ஈரோடு: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சூரிய ஒளியிலும், அனல்மின் நிலையம் மற்றும் அணுமின் நிலையத்தின் மூலம் மின்உற்பத்தி செய்து வடமாநிலங்களுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக விவசாய நிலங்களின் வழியே உயர் மின்னழுத்த மின்கோபுரத்தை அமைத்து, பல்வேறு மாவட்டங்களின் வழியாக கர்நாடகா, ஆந்திரா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்ல மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்களை அமைக்கவும், இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியிலும் தற்போது ஈடுபட்டுவருகிறது. தமிழகத்தில் ஈரோடு, கோவை, நாமக்கல், திருப்பூர், கரூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், விழுப்புரம், திண்டுக்கல், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட 15 மாவட்டங்களில்விவசாய நிலங்களின் வழியே மின் கோபுரம்அமைக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் விவசாயிகளின் எதிர்ப்பினால் சில மாவட்டங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
2 மாவட்டத்தில்
இதுவரை 13 மாவட்டங்களில் இப்பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 2 மாவட்டத்தில் விவசாயிகளை மிரட்டி மின்கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடுமாவட்டம் அந்தியூர் பகுதியில் நடைபெற்று வரும் மின்கோபுரங்கள் வேலையினால் இடையில் செல்லும் கேபிள்களை அறுத்து விடுவதால் அதையொட்டியுள்ள பல கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் மக்கள் மிக பாதிப்படைகின்றனர். குறிப்பாக அப்பகுதியில் உள்ள சிறு குறு நிறுவனங்கள் வெகுவாக பாதிப்படைகின்றன.
வேலை இல்லை
திரூப்பூர் அருகில் இருப்பதால் அங்கிருந்து ஆர்டர்கள் வாங்கி பல சிறு நிறுவனங்கள் கார்மென்ட்ஸ் வைத்து நடத்தி வருகின்றன. இப்படி அடிக்கடி மின்சாரம் போவதால் சரியான நேரத்திற்கு ஆர்டர்களை டெலிவரி கொடுக்க முடிவதில்லை என்றும். சில சமயங்களில் ஆட்கள்இருந்தாலும் வேலை கொடுக்க முடிவதில்லை என்கிறது இந்த கம்பெனிகள். இதனால் இதைச் சார்ந்துள்ள டைலர்கள், கட்டிங் மாஸ்டர் என அனைவரும் வேலையிழக்கும் சூழ்நிலை நிலவி வருவதாகவும் கம்பெனி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகள்பாதிப்பு
இதோடு அப்பகுதியில் உள்ள மரங்கள் அடியோடு வெட்டி சாய்க்கப்படுகின்றன. மேலும் விவசாயநிலங்களும் ஆக்கிரமிக்கப்படுகின்றன. மேலும் அந்த நிலங்களின் வழியாக பிரமாண்ட ஒயர்களை இழுத்துச் செல்வதன் மூலம் விவசாய நிலங்களில் நடவு செய்யப்பட்டுள்ள பயிர்கள் மிக நாசமடைகின்றன. இதனால் உற்பத்தி மிக பாதிக்கும் எனவும், இனி வரும் காலங்களில் டவர்லைன் அமைத்துள்ள இடங்களில் விவசாயமே செய்ய முடியாது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர். சரியான முறையில் விவசாயம் செய்யப்பட்டிருந்தாலும் கூட சரியான நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடிவதில்லை, அடிக்கடி மின்சாரம் கட்டாகிறது என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
எங்களுக்கு ஒரு நீதியா
கேரளாவில் பூமிக்கடியில் கேபிள் பதித்து தான்மின்சாரத்தை கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இருப்பினும் தமிழ் நாட்டில் இப்படிவிவாசாய நிலங்களை அழிப்பது மனதுக்கு மிக வேதனை அளிக்கிறது. ஏன் கேரளாவுக்கு ஒரு நீதி; தமிழகத்திற்குஒரு நீதியா? தமிழகத்தில் அனைத்து மின் கேபிள்களும் பூமிக்குஅடியில் தான் கொண்டு செல்லவேண்டும் என்பதை வலியுறுத்திஅனைத்து விவசாயிகளும் போராட்டம் நடத்தினால் தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.