டெல்லி: உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்து ஏழை மக்களை கடும் சிரமத்திற்கு ஆளாக்கியதைத் தவிர நீங்கள் வேறு என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரமிது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எதிர்பார்த்த நல்ல விளைவு எதுவும் ஏற்படவில்லையே என்று கேள்வி எழுப்பிய அவர், வேலை வாய்ப்பு பற்றிய உண்மையான புள்ளி விவரங்களை மத்திய அரசு வெளியிடத் தயக்கம் காட்டக்கூடாது என்றும் வெளிப்படையாக கூறினார்.
உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பின்னோக்கிப் பார்த்து அதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பதை சிந்திக்க வேண்டும். அது உண்மையில் பயனடைந்ததா அல்லது தோல்வியில் முடிந்ததா அதிலிருந்து கிடைத்த நன்மை தீமைகள் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
செல்லாத நோட்டு அறிவிப்பு
கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாத தொடக்கத்தில் மத்திய அரசு தீடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து நாட்டு மக்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதற்க பதிலாக புதிய வடிவில் 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விட்டது.
ரகுராம் ராஜன்
உயர் பணமதிப்பிழப்பு செய்த நேரத்தில் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் உர்ஜித் பட்டேல். அதற்கு முன்பு ஆளுநராக இருந்தவர் பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜன். இவர் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஆளுநராக நியமிக்கப்பட்டவர் என்பதாலேயே பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் இவரை மாற்ற நினைத்தது.
முட்டல் மோதல்
ரகுராம் ராஜன் ஆளுநராக இருக்கும் வரை பாஜக ஆட்சிக்கு இடைஞ்சலாகவே இருந்து வந்தார். மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதற்கு மறுப்பு சொல்லிவந்தார். இதனால் ரகுராம் ராஜனுக்கும் ஆளும் பாஜகவுக்கும் முட்டல் மோதல் தொடர்ந்து வந்தது.
ஒழிக்க முடியாது
கறுப்பு பணத்தை ஒழிப்பதற்கு உயர் மதிப்புடைய நோட்டுக்களை செல்லாததாக ஆக்க வேண்டும் என்று பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதலே ரகுராம் ராஜனை வற்புறுத்தி வந்துள்ளது. ஆனால் உயர் மதிப்புடைய நோட்டுக்களை செல்லாததாக அறிவித்தால் அதனால் பெரிய மாற்றம் ஒன்றும் நிகழ்ந்து விடாது என்று ரகுராம் ராஜன் தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.
திடீர் ராஜினாமா
மத்திய பாஜக அரசுக்கும் ரகுராம் ராஜனுக்கும் மோதல் போக்கு தொடர்ந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீடீரென இவர் மாற்றப்பட்டு அந்த இடத்திற்கு உர்ஜித் பட்டேல் கொண்டு வரப்பட்டார்.
உர்ஜித் பட்டேல்
ரிசர்வ் வங்கி ஆளுநராக உர்ஜித் பட்டேல் பதவியேற்ற சூட்டோடு 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. உயர் மதிப்புடைய நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் வங்கிகள் மூலம் திரும்பப் பெறப்பட்டது என்று உர்ஜித் பட்டேல் சத்தியம் செய்தார்.
ரிசர்வ் வங்கி இருப்பு
நகமும் சதையுமாக இருந்து வந்த பாஜக அரசுக்கும் உர்ஜித் பட்டேலுக்கும் திடீரென மோதல் ஆரம்பித்தது. காரணம் ரிசர்வ் வங்கி குவித்து வைத்துள்ள கையிருப்பை(Reserve Fund) மத்திய பாஜக அரசு செலவுக்கு கேட்டதுதான். ரிசர்வ் இருப்பு என்பது இக்கட்டான நேரத்தில் எடுத்து பயன்படுத்துவதற்கு மட்டுமே. உலக நாடுகளில் இந்திய ரிசர்வ் வங்கி மட்டுமே இவ்வளவு பெரிய அளவில் கையிருப்பை வைத்துள்ளது.
சக்தி காந்த தாஸ்
ரிசர்வ் வங்கியின் கையிருப்பை கேட்டதால் ஏற்பட்ட மோதல் போக்கு உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்யும் அளவிற்கு போய்விட்டது. இவருக்கு பின்னர் வந்த சக்தி காந்த தாஸ் ஆளுநராக வந்த உடனே போட்ட முதல் கையெழுத்தே ரிசர்வ் வங்கியின் இருப்பு தொகையில் சிறிது எடுத்து மத்திய அரசுக்கு கொடுக்கும் கையெழுத்துதான்.
பொருளாதார பேராசிரியர்
அப்பாடா, நாம் விசயத்திற்கு வருவோம். ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட கையோடு அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியராக வேலை பார்க்கும் ரகுராம் ராஜன் அவ்வப்போது இந்தியாவிற்கு வந்து ஏதாவது கொளுத்திவிட்டுப் போவார். அப்படியே இப்போதும் ஒரு திரியை கொளுத்திப் போட்டுள்ளார்.
மூன்றாவது தூண்
ரகுராம் ராஜன் டெல்லியில் நடைபெற்ற தனது தேர்டு பில்லர் (The Third Pillar) என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசியதுடன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்து ஏழை மக்களை கடும் சிரமத்திற்கு ஆளாக்கியதைத் தவிர நீங்கள் வேறு என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று மத்திய அரசை கேட்டுள்ள முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூடவே மத்திய அரசு தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நேரமிது என்றும் வலியுறுத்தினார்.
சுய பரிசோதனை
தனியார் தொலைக்காட்சி பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த அவர், "உயர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பின்னோக்கிப் பார்த்து அதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம் என்பதை சிந்திக்க வேண்டும். அது உண்மையில் பயனடைந்ததா அல்லது தோல்வியில் முடிந்ததா அதிலிருந்து கிடைத்த நன்மை தீமைகள் என்ன? என சுய பரிசோதனை செய்ய வேண்டும். ஒவ்வொரு அரசும் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று இது" என தெரிவித்தார்.
பொய்யான தகவல்
இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்னை குறித்தும் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார். "நாட்டில் நம்பகத்தன்மை வாய்ந்த வேலைவாய்ப்பு தகவல்கள் தேவைப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம்(EPFO) கொடுக்கும் வேலைவாய்ப்பு தகவல்களை நம்ப முடியாது. வேலைவாய்ப்பு பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பதை நாம் மேம்படுத்த வேண்டும்.
தகவல் அனைத்தும் உண்மையே
வேலைவாய்ப்பு பற்றிய உண்மையான தகவல்களில் மத்திய அரசு மாற்றங்கள் செய்துள்ளதாக பரவலான குற்றச்சாட்டுகள் எழும் இந்த நேரத்தில் எங்கள் நாட்டு தகவல்கள் அனைத்தும் உண்மை தான் என்று இந்த உலகத்திற்கு உணர்த்த வேண்டும். இந்தியாவில் போதிய அளவில் புதிய வேலைகள் உருவாக்கப்படுவதில்லை.
வலிமையான பொருளாதாரம் அவசியம்
நாட்டிலுள்ள வேலைவாய்ப்பின்மை குறித்து நாம் போதிய கவனம் செலுத்தவில்லை என எனக்கு வருத்தமாக உள்ளது. அதற்கு நாம் ஏதாவது செய்தாக வேண்டும். தேசப் பாதுகாப்பிற்கு வலிமையான உள்நாட்டு பொருளாதாரம் மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளார்