டெல்லி: நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா மற்ற இரு பொதுத்துறை வங்கிகளான தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி ஆகியவற்றை தன்னுடன் இணைத்துக்கொண்டு மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக உருவெடுத்துள்ளது.
மூன்று வங்கிகளின் இணைப்பினால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தேனா வங்கி, விஜயா வங்கிக் கிளைகள் அனைத்தும் பேங்க ஆஃப் பரோடா வங்கிக் கிளைகளாவே செயல்படும்.
இந்திய பொதுத்துறை வங்கிகளின் வரலாற்றில் முதல் முறையாக மூன்று வங்கிகள் ஒன்றாக இணைந்துள்ளன. இந்த இணைப்பின் மூலமாக இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய வங்கி என்ற பெருமையை பாங்க் ஆஃப் பரோடா பெற உள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா
பேங்க் ஆஃப் பரோடா 1906ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பழமையான வங்கியாகும். தற்போது இதற்கு உள்நாட்டில் 3386 கிளைகளும் வெளிநாடுகளில் 29 கிளைகளும் உள்ளன. இவ்வங்கியில் சுமார் 55662 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
தேனா வங்கி
தேனா வங்கி 1938ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 1739 கிளைகளுடன் செயல்பட்டுவருகிறது. இவ்வங்கியில் சுமார் 13613 ஊழியர்கள் பணியாற்றுகின்றன.
விஜயா வங்கி
விஜயா வங்கியானது 1931ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வங்கியில் சுமார் 13700 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியா மற்றம் வெளிநாடுகளில் இவ்வங்கி 2136 கிளைகளுடன் செயல்பட்டுவருகிறது.
14 வங்கிகள் அரசுடைமை
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பதை நன்கு உணர்ந்த முன்னால் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1969ஆம் ஆண்டுகளில் தனியார் வசம் இருந்த 14 பெரிய வங்கிகளை அரசுடைமை ஆக்கினார். அந்த வங்கிகளில் பேங்க் ஆஃப் பரோடா வங்கி மற்றும் தேனா வங்கியும் அடங்கும்.
மேலும் 6 வங்கிகள்
இரண்டாவது முறையாக 1980ஆம் ஆண்டில் மேலும் 6 தனியார் வங்கிகள் பொதுத்துறை வங்கிகளாக உருமாற்றம் செய்யப்பட்டன. இதில் விஜயா வங்கியும் அடங்கும். இதனால் நாட்டின் பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது.
பிள்ளையார் சுழி
தனியார் துறை வங்கிகளின் பெருக்கத்தினாலும், தரமான சேவைகளாலும் பொதுத்துறை வங்கிகள் தற்போது வருவாய் இழப்பை சந்தித்து வருகின்றன. இதனை சரிக்கட்ட நட்டத்தில் இயங்கும் வங்கிகளை ஒன்றினைப்பதே சிறந்தது என்று மத்திய ரிசர்வ் வங்கி நினைத்தது. இதற்கு முதல் பிள்ளையார் சுழியாக எஸ்பிஐ வங்கி அதன் துணை வங்கிகளான 5 வங்கிகளை கடந்த 2017ஆம் ஆண்டு தன்னுடன் இணைத்துக் கொண்டது.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
எஸ்பிஐ வங்கியைத் தொடர்ந்து தற்போது பேங்க் ஆஃப் பரோடா வங்கி, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகள் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளன. இம்மூன்று வங்கிகளின் இணைப்பிற்கு மத்திய அமைச்சரவை கடந்த ஜனவரி மாதம் ஒப்புதல் வழங்கியது. இவ்வங்கிகளின் இணைப்பை சுமூகமாக முடிக்க மத்திய அரசு சுமார் 5042 கோடி ரூபாய் மூலதனத்தை பாங்க ஆஃப் பரோடாவிற்கு வழங்குகிறது.
மூன்றும் ஒன்றானது
பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்டதால் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் இம்மூன்று வங்கிகளும் பேங்க் ஆஃப் வங்கியின் பெயரிலேயே செயல்படும். மற்ற இரண்டு வங்கிகளின் கிளைகளும் பேங்க ஆஃப் பரோடாவின் கிளைகளாகவே செயல்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா பங்குகள்
பேங்க ஆஃப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி இம்மூன்றம் இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள். ஆகவே மற்ற இரண்டு வங்கிகளான விஜயா வங்கி பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு 1000 பங்குகளுக்கு 402 பேங்க ஆஃப் பரோடா பங்குகளும், தேனா வங்கி பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு 1000 பங்குகளுக்கு 110 பேங்க ஆஃப் பரோடா பங்குகளும் வழங்கப்படும் என்று தெரிகிறது.
ஊழியர்கள் எதிர்ப்பு
பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகள் ஒன்றிணைக்கப்பட்ட பின்னர் இந்தியாவில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் எண்ணிக்கை 18 ஆக குறைந்துள்ளது. மூன்று வங்கிகள் இணைக்கப்பட்டாலும், மறுபக்கம் இந்திய வங்கிகள் ஊழியர்கள் சங்கங்கள் இந்த வங்கிகள் இணைவால் பலர் வேலை இழக்க நேரிடும் என்று எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.
வழக்கு தள்ளுபடி
வங்கிகள் இணைப்பிற்கு எதிர்ப்பு தெரிவத்து தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளின் ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் கடந்த மார்ச் 28ஆம் தேதி உச்ச நீதமன்றம் அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.