மும்பை: டாடா குழுமம் இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தில் 8,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப் போகிறார்களாம்.
பொதுவாக விமான சேவை நிறுவனங்கள் வைத்திருப்பவர்களை விமான நிலையங்களை பராமரிக்கும் வியாபாரத்திலோ ஒப்பந்தத்திலோ இடம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் அதை எல்லாம் மீறி டாடா குழுமத்துக்கு விமான நிலைய வியாபாரத்தில் இடம் கொடுத்திருக்கிறார்கள்.
ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கத் தான் இந்த 7000 கோடி ரூபாயாம். இப்போது ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை அதன் தாய் நிறுவனமான ஜிஎம்ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் தான் வைத்திருக்கிறார்களாம்.
மீதி 1000 கோடி
மீதமுள்ள 1000 கோடி ரூபாய் பணத்தை ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு இருக்கும் கடன் தொகைகளைத் தீர்க்க பயன்படுத்தப் போகிறார்களாம். இந்த 1000 கோடி ரூபாயை நேரடியாக பணமாக கொடுக்காமல், பங்குகளாக முதலீடு செய்யப் போகிறார்களாம்.
எப்படி முதலீடு
டாடா குழுமம் 44% பணம், சிங்கப்பூரின் சாவரின் வெல்த் ஃபண்ட் நிறுவனம் 33% பணம், ஹாங்காங்கின் எஸ்.எஸ்.ஜி கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட் நிறுவனம் 22% என முதலீடு செய்யும் பணத்தில் பிரித்து பிரித்து முதலீடு செய்யப் போகிறார்களாம்.
கடன் தீரும்
எல்லா நிறுவனங்களைப் போல ஜிஎம்ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கும் தனியாக சுமார் 19,000 கோடி ரூபாய் வரை கடன் இருக்கிறதாம். ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை 7,000 கோடி ரூபாய்க்கு விற்பதால் ஜிஎம்ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்துக்கான கடன் தொகை சுமார் 12,000 கோடி ரூபாயாக குறையுமாம்.
பங்குகள் எவ்வளவு
இந்த முதலீடுகள் எல்லாம் முடிந்த பின்னும் ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் நிறுவன பங்குகளில் 54 சதவிகிதத்தை ஜிஎம்ஆர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனமே வைத்திருக்கும். அதோடு 2% ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் நிறுவன பங்கை அந்த நிறுவனத்தின் தொழிலாளர் நல அமைப்பு வைத்திருக்கும். டாடா குழுமம் 20%, சிங்கப்பூரின் சாவரின் வெல்த் ஃபண்ட் நிறுவனம் 15%, ஹாங்காங்கின் எஸ்.எஸ்.ஜி கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட் நிறுவனம் 10% வைத்திருப்பார்களாம்.
ஜிஎம்ஆர் வியாபாரம்
ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் டெல்லி மற்றும் ஹைதராபாத் விமான நிலையங்களை நடத்தி வருகிறது. அதோடு புதிதாக கோவாவில் இருக்கும் மொபா விமான நிலையம், நாக்பூர் விமான நிலையம், பிலிப்பைன்ஸ் நாட்டில் செபு விமான நிலையம், க்ரீஸ் நாட்டில் க்ரிட் (Crete) விமான நிலையங்களையும் கட்டி வருகிறது.
டாடாவுக்கு எதிர்ப்பு
இந்தியாவில் ஏர் ஏசியா மற்றும் விஸ்தாரா போன்ற விமான நிறுவனங்கள் மூலம் இந்திய ஏர்லைன்ஸ் வியாபாரத்தில் இருக்கும் டாடா நிறுவனம் எப்படி விமான நிலையங்களை நடத்த முடியும் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். இப்படி விமான சேவைகளையும் வழங்கி விட்டு விமான நிலையங்களையும் நடத்துவது டாடாவுக்கு சாதகமான சூழலை உருவாக்குவது போல் இருக்குமே எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள் சில போட்டி நிறுவனங்கள். அதோடு இந்தியாவின் CCI - Competition Commission of India-வின் கவனத்தையும் இது தேவை இல்லாமல் ஈர்க்கும் எனவும் சொல்கிறார்கள்.
டாடா தரப்பு
ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தில் 20% பங்குகள் என்பது ஒரு சின்ன பகுதி (Minority) தான். இந்த 20% பங்குகள் எப்போதுமே பெரிய முடிவுகளை எடுக்க பயன்படுத்திக் கொள்ள முடியாது. இந்திய விமான சேவை நிறுவனங்களில் பணியாற்றும் நிறுவனங்கள் விமான நிலைய நிறுவனங்களில் பெரும் பகுதி (Majority) பங்குகளைத் தான் வைத்திருக்கக் கூடாது என்று தான் சட்டம் சொல்கிறது. விமான நிலைய நிறுவனங்களிலேயே பங்குகள் இருக்கக் கூடாது எனச் சொல்லவில்லை.
இது ஒரு முதலீடு
எனவே இந்த 20% பங்குகளில் முதலீடு செய்வது எந்த விதத்திலும் தவறாகாது எனச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு இந்த 20% முதலீடுகளை வைத்து டாடா குழுமத்தால் விமான நிலைய வியாபாரத்தில் எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுக்க முடியாது என்றும் சொல்லி இருக்கிறார்கள். ஆக இதில் எந்த ஒரு விதி மீறலோ, விமான நிலையங்களை டாடா குழுமத்துக்கு சாதகமாக வளைக்கும் என்கிற குற்றச்சாட்டுகளோ உண்மை இல்லை என மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். இப்போது டாடா குழுமம் நேரடியாக இந்த 20% பங்குகளை நிர்வகிப்பதற்கு பதிலாக டாடா ரியால்டி மற்றும் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தின் மூலம் ஜிஎம்ஆர் ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் 20% பங்குகளை நிர்வகிக்கப் போகிறதாம். ஆனால் இது குறித்து இன்னும் டாடா தரப்பில் இருந்து செய்திகள் வெளியாகவில்லை.