சென்னை: சம்பளத்துக்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளியே 6.5 கிலோ தங்கக்கட்டிகளை திருடிக் கொண்டு வட மாநிலம் ஓடிவிட்டாராம்.
சென்னை பூங்கா நகர் பகுதியில் அனுமந்தராயன் தெருவில் ஒரு சிறிய நகைப் பட்டறை நடத்தி வருகிறார் சுகாஷ். இவர் கடையில் சில வருடங்களுக்கு முன் வேலைக்கு வந்தவர் ராகுல்.
படிப்படியாக சுகாஷின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமாகிவிட்டார் ராகுல். ஆக சுகாஷ் ஒரு கட்டத்தில் தன் தங்க வியாபாரத்தில் எல்லா விஷயங்களையும் ராகுல் முன்னிலையிலேயே செய்யத் தொடங்கிவிடார். பல நேரங்களில் தங்க நகைகளை எல்லாம் கூட ராகுலிடம் கொடுத்து தான் டெலிவரி கொடுப்பார்களாம்.
அந்த அளவுக்கு நம்பிக்கை அதிகரித்த பின் தான் இப்படி ஒரு திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார் ராகுல். சில வாரங்களுக்கு முன்பே ராகுல் சுகாஷின் கடையில் புதிதாக நகை செய்ய வாங்கி வைத்திருந்த 6.5 கிலோ தங்கத்தோடு தலைமறை வாகிவிட்டாராம்.
தங்கம் காணவில்லை என்ற உடனேயே ராகுலிடம் விசாரிக்க போன் செய்து போது ராகுலின் போன் சுவிட்ச் ஆஃபிலேயே இருந்திருக்கிறது. இதனால் ராகுல் தான் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டதாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டார் சுகாஷ்.
ஆனால் அப்போதே காவலர்களிடம் போகாமல் கூடுமானவரை தன் நண்பர்கள், சொந்த பந்தங்களை வைத்து விசாரித்திருக்கிறார்கள். கடந்த சில வாரங்களில் ராகுல் கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்ட பின் தான் காவலர்களிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
மார்ச் 25-ம் தேதி தான் முறையாக சென்னை யானைக் கவுனி பகுதி காவல் நிலையத்தில் விஷயத்தை முழுமையாகச் சொல்லி சுகாஷ் புகார் கொடுத்திருக்கிறாராம்.
ராகுலைப் பற்றி சுகாஷிடம் விசாரித்த போது ஆரம்பத்தில் இருந்தே நல்ல பையனாக இருந்ததாகவும், நாளடைவில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்யும் திறமைசாலியாகவும் இருந்தானாம். ஒரு கட்டத்தில் சுகாஷோடு சமமாக வீட்டில் வந்து விருந்து சாப்பிடும் அளவுக்கு ராகுல் மீது நம்பிக்கை வளர்ந்ததாகச் சொல்லி சுகாஷ் வருந்திக் கொண்டிருக்கிறாராம்.
ராகுல் வேலைக்குச் சேரும் போது தான் மகாராஷ்டிரத்தில் இருந்து வருவதாகச் சொல்லி இருக்கிறார். அதனால் சென்னை காவல் துறை மகாராஷ்டிர காவலர்களுக்கும் இந்த விஷயத்தைத் தெரியபடுத்தி இருக்கிறார்களாம்.
ராகுலும் நாளடைவில் தங்க நகைகள் மற்றும் ஆபரணங்கள் நன்றாக செய்யக் கற்றுக் கொண்டுவிட்டாரம். ஆகையால் தனியாக தொழில் செய்யக் கூட திருடி இருக்கலாம் எனவும் காவலர்கள் விசாரித்து வருகிறார்களாம்.