டெல்லி: அரசு விநியோகிக்கும் மானியம் இல்லாத எல்பிஜி கேஸ் சிலிண்டர்களின் விலையை இரண்டாவது முறையாக தொடர்ந்து உயர்த்தி இருக்கிறது மத்திய அரசு நிறுவனங்கள்.
மானியமில்லாத 14.2 கிலோ கேஸ் சிலிண்டரின் விலையை மேலும் ஐந்து ரூபாய் உயர்த்தி இருக்கிறார்கள்.
இந்த விலை ஏற்றத்திற்கு பிண் 14.2 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை டெல்லியில் 706.50 ரூபாய்க்கு கிடைக்கிறது
என்ன விலை
மும்பையில் மானியமில்லாத எல்பிஜி சிலிண்டர் விலை 678.50 ரூபாய்க்கும் சென்னையில் 722 ரூபாய்க்கும் கொல்கத்தாவில் 732.50 ரூபாய்க்கும் கிடைக்கிறது. கடந்த மார்ச் 01, 2019 அன்றுதான் மானியம் இல்லாத எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையை 42.5 ரூபாய்க்கு ஒரே அடியாக உயர்த்தினார்கள். அதன்பின் இப்போது மீண்டும் இந்த மாதத்துக்கு ஐந்து ரூபாய் உயர்த்தி இருக்கிறார்கள்.
அரசு திட்டம்
மானியம் உள்ள சிலிண்டர்களின் விலையை ஒவ்வொரு மாதமும் 25 பைசா அதிகரித்து வருகிறது மத்திய அரசு. அதன் படி டெல்லியில் 14.2 கிலோ மானியம் உள்ள கேஸ் சிலிண்டரின் விலை 495.86 ரூபாய்க்கும், கொல்கத்தாவில் 499 ரூபாய்க்கும் மும்பையில் 493.57 ரூபாய்க்கும் சென்னையில் 483.74 ரூபாய்க்கும் மானியம் உள்ள கேஸ் சிலிண்டர் கிடைக்கின்றன.
சந்தை விலை
ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டில் 12 எல்பிஜி கேஸ் சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலைக்கு கொடுக்கப்படும். அதற்கு மேல் ஒரு குடும்பத்திற்கு தேவையான சிலிண்டர்களை சந்தையில் மானியம் இல்லாமல் தான் வாங்க வேண்டி இருக்கும். இன்று வரை கூட்டுக் குடும்பமாக வாழும் பலரும் தங்களுக்கான கேஸ் சிலிண்டர்கள் தீர்ந்த உடன் மானியம் இல்லாத சிலிண்டர்களை சந்தை விலைக்கு வாங்கி பயன்படுத்துபவர்களூம் இந்தியாவில் ஒரு கணிசமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள்.
கச்சா எண்ணெய் பொருட்கள்
எல்பிஜி கேஸ் சிலிண்டர், மண்ணெண்ணெய், விமான எரிபொருள் உட்பட பல்வேறு எரிபொருட்களின் விலையை ஒவ்வொரு மாதத்தின் முதல் தேதியில் சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நிய செலாவணி போன்றவைகளை அடிப்படையாக வைத்து விலை நிர்ணயிக்கிறது மத்திய அரசு. இப்போது ஏப்ரல் மாதத்திற்கான வெளியேற்றத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்.
மண்ணெண்ணெய் விலை
இதில் நியாய விலைக் கடைகளில் ஏழை எளிய மக்கள் கூட வாங்கிப் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கும் விலை ஏற்றம் அறிவித்திருக்கிறார்கள். ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை தற்போது 32.49 ரூபாய்க்கு விற்க தொடங்கி இருக்கிறார்கள் கடந்த மாதம் இந்த விலை 32.24 பைசாவாக இருந்தது.
மானியமில்லா விலை
2016 ஆம் ஆண்டில் தான் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய்யை 64.46 எந்த ஒரு மானியமும் இல்லாமல் விற்கும் வரை ஒவ்வொரு மாதமும் 25 பைசா விலை ஏற்ற தீர்மானம் கொண்டு வந்தார்கள். அதன்படித் தான் மத்திய அரசு இந்த மாதமும் 25 பைசாவை உயர்த்தி இருக்கிறார்கள்.
விமான எரிபொருள்
ஏப்ரல் மாதத்துக்கு விமான எரிபொருளின் விலையை ஒரு சதவிகிதம் உயர்த்தி இருக்கிறார்கள். .தற்போது ஆயிரம் லிட்டர் விமான எரிபொருளின் விலை 63 ஆயிரத்து 472.22 ரூபாய்க்கு விற்று வருகிறார்கள். இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 677.1 ரூபாய் விலை ஏற்றி இருக்கிறார்கள்.
தத்தளிக்கும் விமான நிறுவனம்
கடந்த மார்ச் 2019-ல் விமான எரிபொருளின் விலை ஒரே அடியாக 8.1 சதவீதம் உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. அதாவது 1000 லிட்டர் விமான எரிபொருளின் விலையை 4,734.15 ரூபாய் உயர்த்தினார்கள்.ஏற்கனவே கடனில் தத்தளிக்கும் விமான நிறுவனங்களுக்கு இந்த விலையேற்றம் மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்து கொண்டிருக்கிறது