டெல்லி: நடப்பு நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் இதுவரையிலும் ரூ.10.29 லட்சம் கோடியே வசூலாகியுள்ளது. எதிர்பார்த்த இலக்கை எட்ட இன்னும் 2 நாட்களே உள்ளதால் அதற்குள் வரி வசூலை துரிதப்படுத்தும்படி மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரிக்கை மணி அடித்துள்ளது.
கடந்த 2017-18ஆம் நிதியாண்டை விட சுமார் 12.5 சதவிகிதம் கூடுதலாக வசூலாக வரி வசூலானதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
நடப்பு 2018-19ஆம் நிதி ஆண்டின் திருத்தப்பட்ட பட்ஜெட் இலக்கான ரூ.12 லட்சம் கோடியை தொட இன்னும் ரூ.2 லட்சம் கோடி தேவைப்படுவதால் உடனடி நடவடிக்கை எடுத்து வரி வசூலை அதிகரிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பட்ஜெட் மதிப்பீடு
நடப்பு நிதி ஆண்டுக்கான வருமான வரி வசூலானது சுமார் ரூ.12 லட்சம் கோடியாக இருக்க வேண்டும் என்று கடந்த பட்ஜெட் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி ஒவ்வொரு காலாண்டிலும் வருமான வரித்துறை தொழில் துறை மற்றும் வர்த்தகர்களை அறிவுறுத்தி முன்கூட்டி செலுத்தும் வரி வசூலை (Advance Tax) அதிகப்படுத்திக் கொண்டே வந்தனர்.
டிடிஎஸ்(TDS)
வருமான வரித்துறை அறிவுறுத்தலால் நடப்பு நிதியாண்டில் முன்னர் எதிர்பார்த்த வசூல் இலக்கை எட்டக்கூடும் என நடப்பு மார்ச் மாத மத்தியில் மத்திய நேரடி வரிகள் வாரியம் (Central Board of Direct Taxes -CBDT) தெரிவித்தது. அதற்கு ஏற்றார் போல் வருமான வரித்துறையும், நிறுவனங்கள் முன்கூட்டி செலுத்திய வரியை (TDS) உடனடியாக வருமான வரித்துறைக்கு மாற்றமாறு வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
லோக்சபா தேர்தல்
வர்த்தகர்களும் தொழில் நிறுவனங்களும் வரியை முன்கூட்டியே செலுத்தி இருந்தாலும் வரி வசூல் இலக்கை எட்ட முடியவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. ஏனெனில் வரும் ஏப்ரல்-மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால் பணப்பரிமாற்றத்தில் மந்த நிலை இருக்கும். வர்த்தகமும் மந்த கதியிலேயே இருக்கும்.
வசூல் வேட்டை
அரசியல் கட்சிகள் நன்கொடை என்ற பேரில் தேர்தல் நிதி வசூல் வேட்டையில் இறங்கும் என்பதாலும் பெரும்பாலான தொழில் .நிறுவனங்கள் அதற்கு நன்கொடை அழ வேண்டியது இருக்கும். இதன் காரணமாகவும் வரி வசூல் குறைவதற்கு காரணமாக இருக்கும் என்று வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்னும் தேவை 2 லட்சம் கோடி
நடப்பு 2018-19ஆம் நிதியாண்டில் கடந்த செவ்வாய்க்கிழமை (26.03.19) வரையிலும் ரூ.10.29 லட்சம் கோடிதான் வசூலாகி உள்ளது. கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது சுமார் 12.5 சதவிகிதம் கூடுதல் தான். இருந்தாலும் நடப்பு நிதியாண்டின் திருத்தியமைக்கப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின் படி வரி வசூல் சுமார் ரூ,12 லட்சம் கோடியாகும். எதிர்பார்த்த பட்ஜெட் இலக்கை எட்ட இன்னும் ரூ.2 லட்சம் கோடி தேவை. இருப்பதோ இன்னும் 2 வேலை நாட்கள் தான். ஆன்லைனில் வரி கட்ட நான்கு நாட்கள் உள்ளது. இலக்கை எட்ட என்ன செய்வதென்று தெரியாமல் வருமான வரி அதிகாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
85 சதவிகிதம் தான்
நடப்பு நிதியாண்டில் வரி மற்றும் அதற்கான வட்டியுடன் சேர்த்து கூடுதலாக வசூலாகம் என ஆன்லைன் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது. எதிர்பார்த்த மதிப்பீட்டில் கடந்த சனிக்கிழமை மார்ச் 23 வரையிலும் 85.1 சதவிகிதம் வசூலாகி உள்ளதாக வருமான வரித்துறை தலைமை ஆணையர் கடிதம் எழுதியுள்ளார்.
6.9 சதவிகிதம் குறைவு
ஒவ்வொரு பிரிவுகளின் படி மதிப்பீடு(Regular Assessment) செய்ததில் வரி வசூல் சுமார் 6.9 சதவிகிதம் குறைந்துள்ளது. இது கடந்த மார்ச் மத்தியில் எடுக்கப்பட்ட மதிப்பீட்டை விட 1.5 சதவிகிதம் கூடுதல் என்று வருமான வரி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அது வேற இது வேற
வருமான வரித்துறை உயர்அதிகாரிகள் வரி வசூலை அதிகரிப்பது எப்படி என்ற உத்திகளை கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பல வகையிலும் தெரிவித்துள்ளனர். அதன் காரணமாக எதிர்பார்த்த வெற்றி (வரி வசூல்) கிடைக்கும் என்று நினைத்திருந்தனர். இருந்தாலும் வருமான வரி ஆணையம் எதிர்பார்த்த வெற்றி எட்டவில்லை. எதிர்பார்ப்பு மற்றும் உத்திகள் வேறு ஆனால் வசூலான வரிகள் என்பது வேறு நேரடி வரிகள் வாரியம் தத்துவார்த்தமாக விளக்கமளித்தது.