நீங்கள் படித்தது சரிதான். Flipkart என்கிற நிறுவனத்தின் பெயருக்கு மட்டும் walmart ஒரு லட்சம் கோடி ரூபாயை கொடுத்திருக்கிறது.
சமீபத்தில் தான் ஃபிளிப்கார்ட்டின் 77 சதவிகித பங்குகளை அமெரிக்காவின் மிகப் பெரிய சில்லறை வணிக நிறுவனமான வால்மார்ட் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.
அந்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாயில், ஒரு லட்சம் கோடி ரூபாயை வெறும் flipkart என்கிற பெயருக்கு மட்டுமே கொடுத்திருப்பதாக வால்மார்ட் நிறுவனம் அமெரிக்க பங்குச் சந்தைகளை நிர்வகிக்கும் US Securities and Exchange Commission-இடம் தெரிவித்திருக்கிறது walmart.
எதற்கு எவ்வளவு
மொத்த ஒரு லட்சத்து 70,000 கோடி ரூபாயில், சுமார் 15,000 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ரொக்கம் சார்ந்த சொத்துக்களுக்கும் (Cash and Cash equivalents), சுமார் 20,000 கோடி ரூபாய் மற்ற தொட்டு உணரக் கூடிய சொத்துக்களுக்கும் (Other Current Assets) சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் தொட்டு உணர முடியாத intangible assets பிரிவில் வரும் சொத்துக்களுக்கும் விலை நிர்ணயித்துக் கொடுத்திருக்கிறார்கள். மீதம் உள்ள ஒரு லட்சம் கோடி ரூபாயை flipkart என்கிற பெயருக்கு மட்டுமே விலைபேசி கொடுத்திருக்கிறது வால்மார்ட்.
ஏன் flipkartக்கு இவ்வளவு விலை
Flipkart என்கிற நிறுவனத்துக்கு இருக்கும் நல்ல பெயருக்கு இத்தனை விலை கொடுத்ததற்குப் பின்னும் ஒரு பெரிய பிசினஸ் இருப்பதாகச் சொல்கிறது வால்மார்ட். குறிப்பாக ஃபிளிப்கார்ட்டின் ஒத்துழைப்போடு வால்மார்ட்டும் இந்தியாவில் வியாபாரத்தை பெருக்குவது, பொருட்களை வாங்குவது மற்றும் போக்குவரத்து பிரச்சனைகளை எதிர்கொள்வது போன்றவைகள் இந்த டீல் மூலம் எளிதாக சாத்தியம் எனக் கணித்து தான் முதலீடு செய்தார்களாம்.
இவ்வளவு தானா..?
Flipkart நிறுவனத்தில் walmart முதலீடு செய்த ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கிய பின் வால்மார்ட்டின் மொத்த சொத்துக்களில் சுமார் 2 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. அதிலும் Flipkart நிறுவனத்தின் பெயருக்கு கொடுத்த ஒரு லட்சம் கோடி ரூபாயை கழித்துக் கொண்டால் மொத்த வால்மார்ட் நிறுவன சொத்துக்களில் வெறும் ஒரு சதவிகிதம் தான் வருகிறதாம்.
விலை அதிகம்
இந்த flipkart வால்மார்ட் நிறுவன இணைப்பைப் பற்றிப் பேசும் பத்திரிக்கைகள் மற்றும் அனலிஸ்டுகள் அனைவருமே walmart நிறுவனத்திற்கு இது ஒரு முக்கியமான டீல் என்பதை மறுக்கவில்லை. அதே நேரத்தில் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் பெயருக்கும், intangible assets-ன் கீழ் இருக்கும் சொத்துக்களுக்கும் கொடுத்த விலை தான் கொஞ்சம் அதிகம் தான் என்றும் சுட்டிக் காட்டுகிறார்கள்.
நேரத்துக்கு ஏற்ற முடிவு
அதோடு கடந்த பத்து வருடங்களில் இந்திய சந்தைகளை கைப்பற்ற செய்ய வேண்டிய விஷயங்களை வால்மார்ட் செய்யவில்லை. அதனால் இப்போது இந்தியாவில் வலுவாக தடம் பதிக்க ஃப்ளிப்கார்டை இவ்வளவு விலை கொடுத்து வாங்கி இருப்பது சரியான, இந்த நேரத்தில் தேவையான, மிக முக்கிய முடிவாக பார்க்கிறார்கள்.
கடுமையான நட்டம்
இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் வால்மார்ட் நிறுவனம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கும்போது கூட பிளிப்கார்ட் நிறுவனத்தின் நிதிநிலை அத்தனை சிறப்பாக இல்லை. சொல்லப் போனால் நஷ்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது.
இப்போதைய டிரெண்டு
இருப்பினும் வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கியதன் முக்கிய நோக்கமே எதிர்காலத்தில் இந்தியாவில் செய்யவிருக்கும் வியாபாரத்தை மனதில் வைத்துக் கொண்டு தான் இந்த பெரிய டீலை முடித்திருக்கிறார்களாம். இப்படி எதிர்கால பிசினசையும் மனதில் வைத்து வாங்கும்போது இதற்கு ஒரு நிறுவனத்தின் பெயருக்கு அதிகவிலை கொடுப்பது இப்போதைய டிரெண்ட் ஆகவே இருக்கிறது என TechLegis Advocates & Solicitors என்கிற நிறுவனம் சொல்கிறது.
அமேஸான் உதாரணம்
அவ்வளவு ஏன் சமீபத்தில் அமேசான் நிறுவனம் whole foods என்கிற நிறுவனத்தை 13 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியது. அதில் 9 பில்லியன் டாலர் அந்த நிறுவனத்தின் பெயருக்காக மட்டுமே கொடுக்கப்பட்டது. ஆக ஒரு நிறுவனத்தின் பெயருக்கு கொடுக்கும் விலை எதிர்கால வியாபாரத்திற்கு எதிர்கால வியாபார வளர்ச்சிக்கும் கை கொடுக்கும் படியாக பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். அதைத்தான் வால்மார்ட்டும் flipkart விஷயத்தில் செய்திருக்கிறது என முடிக்கிறார்கள்.
இப்போது நஷ்டம் தாங்க
எது எப்படியோ. ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தை இப்போது வால்மார்ட் தான் முழுமையாக நடத்தி வருகிறது. இருப்பினும் வால்மார்ட் பொருட்களை எல்லாம் ஃப்ளிப்கார்ட்டில் விற்க முடியாத படிக்கு சில கடுமையான சட்டங்கள் பிப்ரவரி 2019-ல் இருந்து நடைமுறையில் இருப்பதால் மொத்த ஃப்ளிப்கார்ட்டும் நஷ்டத்தில் தான் இயங்கி வருகிறதாம்.
ஆக இப்போது ஒரு லட்சம் கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கிய நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்க முடியாமல் தவிக்கிறது வால்மார்ட்.
பொதுவாக வால்மார்ட் நிறுவனம் தன் சொந்த நாடான அமெரிக்காவிலேயே தனக்கு தேவையான பொருட்களை உலகிலேயே மிகக் குறைந்த விலையில் தயாரிக்க முற்படும். அப்படி முடியாத பட்சத்தில் எந்த நாட்டில் தயாரிக்க முடியுமோ அந்த நாட்டிலேயே ஆலை போட்டு தயாரிக்கத் தொடங்கும். ஆக வால்மார்ட்டுக்கு பொருட்களை விற்க ஒரு பெரிய சந்தை தேவை. தன் பொருட்களை காட்ட ஒரு வலைதளம் தேவை அதனால் தான் ஃப்ளிப்கார்ட்டின் நிதி நிலை மோசமாக இருந்த போதும் நல்ல பிரபலமான பிராண்ட் பெயர் என்பதால் வாங்கியது.