டெல்லி: மார்ச் 31ஆம் தேதிக்குள் சம்பள பாக்கி முழுவதையும் தராவிட்டால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போது நிச்சயம் என்று ஜெட் ஏர்வேஸ் பைலட்டுகள் உறுதியாக தெரித்தனர்.
ஜெட் ஏர்வேஸ் விமானங்களை தடை இல்லாமல் நடத்துவதற்கும் சம்பளத்தை தொடர்ந்து வழங்கவும் முறையான திட்டங்களை மார்ச் 31ஆம் தேதிக்குள் வழங்கவும் வலியுறுத்தி உள்ளனர்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தேசிய உள்நாட்டு விமானிகள் குழு கடந்த மார்ச் 20ஆம் தேதியன்று கூடி விவாதித்து சம்பள பாக்கியை தராவிட்டால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் விமானங்களை பறக்க விடமாட்டோம் என்று ஏற்கனவே முடிவெடுத்திருந்தது.
மத்திய அரசு தலையீடு
நாட்டின் மிகப் பெரிய தனியார் துறை விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு தினந்தோறும் ஏதாவது ஒரு விசயத்தில் பிரச்சனை வந்துகொண்டே இருக்குமோ என்னவோ. கடன் பிரச்சனையில் சிக்கி தத்தளித்த போது மத்திய அரசே நேரடியாக தலையிட்டு பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர நினைத்தது. இதனையடுத்து பொதுத்துறை வங்கிகளிடம் பேசி கடன் உதவி அளிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தது.
நரேஷ் கோயல் பதவி விலகவேண்டும்
ஜெட் ஏர்வேஸ் பிரச்சனையில் மத்திய அரசே நேரடியாக தலையிட்டதால் வேறு வழியில்லாத வங்கிகளும், ஜெட் ஏர்வேஸின் நிறுவனத்தின் தலைவரான நரேஷ் கோயல் பதவி விலகினால் தான் கடன் பிரச்சனையை தீர்க்க முடியும் என்று கடன் கொடுத்தவர்களும், ஊழியர்களும் போர்க்கொடி உயர்த்தினர். கூடவே சம்பளம் தராததால் பைலட்டுகள் நிம்மதியாக சந்தோசமாக விமானங்களை இயக்க முடியவில்லை என்று பொறியாளர்கள் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றினர்.
ரூ.1500 கோடி நிதி உதவி
ஊழியர்களின் பயம் மற்றும் மிரட்டலுக்கு பயந்தோ என்னவோ நரேஷ் கோயல் பதவி விலகுவதற்கு முன்வந்தார். ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை காப்பாற்ற தானும் உதவுவதாக ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து வங்கிகள் ரூ,1500 கோடி நிதி உதவி அளிக்க ஒப்புக்கொண்டன. கடன்தாரர்களுக்கு முன் உரிமை தந்து கடன்கள் சிறிது சிறிதாக அடைக்கப்பட்டு வருகின்றன.
சம்பள பாக்கி என்ன ஆச்சி
பிரச்சனைகள் முடிவுக்கு வந்ததாக அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விடும் போது தற்போது ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கி பற்றி எதையும் நிறுவனம் தெளிவாக தெரிவிக்கவில்லை. மேலும் வரும் நாட்களில் பிரச்சனை இன்றி விமானங்களை இயக்குவதற்கான புதிய திட்டங்களையும் எங்களுக்கு தெரிவிக்கவில்லை என்று அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
ஏப்ரல் 1 முதல் ஸ்ட்ரைக் உறுதி
ஜெட் ஏர்வேஸ் விமானிகள் தங்களின் சம்பள பாக்கி முழுவதையும் மார்ச் 29ஆம் தேதிக்குள் வழங்கவில்லை என்றால் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நிச்சயமாக வேலை நிறுத்ததில் ஈடுபடப்போவதாக கூறியிருந்தனர். கெடு முடிந்தும் சம்பளம் வராத காரணத்தால் ஸ்டிரைக் உறுதி என்று கூறியுள்ளனர்.
என்ன திட்டம் இருக்கு
வேலை நிறுத்தம் செய்வது தொடர்பாக ஜெட் ஏர்வேஸ் நிறுவன பைலட்களின் தேசிய உள்நாட்டு விமானிகள் குழு (The National Aviators Guild-NAG) கடந்த மார்ச் 20ஆம் தேதியன்று முடிவெடுத்தது. அப்போதே மார்ச் 29ஆம் தேதிக்குள் சம்பள பாக்கியை அளிப்பதற்கு கெடு விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இனி வரும் காலங்களில் பிரச்சனை இன்றி விமானங்களை இயக்குவதற்கான புதிய திட்டங்களையும் தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் நிபந்ததை விதித்திருந்தனர்
ரூ.250 கோடி என்னாச்சு
பைலட்டுகள் விதித்திருந்த கெடு தேதி தாண்டியும் ஊழியர்களின் சம்பள பாக்கிக்காக எஸ்பிஐ அளிப்பதாக சொன்ன ரூ.250 கோடி இன்னும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு வந்து சேரவில்லை. ஆகவே பைலட்டுகளுக்கான சம்பள பாக்கியையும் தர முடியவில்லை. இதனால் பைலட்டுகள் அதிருப்தி அடைந்தனர்
சமரசம் கிடையாது
பைலட்டுகளின் அதிருப்தியைத் தொடர்ந்து தேசிய உள்நாட்டு விமானிகள் குழு (நாக்) ஏற்கனவே எடுத்த தீர்மானத்தின் படி வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாகவும் இதில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்று NAG தலைவர் கரன் சோப்ரா மார்ச் 29ஆம் தேதி மாலை தனது உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார்.
டாடா பைபை நாங்க லீவுல போறோம்
முன்னதாக பைலட்டுகளில் 200 பேர் ஜெட் எர்வேஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான வினய் துபேக்கு தனித்தனியாக எழுதிய கடிதத்தில் விடுமுறையில் செல்லப்போவதாகவும், சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இதை NAG தலைவரும் உறுதிப்படுத்தினார்.