மும்பை: வோடபோன் ஐடியா நிறுவனமும் ஏர்டெல் நிறுவனமும் Jio நிறுவனம் கைப்பற்ற இருக்கும் இந்திய கிராமங்களில் வாழும் வாடிக்கையாளர்களைக் கைப்பற்ற பெரிய அளவில் திட்டம் தீட்டி வருகிறார்களாம்.
குறிப்பாக வாடிக்கையாளர் மூலம் ஏற்படும் நஷ்டம் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சியைத் தடுக்க திட்டங்கள் தயாராக இருக்கிறதாம்.
இந்தியாவில் அடுத்த சில ஆண்டுகளில் சுமார் 35 கோடி பேர் புதிய டேட்டா பயன்பாட்டாளர்களாக உருவாவார்களாம். அவர்களை எந்த நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களாக வசப்படுத்தி கொள்கிறதோ அந்த நிறுவனம் தான் இந்திய இணைய வெளியின் டானாக ஆளும் என மூன்று நிறுவனமும் தெரிந்தே சண்டைக்கு இறங்கி இருக்கிறார்கள்.
இவர்களுக்குத் தானா..?
இந்த 35 கோடி பேரை பிடிப்பதற்காக தான் ஏர்டெல்லும், வோடாபோன் ஐடியாவும் சேர்ந்து புதிய திட்டங்களைத் தீட்டி இருக்கிறார்களாம். இந்தியாவில் மெட்ரோ மற்றும் டயர் 1 நகரங்களில் சில புதிய கேஷ்பேக் மற்றும் இன்செண்டிவ் ரக திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறார்களாம். ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவன சிம் கார்டுகளை விற்கும் சில்லறை வணிகர்களின் மார்ஜின்கள் வர அதிகரித்திருக்கிறார்களாம். இந்த திட்டங்களுக்கு மட்டும் சுமார் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கிறார்கள்.
ஜியோ அவுட்லெட்
இந்திய கிராமப்புறங்களை கைப்பற்றுவதற்காக ஜியோ கண்ட மேனிக்கு அவுட்லெட்களை கிராமபுறங்களில் திறந்து வருகிறார்களாம். இந்த அனைத்து சில்லறை வணிக அவுட் லெட்டுகளும் சேவை மையங்களாகவும் செயல்பட்டு வருகிறதாம். இப்போதைய நிலவரப்படி ஜியோவுக்கு இந்திய கிராமபுறங்கள் முழுவதும் 7000 அவுட் லெட்டுக்கள் இருக்கின்றனவாம். அடுத்த ஒரு வருடத்திற்குள் இந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக உயரும் என ஜியோவே சொல்லி இருக்கிறதாம்.
என்ன நிலவரம்
ஏர்டெல் நிறுவனம் கடந்த ஜனவரி 2019 நிலவரப்படி 163.12 மில்லியன் வாடிக்கையாளர்களை மட்டுமே கையில் வைத்திருக்கிறது கடந்த அக்டோபர் 2018 நிலவரப்படி ஏர்டெல் நிறுவனத்துக்கு 170 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருந்தார்கள். ஏர்டெல் நிறுவனத்தைப் போலவே வோடஃபோன் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் குறைந்து இருக்கிறது கடந்த அக்டோபர் 2018 நிலவரப்படி 225 மில்லியன் வாடிக்கையாளர்கள் கொண்டிருந்த வோடபோன் இப்போது ஜனவரி 2019-ல் வெறும் 218.5 மில்லியன் வாடிக்கையாளர்களை மட்டுமே வைத்திருக்கிறது.
ஜியோவின் வளர்ச்சி
இந்த மூன்று மாத காலத்தில் ஜியோ நிறுவனம் சுமார் 30 மில்லியன் வாடிக்கையாளர்களை புதிதாக இணைத்துக் கொண்டது. கடந்த அக்டோபர் 2018-ல் 87.2 மில்லியன் வாடிக்கையாளர்களை மட்டுமே வைத்திருந்த ஜியோ ஜனவரி 2019-ல் 107 மில்லியன் வாடிக்கையாளர்களாக உயர்த்திக் கொண்டது.
இதற்கு தான் திட்டம்
இந்த சவாலை எதிர்கொள்ள ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனம் தன் சில்லறை விற்பனையாளர்களின் மார்ஜின் தொகையை 2.25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி இருக்கிறது. ஆக இனி 200 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் சேவையை வழங்கும் சில்லறை விற்பனையாளர்களுக்கு கூட சுமார் ஆறு சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதம் வரை கமிஷன் கிடைக்குமாம்.
டிஸ்ட்ரிபியூட்டர்களை எல்லாம்
ஏர்டெல்லும், வோடாபோன் நிறுவனமும் ஜியோவிடம் பறிகொடுத்த தங்கள் கிராமபுற வாடிக்கையாளர்களை
மீண்டும் கைப்பற்ற பெரிய அளவில் தங்களின் டிஸ்ட்ரிபியூட்டர்களை நம்பி களம் இறங்குகிறதாம். ஜியோவைப் போல கிராமபுறங்களில் இஷ்டத்துக்கு அவுட் லெட்டுகளை திறக்க முடியாததால் ஒரு குடை போட்டு இருசக்கர வாகனத்திலேயே வைத்து சிம்களை விற்கும் டிஸ்ட்ரிபியூட்டர்களை நம்புகிறார்களாம்.
சேவைகளும்
தொலைந்த சிம்களுக்கு பதிலாக புதிய சிம்களை மீண்டும் ஆக்டிவேட் செய்து தருவது, புதிய டேட்டா திட்டங்களை மக்களிடம் சொல்லி விற்பது போன்ற சேவைகளை இனி இந்த ரோட்டு ஓர டிஸ்ட்ரிபியூட்டர்களை செய்து விடுவார்களாம். குறிப்பாக ஒரு மாதத்தில் 100 ஆக்டிவேஷன்களுக்கும் மேல் இருக்கும் இடங்களில் ஒரு டிஸ்ட்ரிபியூட்டர்களை கட்டாயம் நிற்க வேண்டும் என்கிற கணக்கில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
தடுக்கப் படலாம்
ஏர்டெல் மற்றும் வோடஃபோன் நிறுவனத்தின் இந்த நடவடிக்கைகளால் இனி ஜியோ நிறுவனம் தன் இஷ்டத்துக்கு வாடிக்கையாளர்களை பிடிக்க முடியாது அல்லது பிடிப்பது முன்பைப் போல அத்தனை எளிதாக இருக்காது என fitch மதிப்பீட்டு நிறுவனம் சொல்கிறது.
ஒரு நிறுவனம் ஜியோவின் வளர்ச்சியை கேள்விக்குள்ளாக்கினால் மற்றொரு நிறுவனம் ஜியோவின் வளர்ச்சியை தடுக்க முடியாது என நேரடியாகவே ஒரு விஷயத்தை முன்வைக்கிறார் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கேப்பிட்டல் செக்யூரிட்டி நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் துணைத் தலைவராக இருக்கும் ராஜீவ் சர்மா.
எஸ்பிஐ செக்யூரிட்டீஸ்
இனி வரும் காலங்களில் இந்திய டெலிகாம் சந்தையை jio மேலும் கைப்பற்றுவது, சந்தையை இழப்பது இரண்டுமே மக்கள் கையில் இருக்கும் 4ஜி ஸ்மார்ட்போன்களைப் பொறுத்து இருக்கிறது. எவ்வளவு சீக்கிரத்தில் ஏர்டெல்லும் வோடஃபோன் நிறுவனமும் மலிவு விலை ஸ்மார்ட்போன் பயனாளர்களை பிடிக்கிறார்களோ அதைப் பொறுத்து தான் இந்திய டெலிகாம் சந்தையில் வாடிக்கையாளர்களின் வளர்ச்சியும் இருக்கும்.
4ஜி பயனாளர்களைப் பிடிக்க
இப்போது ஒரு கிராமவாசி தன் 2ஜி தொழில்நுட்ப போனில் இருந்து 4ஜி தொழில்நுட்பத்துக்கு மாற குறைந்தபட்சம் 4000 - 5000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டியிருக்கிறது. அதன் பின் தான் எந்த டெலிகாம் சேவையை பயன்படுத்தலாம் என்கிற விஷயத்துக்கே வர முடியும். ஆனால் இந்த 4000 ரூபாயில் ஒரு பகுதியை மட்டும் (1500 ரூபாய்) செலவழித்தாள் கூட jio ஸ்மார்ட் போனுடன் நெட்வொர்க்கே கிடைத்துவிடும் என்று இருக்கும் போது எப்படி ஜியோவைத் தாண்டி ஏர்டெல் மற்றும் வோடாபோனுக்கு வருவார்கள். எனவே கூடிய விரைவில் ஏர்டெல் மற்றும் வோடாபோன் நிறுவனம் ஜியோ போன்களின் விலையில் தங்களுக்கான புதிய ஸ்மார்ட்போன்களோடு வந்தால் தான் இந்த சவாலை முழுமையாக எதிர் கொள்ள முடியும் என்கிறார் ராஜீவ் சர்மா.