டெல்லி: மார்ச் 10, 2019 அன்று தேர்தல் தேதிகள் அறிவித்தது தேர்தல் ஆணையம். அதோடு அன்றில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிட்டதாகச் சொன்னது தேர்தல் ஆணையம்.
ஆனால் இதை எல்லாம் கண்டு கொள்வதாக இல்லை மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாரதிய் ஜனதா கட்சி. டெல்லியில் இருந்து உத்தராகண்ட்-க்கு பயணிக்கும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளுக்கு டீ வழங்க பயன்படுத்தப்படும் காகித கப்களில் பாரதிய ஜனதா கட்சியின் 2019 மக்களவைத் தேர்தல் பிரசார வாசகமான "மயின் பீ சவ்கிதார்" "நானும் காவலாளி" என்ற வாசகம் ஹிந்தியில் இடம் பெற்றிருந்தது. நீங்கள் நினைப்பது சரி தான் தேர்தல் விளம்பரத்துக்காக இப்படி செய்திருக்கிறார்கள் நம் சவ்கிதார்கள்.
அப்படி அச்சடிக்கப்பட்ட கப்கள் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவிட்டது. இது தேர்தல் விதிமுறை மீறல் இல்லையா என சமூக வலைதளங்களில் இந்த டீ கப்கள் பெரிய எதிர்ப்பலைகளை எழுப்பிய உடனேயே ரயில்வே நிர்வாகம் பிரச்னையின் தன்மையை புரிந்து கொண்டு உடனடியாக பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார வாசகம் பொறித்துள்ள பேப்பர் கப்களை திரும்ப பெற்றதாக அறிவித்திருக்கிறது.
உள் நோக்கம் இல்லை
பேப்பர் கப்களில் பாரதிய ஜனதா கட்சியின் வாசகம் இடம் பெற்றதில் எந்த ஒரு உள் நோக்கமும் இல்லை. ரயில்வே நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வராமல் இந்த காகித கோப்பைகளை வழங்கிய கேட்டரிங் ஒப்பந்த தாரருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்களாம்.
ஒரு சேவை அமைப்பு
ஒப்பந்த தாரரோ, இந்த பாஜகவின் தேர்தல் வாசகம் பொறித்த காகித கப்களை வழங்கியது சங்கல்ப் என்கிற அமைப்பு தான் என அவர்களும் மீண்டும் சுற்றிவிட்டிருக்கிறார்கள்.
முன் அனுமதி
பொதுவாக ரயில்வே ஒப்பந்ததாரர்கள் உட்பட பயணிகளுக்கு கொடுக்கும் உணவுப் பொருள் பாக்கெட்டுகள், படுக்கை வசதிகளில் எல்லாம் எதையாவது அச்சிட வேண்டும் என்றால் கூட அதற்கு முறையாக ஐஆர்சிடிசி நிர்வாகத்திடம் அனுமதி வாங்க வேண்டுமாம். தேர்தல் நேரத்தில் இப்படி எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் விளம்பரங்களைக் கொண்ட கப்களை கொடுத்ததால் தான் இந்த ஒரு லட்சம் ரூபாய் அபராதமாம்.
எத்தனை முறை
சமீபத்தில் தான் ரயில்வே நிர்வாகம் மோடி படம் போட்டி பயணச் சீட்டுகளை கொடுத்ததற்கு மன்னிப்பு கேட்டு டிக்கேட்டுகளை திரும்ப பெற்றுக் கொண்டது. அதன் பின் ஏர் இந்தியா விமான போர்டிங் பாசில் மோடி படம் போட்டதற்கு பிரச்னை ஆனது. அதையும் ஏர் இந்தியா ஏற்றும் கொண்டு மோடி படம் போட்ட போர்டிங் பாஸ்களை திரும்ப பெற்றுக் கொண்டது. இப்போது மீண்டும் பாஜக தன் ஆக்டோபஸ் கரத்தால் இந்த கேட்டரிங் காண்டிராக்டரை கறை படியச் செய்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
நெட்டிசன்கள்
எப்படி பாஜக இத்தனை இடங்களில் மோசமாக விளம்பரங்களை மேற்கொள்கிறது, ஏன் சவ்கிதார்கள் இப்படி இறங்கிவிட்டார்கள் என சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதரவாளர்கள் ஒரு பக்கம் பலமாக முட்டு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்பாளர்கள் சவ்கிதார்களை ட்ரோல் செய்து கொண்டே இருக்கிறார்கள்.