டெல்லி: உலகின் மிகப் பெரிய ரயில்வே எனப் புகழப்படும் இந்திய ரயில்வேயின் அங்கமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் ரயில்வே மேம்பாட்டுக்கான நிதியைத் திரட்ட பங்குச் சந்தையில் நுழைகிறது.
ரயில் நிகாம் லிமிடெட் நிறுவன பங்குகளின் அறிமுக விலை ரூ.17 முதல் ரூ.19 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி மாலை 3 மணி வரை ஐபிஓ மூலம் இந்த பங்குகளை வாங்க முடியும்.
சிறந்த ஆர்டர்கள், கவர்ச்சிகரமான மதிப்பீடுகள், வலுவான செயல்பாட்டுத் திறமைகள், வலுவான இருப்பு நிலை போன்ற காரணங்களால் இந்த பங்குகளை வாங்கலாம் என்று சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்
500 கோடி மக்கள்
உலகின் மிகப்பெரிய ரயில் சேவையை வழங்கும் நிறுவனம் என்று கொண்டாடப்படும் இந்திய ரயில்வே பிரிட்டிஷ் இந்தியாவில் 1853ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி முதல் முதலில் தனது அதிகார பூர்வ பயணத்தை தொடங்கியது. ஆண்டுக்கு சராசரியாக சுமார் 500 கோடி மக்கள் ரயிலில பயணிக்கிறார்கள்.
யம்மாடி 16 லட்சம் ஊழியர்கள்
இந்திய ரயில்வேயின் சரக்கு ரயில்களின் மூலம் சுமார் 35 கோடி டன் சரக்குகள் இடமாற்றம் செய்யப்படுகின்றது. இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 16 லட்சம் பேர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் அதிக ஊழியர்களைக் கொண்டுள்ள அரசு நிறுவனமும் இந்திய ரயில்வே மட்டுமே.
ரெட் ஹில்ஸ் முதல் சிந்தாதிரிப்பேட்டை
இந்தியாவில் முதல் ரயில் சேவை எங்கு தொடங்கப்பட்டது என்று கேட்டால் சென்னை வாசிகள் காலரை தூக்கி விட்டுக்கொள்ளலாம். ஆம், முதன்முதலில் 1837ஆம் ஆண்டில் செங்குன்றம் (Red Hills) முதல் சிந்தாதிரிப்பேட்டை(Chintadripet) பாரம் வரையில் ஓடியது. இதனால் இந்த ரயில் ரெட் ஹில் ரயில்வே என்று அழைக்கப்பட்டது.
165 ஆண்டு பழசு
சுமார் 165 ஆண்டு பழைமையானது என்று கொண்டாடப்படும் இந்திய ரயில்வே தற்போது ரயில் பாதை அமைத்தல், மின்மயமாக்கள் போன்றவற்றுக்கான நிதியைத் திரட்ட பங்குச் சந்தையில் நுழைகிறது. இந்தியன் ரயில்வேயின் அங்கமான ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் பங்குச் சந்தையில் இறங்கி ஐபிஓ(IPO) மூலம் தேவையான நிதியைத் திரட்ட முன்வந்துள்ளது.
ரூ.481 கோடி திரட்ட முடிவு
பங்குச் சந்தையில் ஐபிஓ மூலம் 25,34,57,280 பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் சுமார் ரூ.481 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. பங்குச் சந்தை மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு ரயில்
பாதைகள் அமைத்தல், ரயில் பாதைகளை மின்மயமாக்கள், மெட்ரோ ரயில் பணிகள், பறக்கும் ரயில் பணிகள், ரயில்வே மேம்பாலங்கள் போன்ற பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.
ஐபிஓ மார்ச் 29 முதல் ஏப்ரல் 3 வரைதான்
ரயில் நிகாம் லிமிடெட் நிறுவன பங்குகளின் அறிமுக விலை ரூ.17 முதல் ரூ.19 வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மார்ச் 29ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி மாலை 3 மணி வரை டிமேட் கணக்கு உள்ளவர்கள் அனைவரும் ஐபிஓ (Initial Public Offer) மூலம் இந்த பங்குகளை வாங்க முடியும், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனம் இந்திய ரயில்வேயின் பொறியியல் பணிகளை கவனித்து வருகிறது.
நம்பி வாங்கலாம்
சிறந்த ஆர்டர்கள் கையிருப்பு, கவர்ச்சிகரமான மதிப்பீடுகள், வலுவான செயல்பாட்டுத் திறன் மற்றும் கட்டமைப்பு, வலுவான இருப்பு நிலை போன்ற காரணங்களால் இந்த பங்குகளை நம்பி வாங்கலாம் என்று பங்குச் சந்தை நிபுணர்களும் தரகர்கள் கூறுகின்றனர்.
பணிகள் தாமதம்
ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் இந்தியன் ரயில்வேயை நம்பியே இயங்கி வருவது, ரயில்வே பணிகளை ஒப்பந்ததாரர்களுக்கு பிரித்து வழங்குவது, மலை ரயில் பணிகளை மேற்கொள்வதில் ஏற்படும் தாமதம், கொல்கத்தா மெட்ரோ பணிகளைத் தாமதமாகச் செய்து வருவது போன்றவை இந்த பங்குகளை வாங்குவதற்கு உள்ள அபாயங்களாக உள்ளது.
நீண்டகால முதலீடு தான்
நீண்ட கால முதலீடுகளைச் செய்ய விரும்புவோர், முதன் முதலில் பங்குச் சந்தையல் நுழைய விரும்புவோர் தாராளமாக இந்த பங்குகளை வாங்கலாம் என்று பங்குச் சந்தை நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
ஐபிஓ (IPO) என்றால் என்ன
ஒரு நிறுவனம் அவர்களுக்கு தேவையான மூலதனத்தை கடன் வாங்காமல் பொதுமக்களையும் தனது நிறுவனத்தில் ஒரு பங்குதாரதாக (Share Holder) சேர்த்துக்கொள்ள முன்வந்து அதற்காக அவர்களிடம் இருந்து பணத்தை பங்குச் சந்தை வழியாக வாங்குவதே ஐபிஓ (Iniial Public offer) எனப்படும் நிறுவனத்தை விரிவுபடுத்த கடனை தவிர்த்து பங்குகளை பொதுவாக வாங்கி விற்கப்படும் இடமே பங்குச்சந்தை (Share Market).
லாபம் வந்தால் விற்கலாம்
பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் பங்குகளை வெளியிட்டு 5 முதல் 7 சந்தை நாட்களுக்குப் பிறகு நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையிலும் (BSE India) தேசிய பங்குச் சந்தையில் (NSE India) பட்டியலிடப்படும். ஐபிஓவில் பங்குகளை வாங்கியவர்கள் பங்குகளை பட்டியலிடப்படும் போது வாங்கிய விலையை விட நல்ல லாபத்தில் விற்பனையானால் தங்களிடம் உள்ள பங்குகளை உடனடியாக விற்றுவிட்டு வெளியேறிவிடலாம்.