டெல்லி: மத்திய அரசு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வால்நட் (walnut), பாதாம் போன்ற பருப்பு வகைகள் உட்பட 29 பொருட்கள் மீது விதிக்க வேண்டிய கூடுதல் சுங்க வரிகளை வரும் மே 02, 2019 வரை ஒத்தி வைத்திருக்கிறது.
இந்த கூடுதல் சுங்க வரி கடந்த ஜூன் 2018-லேயே விதிக்கப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால் அமெரிக்கா மற்றும் இந்திய அரசு தரப்புகளில் பல கட்டப் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதால் ஒத்துப் போய்க் கொண்டிருக்கிறது.
இந்தியாவும் விட்டுக் கொடுத்து வியாபாரம் செய்ய பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதால் இன்னும் சுங்கவரியை விதிக்காமல் சுமூக வர்த்தக முடிவுகளுக்காக காத்திருக்கிறது.
எதற்கு இந்த வரி
2018-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியப் பொருட்களுக்கு அமெரிக்கா அதிரடியாக கூடுதல் சுங்க வரிகளை விதித்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தான் இந்த 29 அமெரிக்க பொருட்கள் மீது சுங்க வரி விதிக்க தயாரானது இந்தியா.
ஆறு முறையா..?
ஜூன் 2018 தொடங்கி இதுவரை ஆறு முறை மேலே சொன்ன 29 அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கப்பட வேண்டிய வரிகளை விதிக்காமல் இருக்கிறது இந்தியா. அதோடு சமீபத்தில் தான் அமெரிக்கா தன் Generalised System of Preferences (GSP) பட்டியலில் இருந்து இந்தியாவை வெளியேற்றியது.
இறக்குமதி வரி
இந்த Generalised System of Preferences (GSP) பட்டியலில் இருந்து இந்தியாவை வெளியேற்றியதால் மே 02, 2019-ல் இருந்து இந்தியாவும் மற்ற நாடுகளைப் போல அமெரிக்க அரசு சொல்லும் இறக்குமதி வரிகளைச் செலுத்தியே தீர வேண்டும். இதுவரை இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த பொருட்களுக்கு Generalised System of Preferences (GSP)-ன் படி இறக்குமதி வரி செலுத்தத் தேவை இல்லை.
எவ்வளவு விலை
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 1900 பொருட்கள் ஏற்றுமதி ஆகின்றன. சுமார் 560 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது இந்தியா. இதற்கு தற்போது 19 கோடி டாலர் இறக்குமதி வரி செலுத்தாமல் நிம்மதியாக வியாபாரம் செய்கிறது. ஆனால் இந்த Generalised System of Preferences (GSP) தடை அமலுக்கு வந்தால் இந்த 19 கோடி டாலரையும் வரியாகச் செலுத்தியே வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும்.
இந்திய தரப்பு
அமெரிக்காவின் Generalised System of Preferences (GSP) திட்டம் வரும் மே 02, 2019 முதல் அமலுக்கு வர இருப்பதால், இந்தியாவும் மே 02, 2019 வரை தேதியை ஒத்தி வைத்திருக்கிறது. ஆக இந்தியாவுக்கு சாதகமாக இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும் 1. இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியப் பொருட்கள் மீதான வரியை குறைத்துக் கொள்ள வேண்டும். 2. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு Generalised System of Preferences (GSP) முறையில் இறக்குமதி வரி விலக்கு அளிக்க வேண்டும் என முடிவாக இருக்கிறார்கள்.
அமெரிக்க தரப்பு
அமெரிக்க தயாரிப்போ தான் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கான இறக்குமதி வரிகளை குறைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக விவசாயப் பொருட்கள், பால் பொருட்கள், மருத்துவ சாதனங்கள், ஐடி மற்றும் தொலைத் தொடர்பு சாதனங்களைச் சொல்கிறது. ஆனால் இந்தியாவோ மற்ற எல்லாம் கூட ஓகே. ஆனால் ஐடி சார்ந்த பொருட்களில் மட்டும் இறக்குமதி வரிகளை குறைத்துக் கொள்ள முடியாது என ஒற்றைக் காலில் நிற்கிறது.
ஆக இரண்டு பெரிய பொருளாதார சக்திகளும் ஒன்றோடு ஒன்று நேரடியாக மோதிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க சீன வர்த்தகப் போர் அளவுக்கு சண்டை இல்லை என்றாலும் இரு நாடுகளும் தங்கள் வணிகத்தை விட்டுக் கொடுப்பதாய் இல்லை என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.