டெல்லி: ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் தரம் குறைவானது என்ற புகாரை அடுத்து வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உணவு வகைகளில் மாற்றம் செய்ய முன்வந்துள்ளது. உணவு வகைகளில் மாற்றம் செய்யப்பட்டாலும் தரம் எப்படி இருக்கும் என்பது பயணிகளின் மத்தியில் கேள்விக்குறியாக உள்ளது.
விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்பட்ட இட்லி, வடை, சாம்பாரில் கரப்பான் பூச்சி மிதப்பதாக எழுந்த புகாரை அடுத்து ஏர் இந்தியா நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
புதிதாக வழங்கப்போகும் உணவு வகைகள் மாற்றப்பட்டாலும் அதன் தரம் கூடுதலாக இருக்குமா அல்லது பழைய பாணியில் இருக்குமா என்பது ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கும் பயணிகளைக் கேட்டால் தெரியும்.
இட்லி வித் கரப்பான் பூச்சி
கடந்த பிப்ரவரி மாதம் போபாலில் இருந்து மும்பைச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் காலை உணவு வழங்கப்பட்டுள்ளது. அதில் ரோஹித் ராஜ்சிங் சவுஹான் என்பவருக்கு வழங்கப்பட்ட இட்லி வடை மற்றும் சாம்பாரில் கரப்பான்பூச்சி மிதந்துள்ளது.
என்ன இப்போ கரப்பான் பூச்சிதானே
இட்லி சாம்பாரில் கரப்பான் பூச்சி மிதப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரோஹித் ராஜ்சிங் சவுஹான் உடனடியாக உணவு வழங்கும் கேர் டேக்கரை அனுகி இது குறித்துப் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் கேர் டேக்கர் அந்தப் புகாரை மறுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துள்ளார்.
ட்விட்டர் பதிவு
கேர் டேக்கரின் அலட்சியத்தால் மிகவும் வருத்தமடைந்த ரோஹித் ராஜ்சிங் சவுஹான் விமானம் தரையிறங்கியதும் உடனடியாக ஏர் இந்தியா தலைமை அதிகாரிக்கு ஆதாரத்துடன் எழுத்து பூர்வமாக புகார்க் கடிதம் கொடுத்துள்ளார். அதன்பிறகும் ஏர் இந்தியா நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், உடனடியாக அவருடைய செல்போன் மூலமாக எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு ஏர் இந்தியா விமானத்தின் டிவிட்டர் பக்கத்தையும் டேக் செய்து 'ஏர் இந்தியா நிறுவனத்தின் சேவை கண்டு தாம் அதிர்ச்சி அடைவதாக வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஏர் இந்தியா வருத்தம்
ரோஹித் ராஜ்சிங் சவுஹானின் ட்விட்டர் பதிவைக் கேள்விப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் மேலாளர் ராஜேந்திர மல்ஹோத்ரா, ரோஹித் ராஜ்சிங் சவுஹானிடம் இருந்து எந்த வித புகார் கடிதமும் வரவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் நடந்து இரண்டு நாள்கள் ஆன நிலையில், தற்போது ஏர் இந்தியா நிறுவனம் தற்போது மன்னிப்புக் கேட்டு வருகிறது. அதில் முதற்கட்ட நடவடிக்கையாக இது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், விழிப்புடன் பணி செய்யாத பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளது.
புத்துணர்ச்சியான உணவு வகைகள்
ஒரு பக்கம் பயணிகளின் எண்ணிக்கை சரிவு, இன்னொரு பக்கம் பயணிகளுக்கு வழங்கும் உணவு வகைகளின் தரம் குறைவு என புகார். வேறு வழி இல்லாத ஏர் இந்தியா நிர்வாகம் பயணிகளுக்கு வழங்கும் உணவு வகைகளில் (Food Menu) மாற்றம் செய்ய முன்வந்துள்ளது. ஒவ்வொரு வேளை உணவையும் புதிது புதிதாக பேக் செய்து சுடச்சுட வழங்க முடிவெடுத்துள்ளது.
தினமும் வெரைட்டி சாப்பாடு
ஏர் இந்தியா விமானங்களின் தனித்துவமே, அதன் கம்பீரமான வடிவம், இருக்கைக்கு கீழே கால் வைப்பதற்கான போதுமான இடவசதி மற்றும் பொருட்களை வைப்பதற்கு போதுமான இடவசதி இவைகள் தான். ஆகவே தான் பயணிகளின் கோரிக்கைக்கு செவி சாய்த்து தினசரி வழங்கும் உணவு மெனு வகைகளில் பழமை மாறாமல் சுடச்சுட வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார், ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் தனஞ்செய் குமார்.
கோடிக்கணக்கில் செலவாகிறது
ஏர் இந்தியா நிர்வாகம் பயணிகளுக்கு வழங்கும் உணவு வகைகளுக்காக ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கின்றது. பயணிகளின் தொடர்ச்சியான புகாரை அடுத்து வரும் ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து புதிய உணவு வகைகளை விமான பயணிகளுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் பயணிக்கும் பயணிகள் ஒவ்வொருவரும் ஒரு திகிலான அனுபவத்தை கதையையும் அவிழ்த்து விடுகிறார்கள்.
கெட்டுப்போன பார்சல்
பயணிகளுக்கு வழங்கும் உணவு வகைகளில் மாற்றம் செய்ய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கதுதான். அதே சமயம் காலையில் விமானத்தில் ஏற்றப்படும் உணவுகளை திரும்ப வரும்பொழுதும் பயணிகளுக்கு வழங்கும்போது அது கெட்டுப்போய்விடுகிறது. காரணம் உயரத்தில் பறக்கும்போது ஏற்படும் அழுத்ததினால் உணவுப்பொருட்கள் விரைவில் கெட்டுப்போய்விடுகின்றன. முதலில் அதற்கு ஏதாவது தீர்வு காணவேண்டும் என்று பெரும்பாலான பயணிகள் விரும்புகிறார்கள்.
20 வருஷமா அதே பார்சல் சாப்பாடுதான்
மும்பை மற்றும் டெல்லிக்கு இடையில் பறக்கும் ஏர் இந்தியா விமானத்தில் கடந்த 20 வருடங்களாக பழைய பாணியிலேயே பயணிகளுக்கு உணவுகளை வழங்கி வருகிறார்கள். விமானங்களில் உள்ள குளிர்சாதன வசதிகளும் சரியான முறையில் பராமரிக்கப்படுவதில்லை. இதனால் பசியோடு வரும் பயணிகள் கெட்டுப்போன உணவுகளைப் பார்க்கும்போது கோபப்படும் நிலை ஏற்படுகிறது என்று போட்டுடைக்கிறார் ஏர் இந்தியா விமான பயணி ஒருவர்.
பீட்ஸாவும் பர்கரும்
ஏர் இந்தியா விமானிகளும் இதே புகாரையே வாசிக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு புகாரை தெரிவிக்கிறோம். ஆனால் இதுவரையிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நாங்கள் ஒவ்வொரு முறையும் புதிதாகவே உணவு வகைகளை ஆர்டர் செய்கிறோம். குறிப்பாக மும்பை மற்றும் டெல்லி விமானங்களில் வழங்கும் உணவுகளை நாங்கள் தொடுவதில்லை.வேறு வழியில்லாததால் வெறும் பீட்ஸாவையும் பர்கரையும் சாப்பிடுகிறோம் என்றார் ஒரு ஏர் இந்தியா விமானி.
அசைவ சாப்பாடு கிடையாது
பயணிகளுக்கு வழங்கும் உணவுக்கான செலவுகளை குறைப்பதற்கு கடந்த 2017ஆம் ஆண்டு முதல் சாதாரண வகுப்பில் பயணம் செய்யும் பயணிகளுக்கு அசைவ உணவுகள் வழங்குவதை நிறுத்திவிட்டது. உயர் வகுப்பில் பயணிக்கும் பயணகளுக்கு மட்டுமே அசைவ உணவு வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.