டெல்லி: 2019 மக்களவைத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே போகிறது. இந்த 2019 மக்களவைத் தேர்தலில் தன் தலைமையிலான காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றால் ஏழைகளுக்கு குறைந்தபட்சமாக மாதம் 6,000 ரூபயை Nyuntam Aay Yojana (NYAY) திட்டத்தின் படி உறுதிசெய்யப்படும் எனச் சொல்லிக் கொண்டிருந்தார் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி.
இந்தியாவில் வாழும் 20 சதவிகித ஏழ்மையான குடும்பங்களுக்கு மட்டும் (வறுமை கோட்டின் கீழ் வாழும் ஏழை குடும்பங்களுக்கு) மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியின் இந்த திட்டம் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் தன் இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்த பிரதான் மந்திரி கிஷான் சம்மன் நிதி திட்டத்தை (ஆண்டுக்கு 6,000 ரூபாய் திட்டம்) விட அதிக பணம் கொடுப்பதாக இருப்பதால் நேரடியாக எதிர்க்கத் தொடங்கியது பாஜக.
இந்த சர்ச்சைகளூக்கு மத்தியில் "நியாய் திட்டத்தின் படி கொடுக்கப்படும் பணம் நேரடியாக குடும்ப பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்" எனச் சொல்லி பாஜகவை மேலும் வெறுப்பேற்றி இருக்கிறார் ராகுல் காந்தி.
தெலுங்கானா மாநிலத்தில் தன் கூட்டணி கட்சிகளுக்காக பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, நியாஇ திட்டத்தைப் பற்றிப் பேசி இருக்கிறார். அதோடு "ஒவ்வொரு மாதமும் குடும்ப பெண்களின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக டெபாசிட் செய்யப்படும். இந்த பணம் இது நாள் வரை எந்த ஒரு அதிகாரமும் இல்லாமல் முடங்கி இருந்த பெண்களின் கையில் அதிகாரம் கொடுத்ததாக இருக்கும்" எனக் கூறியுள்ளார்.
மேலும் மோடியை விமர்சிக்கும் விதத்தில் "நம் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கு 15 லட்சம் ரூபாய் கொடுப்பேன் என ஏமாற்றிவிட்டார். ஆனால் காங்கிரஸ் சொன்ன படி குறைந்தபட்ச வருவாய் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம்" என குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.