்ப்பது? எப்படி நம்முடைய ஸ்கோரை அதிகரிப்பது என்று தெரியாமலேயே இருக்கிறோம்.
யாரந்த சிபில்....
சிபில் இந்தியாவில் கடன் பெறுவோர் பற்றிய முதல் தகவல் நிறுவனம் இதுவே. வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் பெருவோர் பற்றிய விபரங்களை ஒவ்வொரு மாதமும் சிபில் நிறுவனத்திற்கு அனுப்படும். ஒருவர் வங்கியில் கடன் பெறுவதற்காக அணுகும்போது முதலில் பார்க்கப்படுவது இந்த சிபில் ஸ்கோரையே.
என்னென்ன விவரங்கள் இருக்கும்?
வங்கியிலோ அல்லது நிதி நிறுவனங்களிலோ வாங்கியுள்ள வீட்டுக் கடன், வாகனக் கடன், பர்சனல் லோன், கிரெடிட் கார்டு, தொழிற் கடன் உள்ளிட்ட பல கடன் சம்பந்தபட்ட அனைத்து விவரங்களும், அதை பெற்றுக் கொண்டவர்களின் விவரங்களும் சிபிலில் இருக்கும். குறிப்பாக வாங்கிய கடன் தொகை, கட்ட வேண்டிய தொகை, எவ்வளவு நாட்களில் கட்டியுள்ளார்கள், சரியான நேரத்தில் கட்டிவிட்டார்களா? கட்டி முடித்து விட்டார்களா இல்லையா? வாராக்கடன் ஏதும் உள்ளதா போன்றவை அடங்கி இருக்கும்.
எவ்வளவு ஸ்கோர் இருக்க வேண்டும்?
சிபில் ஸ்கோர் பொதுவாக 300 முதல் 900 வரை இருக்கும். இதில் 750க்கு மேல் இருப்பவர்கள் கடன் வசதி எளிதில் கிடைக்கும். அதற்கும் கீழ் உள்ளவர்களுக்கு கடன் கிடைப்பது கடினமே, அப்படி கிடைத்தாலும் வட்டி கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.
இந்த சிபில் ஸ்கோரை எப்படி தெரிந்து கொள்ள முடியும்?
சிபில் ஸ்கோரை இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம். இதை பார்க்க ஒவ்வொரு முறையும் ரூ.550 செலுத்த வேண்டியிருக்கும். இதில் உங்கள் கடன் பற்றிய அனைத்து விவரங்களும் சரியாக இருக்கின்றனவா? என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
சிபில் குறைவதற்கான காரணம்?
கிரெடிட் கார்டில் லிமிட்டை தாண்டி 50 சதவிகிதத்திற்கும் மேல் பயன்படுத்துவது, வங்கிகளில் அடிக்கடி கடன் கேட்டு விண்ணப்பிப்பது, வங்கிகளில் செலுத்த வேண்டிய கடன் தொகையை காலம் கடந்து செலுத்துவது உள்ளிட்ட பல காரணங்களுக்காக சிபில் ஸ்கோர் குறைகிறது.
சிபில் ஸ்கோரை அதிகரிப்பது எப்படி?
இது வரை கடன் பெறாதவர்கள் என்றால் அவரவர் வருமானத்தின் அடிப்படையில், வங்கியி சிறிய அளவில் கடன் வாங்கியோ அல்லது கிரெடி வாங்கியோ, அதை சரியான நேரத்தில் கட்ட வேண்டும்.
சில வங்கிகள் தங்களிடம் பிக்சட் டெபாசிட் உள்ளவர்களுக்கு , 70 சதவிகிதம் லிமிட்டுடன் கிரெடிட் கார்டுகளை தருகின்றன. இதில் குறைந்த அளவை செலவளித்து சரியாக செலுத்துவதின் மூலம் ஸ்கோரை அதிகரிக்கலாம்.
வங்கிகளில் நிலுவையில் உள்ள தொகையை கட்டி கடன்களை முழுவதுமாக அடைக்கலாம். குறிப்பாக எந்தவொரு தவணையும் சரியான நேரத்தில் கட்ட வேண்டும்.
சில வங்கிகள் சிபில் ஸ்கோரின் அடிப்படையிலேயே வீட்டுக் கடனுக்கான வட்டியை நிர்ணியிக்கின்றன. ஆக அவ்வப்போது சிபில் ஸ்கோரை பார்த்து உங்களது விவரங்களை சரிபார்த்துக் கொள்வது நல்லதே.